அனாடமிக் தெரபி (47)

3. சாப்பிடும்போது கவனம் உணவில் இருக்க வேண்டும்!

சாப்பிடும்பொழுது கவனத்தை உணவில் வைக்க வேண்டும். நாம் சாப்பிடும்பொழுது ‘சாப்பிடுகிறோம்’ என்ற எண்ணத்துடன், உணவில் கவனம் வைத்துச் சாப்பிட்டால், அது நன்றாக ஜீரணம் ஆகும். சாப்பிடும்பொழுது கவனத்தைக் குடும்பம், வியாபாரம் போன்று வேறு ஏதாவது விஷயங்களில் வைத்துக் கொண்டிருந்தால், சரியாக ஜீரணம் ஆகாது.

‘நாம் மூளைக்குத்தானே வேலை கொடுக்கிறோம்? ஜீரணம் வயிற்றில்தானே நடக்கிறது? அது எப்படிப் பாதிக்கும்’ என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். நமது மூளைக்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சுரப்பிகளுக்கும், வேகஸ் என்ற நரம்பு மூலமாக இணைப்பு உள்ளது. நாம் எதைப் பற்றி எண்ணுகிறோமோ அது சம்பந்தப்பட்ட சுரப்பிகளை இந்த நரம்பு சுரக்க வைக்கும்.
உதாரணமாக, நாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் என்ன செய்கிறோம்? உடம்பில் எந்தப் பொத்தானை அழுத்தினால் சிறுநீர் வருகிறது? அதற்கென்று தனியாக எந்த ஒரு பொத்தானும் கிடையாது. மனதால் சிறுநீர் வர வேண்டும் என்று எண்ணியவுடன் வருகிறதல்லவா? எனவே, மனது நினைத்தால் சிறுநீர்ப் பையின் கதவுகளைத் திறக்க முடியும். அதே போல், மனதால் நினைத்தால் கதவை அடைக்க முடியும். இது மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு ரகசியம் என்னவென்றால், மனதால் நினைத்தால் நமது உடல் உறுப்புகளை இயக்க முடியும்.
நோய் முதலில் மனதில்தான் தோன்றுகிறது. பின்னர், மனம்தான் உறுப்புகளுக்கு நோயை உண்டாக்குகிறது. எனவே, நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே உறுப்புகளுக்கு நோய் குணமாகும்.

உதாரணம் – நாம் தூங்கும்பொழுது கனவு காண்கிறோம். கனவில் ஒரு பாம்பு துரத்துவது போலக் காண்கிறோம். கனவில் வேகமாக ஓடுகிறோம். திடீரெனக் கனவு கலைந்து எழுந்து அமர்ந்து பார்க்கும்பொழுது நமது இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டு இருக்கும். படபடவென இருக்கும். உடல் முழுவதும் வியர்வை வந்திருக்கும். நாம் கனவில்தானே ஓடினோம்? பின்னர் ஏன் வியர்வை வந்தது? நெஞ்சு படபடக்கிறது? ஏனென்றால், கனவில் ஓடுவது போல் மனது நினைத்துப் பார்க்கும்பொழுது உடலில் ஓடுவதற்கான சக்தி செலவாகிறது. அதற்கான சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனம் எதைப் பற்றி நினைக்கிறதோ, உடலில் அது சம்பந்தப்பட்ட சுரப்பிகள் சுரக்கும்.

எனவே, உணவை உண்ணும்பொழுது நமது கவனம், எண்ணம், ‘நான் சாப்பிடுகிறேன்’ என்று இருந்தால் மட்டுமே ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்துச் சுரப்பிகளும் நன்றாகச் சுரக்கும். அவ்வாறு இல்லாமல் சாப்பிடும்பொழுது குடும்பம், வியாபாரம், குழந்தை, மனைவி என்று யோசிப்பவர்களுக்கு ஜீரண சுரப்பிகள் சுரக்காததால்தான் நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, தயவு செய்து இனி சாப்பிடும்பொழுது கவனத்தை உணவில் வையுங்கள்!

ஒரு ஞானியிடம் சென்று சிலர் கேட்டார்கள். "ஐயா நோய்களுக்கான காரணம் என்ன” என்று. அந்த ஞானி கூறினார், “சாப்பிடும்பொழுது யாரும் சாப்பிடுவதில்லை" என்று. மீண்டும் கேட்டார்கள். “நோய்களைக் குணப்படுத்துவது எப்படி" என்று. அதற்கு அந்த ஞானி சொன்னார், "சாப்பிடும்பொழுது சாப்பிட்டால் எல்லா நோயும் குணமாகும்" என்று.

சாப்பிடும்பொழுது சாப்பிட வேண்டும் என்றால் என்ன? சாப்பிடும்பொழுது கவனத்தை உணவில் வைக்க வேண்டும். அப்படிக் கவனத்தை உணவில் வைக்கும் எவருக்கும் எந்த நோயும் வருவதில்லை.

எனவே, சாப்பிடும்பொழுது உணவுக்கு மரியாதை கொடுத்து, அந்த உணவை அளித்த கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லி அவரவருக்குத் தெரிந்த ஒரு பிரார்த்தனையைச் செய்து உணவுக்கு மரியாதை கொடுத்துச் சாப்பிட்டால் நோய்கள் குணமாகும். நமது குடும்ப மருத்துவருக்கு மரியாதை கொடுத்தால் நோய்கள் பெரிதாகும். எனவே, மருத்துவருக்கு மரியாதை கொடுப்பதை விட்டுவிட்டு, சாப்பிடும் சாப்பாட்டிற்கு மரியாதை கொடுத்துப் பழகுங்கள்.

உணவு சாப்பிடும்பொழுது, உணவைக் கையில் எடுத்து, இந்த உணவு வயிற்றிற்குள் சென்று ஜீரணமாகி, இரத்தமாக மாறி, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உணவாகவும், அனைத்து நோய்களுக்கும் மருந்தாகவும் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழ முடியும்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author

1 Comment

  1. இரா.அ.பரமன் (அரோமணி)

    சாப்பிடும்பொழுது பேசிக்கொண்டும், டி.வி. பார்த்துக் கொண்டும் சாப்பிடுவதால், நமது உடலில் உள்ள கூடுதலான இரத்தம் மூளைக்குச் சென்றுவிடுகிறது. ஆனால் சாப்பிடும் வேலையைச் செய்யும் உறுப்புகளான கை, வாய், உதடு தொண்டை முதலிய உறுப்புகளுக்கு இரத்தம் போகாத்தால் அவ்வுறுப்புகள் தேய்மானமடைந்து நோய்வாய்ப் படுகின்றன.,

Comments are closed.