அழிவில் வாழ்வா (3)

சரித்திரம் பார் சகோதரா

வந்தபின் ஒத்தடம்
அறிவீனமல்லவா
வருமுன் வேரறுப்பதே
வெற்றியல்லவா

O

ஒருமுறை

அந்த
இரத்தக் காட்டேறி
நம்மை நசுக்கி அரைத்து
நகைப்புக் காட்டி
நகர்ந்துபோய்விட்டது

மீண்டும்
அதையே வரவேற்று நீ
சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா

O

என்னருமைச் சகோதரா
இனி நீ
செய்யச் சிந்திக்கவேண்டிய
காரியமென்ன தெரியுமா

மூட வெறியர்களின்
மூர்க்க வேட்டுகள்
முற்றும் துளைக்காத கேடயமாய்
உன்னை நீ உருவாக்கு

O

கையரிவாள்களை
கண்தொடா குழிக்குள் கடாசிவிட்டு
உன் மனோ பலத்துடன்
மீண்டு வா

எது கேடயம் என்று
நீ கேட்டுத் தவிப்பது
எனக்குத் கேட்கிறது சகோதரா.

கேள்

பொருளாதார மேன்மை
மனோதிடச் செல்வம்
பேரறிவுப் பெருநெருப்பு

இவையே
எந்தக் கொம்பனும் நெம்பமுடியாத
பூரண அரண்கள் உனக்கு

O

அரிவாள்கள்
அறிவில்லாதவனுக்கே வேண்டும்
இந்தக் கேடயங்களல்லவா
உனக்கு வேண்டும்

O

எந்த நாய் நரியும் உன்
அழுக்கையும் தொடத் துணியாத
உயர் நிலையை
உன் உள்மூச்சடக்கித்
தவமிருந்து உனதாக்கு

O

வெட்டிக் கொண்டு சாவதை
வீர மரணம் என்று
முட்டாள் கோஷம் போடாதே

O

‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author