அதிரூபவதிக்கு… (10)

நீ
மண்ணில்
என் பெயரை
எழுதிவிட்டு
சிரித்துக் கொண்டிருக்கிறாய்
நான்
உயிரில்
உன் பெயரை
எழுதிவிட்டு
அழுது கொண்டிருக்கிறேன்

**************

என்
அருகிலேயே
நீ இருக்கிறாய்…
ஏழு கடலையும்
ஏழு மலையையும்
தாண்டி
சொர்க்கம் இருப்பதாய்த்
தவறாய்க் கதை சொன்ன
தமிழ் ஐயாவை
என்ன செய்வது…

***************

உன்
திவ்விய தரிசனத்திற்காக
பவ்வியமாகக்
காத்துக் கொண்டிருக்கிறது…
அடியேனின் உயிர்.
வெட்கத்தால்
நிரம்பியிருக்கும்
உன்
முகத்தைப் போலவே
காதல்
சொர்க்கத்தால்
நிரம்பியிருக்கிறது
என் அகம்.

***************

மழைக்காலங்களில்
உனக்கு
குடை வாங்கித் தரப்
பிரியப்படுகிறது
என் மனசு
ஆனால்
எப்பொழுதும் போலவே
மழையில்
நனையவே
பிரியப்படுகிறது
உன் மனசு!

படம்: நன்றி Wikipedia.

 Romance

About The Author