அனாடமிக் தெரபி (42)

சுவை மருத்துவம் – காரச் சிகிச்சை

காரம் நாக்கில் பட்டதும் நாக்கு அதைக் காற்றுப் பிராணனாக மாற்றி உடல் முழுவதும் பரவச் செய்கிறது. காற்றுப் பிராணன் மூலமாக வேலை செய்யும் உறுப்புகள் நுரையீரல், பெருங்குடல். இதன் வெளி உறுப்பு மூக்கு. இதன் உணர்ச்சி துக்கம்.

மூக்கும் நுரையீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். மூக்கைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் நுரையீரல் போலவும், நுரையீரலைச் சிறிதுபடுத்திப் பார்த்தால் மூக்குப் போலவும் தோன்றும். மூக்குக்கும் நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

அதே போல், பெருங்குடலுக்கும் நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

மலச்சிக்கல் ஒருவருக்கு இருக்குமானால் அவரின் நுரையீரலில் குறை உள்ளது என்று பொருள். அதாவது, அவர் சுவாசிக்கும் காற்றில் குறை உள்ளது என்று அர்த்தம். நுரையீரல் கெட்டுப்போனால் மட்டுமே மலச்சிக்கல் வரும். அதே போல, மலச்சிக்கல் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆஸ்துமா, வீசிங், நெஞ்சுச் சளி போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். ஆக மூக்கு, நுரையீரல், பெருங்குடல் மூன்றுக்கும் தொடர்புள்ளது. மலச்சிக்கலைச் சரி செய்வதன் மூலமாக ஆஸ்துமாவைக் குணப்படுத்தலாம். நுரையீரலுக்குச் சரியான காற்றைக் கொடுப்பதன் மூலமாக மலச்சிக்கல் நோயாளிகளையும் குணப்படுத்தலாம்.

துக்கமான செய்திகளைக் கேட்கும்பொழுது, "ஒரு நிமிடம் மூச்சு பேச்சு இல்லாமல் உறைந்து நின்று விட்டேன்" என்று கூறுவோம். ஏனென்றால், துக்கம் என்ற உணர்ச்சி உடலிலுள்ள காற்றுப் பிராணனை அதிகமாகச் சாப்பிட்டுத் தீர்த்துவிடும்.

சிலருக்குத் தங்களுடைய நெருங்கிய உறவினர்களோ நண்பர்களோ இறந்து விட்டால் அதையே நினைத்து நினைத்து துக்கப்படும்பொழுது அவர்களுக்கு ஆஸ்துமா, வீசிங் நோய்கள் சீக்கிரமாக வந்துவிடும்.

மொத்தத்தில், காரத்திற்கும், காற்றுப் பிராணனுக்கும், நுரையீரலுக்கும், பெருங்குடலுக்கும், துக்கத்திற்கும் சம்பந்தம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சம்பந்தங்களைப் புரிந்து கொண்ட மருத்துவரால்தான் இந்த உறுப்புகளில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும்.
இது போல உறுப்புகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் சம்பந்தம் உள்ளது என்ற விஷயம் தெரியாத மருத்துவர்கள் பல வருடங்களாக மருந்து மாத்திரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் எந்த நோயும் குணமாகாது. ஆஸ்துமா நோயாளிகள், சில சமயங்களில் அதிகப்படியான மூச்சு வாங்கும்பொழுது காரமான ஊறுகாய், குறுமிளகு போன்றவற்றைச் சாப்பிடுவதால் உடனே அவர்களுக்கு அந்த ஆஸ்துமா தீவிரம் குறையும். ஆனால், மலச்சிக்கல் உள்ளவர்களும், ஆஸ்துமா உள்ளவர்களும் காரமான பொருட்களைச் சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். கண்டிப்பாக இது ஒரு தவறான அறிவுரை! யார் நுரையீரலுக்கு அதிகமாக வேலை கொடுக்கிறார்களோ, அவர்களுக்குக் காரம் தேவைப்படும். சொற்பொழிவாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் அதிகமாகப் பேசிக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு நுரையீரலில்தான் அதிக வேலை. எனவே, நுரையீரல் உடலிலுள்ள காற்றுப் பிராணனைத் தீர்த்து விடும். அதனால், அவர்களது நாக்கு என்ற மருத்துவர் காற்றுப் பிராணன் வேண்டி அதிகமாகக் காரத்தைச் சாப்பிடத் தூண்டுவார். எனவே, உங்கள் நாக்கு எவ்வளவு காரம் கேட்டாலும், உங்கள் மனதிற்கு எவ்வளவு பிடித்திருக்கிறதோ அவ்வளவு காரத்தைத் தயவு செய்து சாப்பிடுங்கள்.

மலச் சிக்கலுக்கும் நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமா, வீசிங் நோய்களுக்கும் பாட்டி வைத்தியத்தில் சின்ன வெங்காயம், கருப்பு மிளகு, துளசி இலை, கற்பூரவல்லி இலை, இஞ்சிச் சாறு போன்றவற்றைக் கொடுப்பது வழக்கம். இவை அனைத்தும் காரம் உள்ள பொருட்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்! அதற்காக ஆஸ்துமா, மலச்சிக்கல் உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாகக் காரம் சாப்பிட்டாலும் நோய் பெரிதாகும். அளவாகச் சாப்பிட வேண்டும். அதற்குத்தான் நாம் ஓர் அளவைக் கொடுத்துள்ளோம். உங்கள் நாக்கு எவ்வளவு காரம் தேவைப்படுகிறது என்று கூறுகிறதோ அதுதான் உங்களுக்கு அளவான காரம்.

ஒரே வீட்டில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவு காரம் தேவைப்படும். எனவே, காரம் சாப்பிடுபவர்கள் அனைவருக்கும் நோய் வரும் என்ற எண்ணத்தைத் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்!

அளவாகச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author