அன்புடன் இதயம் (1)

விரல்கள் விரித்து
விரல்கள் கோத்து
விலகா உறவாய்

அன்பே நீயென் உடன் வருவாயா

என் கையளவே நிறைந்த
உன் சந்தோசங்களையும்
உன் கையளவே நிறைந்த
என் சந்தோசங்களையும்
இணைத்த சந்தோசத்தில்
முளைத்த சந்தோசங்கள்
வான்நிறைத்துப் பூப்பதை
வாய்பிளந்து ரசிக்க

அன்பே நீயென் உடன் வருவாயா

கிட்டத்தட்ட நெருக்கமென
கிட்டக்கிட்டக் கிடக்கும்
தண்டவாளத் தொடர்களாய்
நம் இருவர் எண்ணங்களும்
அருகருகே நெருங்கிக் கிடப்பதை
அதிசயமாய்க் கண்டு
அளவற்ற பெருமிதம் கொள்ள

அன்பே நீயென் உடன் வருவாயா

முகமூடி உடுத்தாத
சத்திய முகங்களுடன்
சுத்த பாவங்களை மட்டுமே
சத்தமாய்க் காட்டி
என்றும் நிலைக்கும்
நிதர்சனம் தழுவ

அன்பே நீயென் உடன் வருவாயா

‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து

To buy this EBook, Please click here

About The Author