அனாடமிக் தெரபி (37)

இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி?

இரத்தத்தில் எல்லாப் பொருட்களையும் நல்ல பொருட்களாகத் தேவையான அளவில் வைப்பதே இரத்தத்தை சுத்தம் செய்யும் வழி என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம். இரத்தத்தில் எத்தனை பொருட்கள் இருக்கின்றன, அவை என்னனென்ன என்பதை இப்பொழுது பார்ப்போம்.
இரத்தத்தில் நிறையப் பொருட்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றை ஐந்து வகையாக சுலபமாகப் பிரிக்கலாம்.

நாம் சாப்பிடும் உணவு இரத்தமாக மாறுகிறது என்று பலர் கூறுவார்கள். ஆனால், அப்படிக் கிடையாது. சாப்பிடுகிற உணவு வாயில், வயிற்றில், குடலில் ஜீரணமாகி அதில் உள்ள சத்துப் பொருட்கள் இரத்தத்தில் கலக்கின்றன. இரத்தம் என்பது உணவு மட்டும் கிடையாது. உணவு நேரடியாக இரத்தமாக மாறுவது கிடையாது. உணவு இரத்தத்தில் சில பொருட்களைக் கலக்கிறது. இவை மண் சம்பந்தப்பட்ட பொருட்கள். அதாவது, நாம் சாப்பிடுகிற உணவில் உள்ள சர்க்கரை (glucose), புரதம் (proteins), உயிர்ச்சத்து (vitamins), தாதுப் பொருட்கள் (minerals) போன்றவை மண் சம்பந்தப்பட்ட பொருட்கள் எனப்படும்.

உணவே மருந்து, மருந்தே உணவு என்று கூறுவார்கள். உண்மை! உணவு மருந்தாகச் செயல்படும். ஆனால், உணவு மட்டுமே மருந்தாகச் செயல்படாது. உணவைச் சரியான முறையில் ஜீரணம் செய்வதால் நோய்களைக் குணப்படுத்தலாம். ஆனால், அதனால் மட்டுமே முழுமையாகக் குணப்படுத்த முடியாது. உணவு மட்டுமே மருந்து என்று கூறினால், உணவை மட்டும் சரியாகச் சாப்பிட்டு விட்டு மூக்கை அடைத்து வைத்துக் கொண்டால் உயிரோடு இருக்க முடியுமா? உணவு மூன்று வேளைதான். ஆனால், காற்று 24 மணி நேரமும் சுவாசிக்கிறோம். எனவே, காற்றும் ஒரு மருந்துதான். காற்றில் உள்ள ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற காற்று சம்பந்தப்பட்ட பொருட்கள் மூக்கின் வழியாக நுரையீரலுக்குச் சென்று நுரையீரலிலிருந்து இரத்தத்தில் கலக்கின்றன. காற்று சம்பந்தப்பட்ட பொருட்கள் காற்று வழியாகக் கலக்கின்றன.

நாம் குடிக்கும் நீரில் உள்ள சத்துப் பொருட்களைச் சிறுநீரகம் பிரித்து இரத்தத்தில் கலக்கிறது. இவை நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள். குடிக்கும் தண்ணீரின் மூலமாக இரத்தத்தில் நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் கலக்கின்றன. எனவே தண்ணீரும் மருந்துதான். அதைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.
நான்கு நாள் தூங்காமல் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியுமா? எனவே, தூக்கமும் ஒரு மருந்து. தூக்கத்தின் மூலமாக ஆகாய சக்தி எனப்படும் காலியிடம் இரத்தத்தில் கலக்கிறது.
உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் காலி இடம் இருக்கும். இரும்பில் கூடக் காலியிடம் இருக்கும். ஆனால், கண்ணுக்குத் தெரியாது. அந்த ஆகாய சக்தி என்கிற காலியிடம் நம் இரத்தத்திலும் இருக்கிறது. இது குறையும்பொழுது நமக்குத் தூக்கம் வரும். தூங்கி இது அதிகரித்தால் நமக்கு சக்தி கிடைக்கும். எனவே, தூக்கமும் ஒரு மருந்து. தூங்காமல் உலகத்தில் யாரும் உயிரோடு இருக்க முடியாது. தூக்கத்தின் மூலமாக இரத்தத்திற்கு ஆகாய சக்தி கிடைக்கிறது.
இரத்தத்திற்குச் சூடு தேவைப்படுகிறது. இரத்தம் சூடாக இருந்தால்தான் வீரியம்.

நாம் கை, கால் அசைப்பதன் மூலமாக, உடலில் உள்ள தசைகளுக்கும் எலும்புகளுக்கும் உடல் உழைப்பைக் கொடுப்பது மூலமாக அந்த இயக்கம் வெப்பசக்தியாக மாறி இரத்தத்தில் கலக்கிறது. நாம் உடலில் எந்த அசைவும் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் உடல் முழுவதும் கொப்புளங்களும் புண்களும் வந்து விடும். ஆகவே, உடலில் அசைவுகள் இருக்க வேண்டும்; உழைக்க வேண்டும். நாம் குழந்தையாக இருக்கும்போது ஏன் ஓர் இடத்தில் அமராமல் ‘துறு துறு’வென ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டேயிருக்கிறோம்? இரத்தத்தில் சூடு இருந்தால் நம்மால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்போம். இரத்தத்தில் உள்ள சூடுதான் ஒருவருடைய சுறுசுறுப்புக்கு ஆதாரம்.

‘நீ சின்னப் பையன். இள இரத்தம். இரத்தம் சூடாக இருக்கிறது. அதனால்தான் வேகமாக இருக்கிறாய். அமைதியாக இரு’ என்று கூறுவார்கள். ஆனால், 80, 100 வயது ஆனாலும் இரத்தத்தைச் சூடாக வைத்திருப்பது எப்படி என்ற இரகசிய வித்தை தெரிந்திருந்தால் 100 வயதிலும் நாம் குழந்தையைப் போலச் சுறுசுறுப்பாக இருக்கலாம். ஆக, உடல் உழைப்பு மூலமாக நமது இரத்தத்திற்கு நெருப்பு சக்தி கிடைக்கிறது.

உணவு மூலமாக மண் சம்பந்தப்பட்ட பொருள், குடிநீர் மூலமாக நீர் சம்பந்தப்பட்ட பொருள், மூச்சு வழியாகக் காற்று சம்பந்தப்பட்ட பொருள், தூக்கத்தின் வாயிலாக ஆகாய சம்பந்தப்பட்ட பொருள், உழைப்பின் மூலம் நெருப்பு சம்பந்தப்பட்ட பொருள் ஆகியவை நம் இரத்தத்தில் கலக்கின்றன. ஆக மொத்தம், இரத்தத்தில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என மொத்தம் ஐந்து வகையான பொருட்கள் உள்ளன.

எனவே, நாம் சாப்பிடும் சாப்பாட்டை எப்படி நல்ல முறையில் ஜீரணம் செய்து நல்ல பொருட்களாக இரத்தத்தில் கலக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்வது முதல் இரகசியம்!
குடிக்கும் நீரை எப்படிக் குடித்தால் நீரில் உள்ள பொருட்கள் நல்ல முறையில் ஜீரணமாகி இரத்தத்தில் கலக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது இரண்டாவது இரகசியம்!
சுவாசிக்கும் காற்றை எப்படி சுவாசித்தால் காற்றில் உள்ள பொருட்கள் நல்ல பொருட்களாக இரத்தத்தில் கலக்கும் என்பதை அறிந்து கொள்வது மூன்றாவது இரகசியம்!
நமது தூக்கத்தை எப்படி ஒழுங்கு செய்தால் தூக்கம் மூலமாகக் கிடைக்கும் ஆகாய சம்பந்தப்பட்ட பொருட்கள் நல்ல பொருட்களாக இரத்தத்தில் கலக்கும் என்பதைப் புரிந்து கொள்வது நான்காவது இரகசியம்!

உடல் உழைப்பு நமக்கு எவ்வளவு தேவை, எப்படி உழைக்க வேண்டும் என்பதைக் கற்று, நெருப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை இரத்தத்தில் நல்ல முறையில் எப்படிக் கலப்பது எனத் தெரிந்து கொள்வது ஐந்தாவது இரகசியம்!

இந்த ஐந்து இரகசியங்களைத் தெரிந்து கொண்டு கடைப்பிடித்தால் இரத்தத்தில் எல்லாப் பொருட்களும் நல்ல பொருட்களாக, தேவையான அளவில் இருக்கும்.

அப்படி, இரத்தத்தில் எல்லாப் பொருட்களும் தேவையான அளவில், தரத்தில் இருந்தால் இரத்தம் தானாக ஊறும். நமது உடம்பில் உள்ள எலும்பு மஜ்ஜைகள் அதற்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைத்தவுடன் 48 மணி நேரத்தில் முதல் சொட்டு இரத்தத்தை உருவாக்கும். இப்படி ஒவ்வொரு சொட்டாக உருவாக்க ஆரம்பித்து 120 நாட்களில் உடலில் உள்ள அனைத்து இரத்தத்தையும் மொத்தமாகப் புதிதாக மாற்றி விடும். இப்படி நமது உடலில் உள்ள இரத்தத்தை முற்றிலுமாகத் தூய்மையான வீரியமுள்ள நல்ல இரத்தமாக மாற்றி வைத்தால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் தம் நோயைத் தாமாகவே குணப்படுத்திக் கொள்ளும். உறுப்புகள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளும்.

இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நமது உடம்பில் ஒரு சுரப்பி உள்ளது என்றும், அது சுரக்கும் ஒரு நீரைக் கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம் என்றும் கூறியிருப்போம். அந்தச் சுரப்பியின் பெயர் எலும்பு மஜ்ஜை. அது சுரக்கும் நீரின் பெயர் ‘இரத்தம்’.
இப்படி நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தமாக்குவது மூலமாக அனைத்து நோய்களையும் எந்தவொரு மருந்து, மாத்திரை, மருத்துவர் இல்லாமல் நமக்கு நாமே குணப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த வித்தையைச் செய்வது எப்படி என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம்!…

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author