அல்வாக்கள் பலவிதம் (2)

3. மைதா மாவு அல்வா

தேவையான பொருட்கள்:

மைதா – 200 கிராம்
சீனி – 600 கிராம்
ஏலக்காய் – 8
முந்திரி – 8
நெய் – 200 கிராம்
கேசரித் தூள் – சிறிதளவு.

செய்முறை:

சலித்த மாவை 3 கப் நீர் விட்டுக் கரையுங்கள். கேசரித் தூளையும் சேர்த்துக் கரையுங்கள். பிறகு, அதை 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின், வாணலியில் சர்க்கரையைச் சிறிது நீர் ஊற்றிக் கரைத்துக் கம்பிப் பாகு எடுங்கள். பாகில் பால் விட்டுச் சீனியின் கசடுகளை நீக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் மைதாக் கரைசலைச் சேர்த்துக் கிளறுங்கள். இடையிடையே நெய்யைச் சிறிது சிறிதாக விட்டுக் கிளறிக்கொண்டே இருங்கள்.பிறகு ஏலப்பொடியைத் தூவுங்கள். வாணலியில் ஒட்டாமல் நெய் வெளிவரும்பொழுது, அல்வா சுருண்டு வருகையில் நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்தி, சீவிய முந்திரித் துண்டுகளால் அலங்கரியுங்கள். அசத்தும் மைதா அல்வா தயார்!

4. மைதாப் பால் அல்வா (2)

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 200 கிராம்
பால் – 600 மில்லி
சர்க்கரை – 600 மில்லி
முந்திரி – 8
ஏலப்பொடி – அரைத் தேக்கரண்டி
நெய் – 200 கிராம்
கேசரித் தூள் (அ) ரோஸ் பவுடர் – சிறிது
வெள்ளரி விதை – 2 தேக்கரண்டி

செய்முறை:

மைதாவைப் பாலில் கரைத்துக் கொள்ளுங்கள். பிறகு, ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். பின், அடி கனமான ஓர் உருளியில் (பாத்திரத்தில்) சர்க்கரையைச், சிறிது நீர் சேர்த்துப் பாகு வையுங்கள். பாகில் பால் சேர்த்துச் சீனியின் கசடுகளை நீக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, மைதா மாவுப் பால் கலவையில் தேவையான ரோஸ் (அ) கேசரித் தூளைக் கலக்குங்கள். சர்க்கரைப் பாகு கம்பிப் பதம் வந்ததும் இந்தப் பால் கலவையைக் கொட்டிக் கை விடாமல் கிளற வேண்டும். நன்றாகக் கெட்டியாகும்பொழுது நெய்யை விட வேண்டும். அத்துடன் ஏலப்பொடியையும் சேருங்கள். நெய்யைக் கக்கி, உருளியில் ஒட்டாமல் அல்வா சுருண்டு வரும்பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டி, முந்திரி, வெள்ளரி விதைகள் தூவி அலங்கரித்துத் துண்டுகள் போடலாம். மணமணக்கும் மைதாப் பால் அல்வா தயார்!

About The Author