ஆண்மையை எப்போது உணர்ந்தேன் (1)

பிள்ளைப் பிராயத்தில்
சிவந்த அல்லிக் குளத்துமேட்டில்
அரைக்கால் சட்டையில்
அரையணா இடைவெளியில்
அனாயாசமாய் நின்றுகொண்டே
சிறுநீர் வார்த்தபோது
நான் உணரவில்லை

பறக்கத் துடிதுடிக்கும்
குயிலிறகுக் கூட்டங்களாய்
கருத்தடர்ந்த அழகு மீசை
மேலுதட்டு மொட்டை மாடியில்
குப்பென்று வளர்ந்து நின்று
கம்பீரம் காட்டியபோது
நான் உணரவில்லை

மேற்குமலைத் தொடர்களாய்ச்
செழித்துத் திரண்ட தோள்கள்
வான் நிமிர்த்தி வாட்ட சாட்டமாய்
யானை நடை பயிலவைத்தபோது
நான் உணரவில்லை

அந்திவெயில் குடையின்கீழ்
குறுகுறுவென்ற கிளிக் கண்கள்
பலநூறு… கூட்டமாகக்
கொத்திக்கொத்தித் தேன்தின்று
குறும்பாகப் பார்த்தபோது
நான் உணரவில்லை

முட்டவந்த முரட்டுக் காளை
எட்டியோட முட்டி விரட்டி
நெஞ்சு வேர்க்க நின்றபோது
நான் உணரவில்லை

கல்யாண ஊர்வலத்தில்
மணமகன் கோலத்தில்
ஊரறிந்த நாயகனாய்
பேரின்பக் கண்கொதிக்க
ஊர் உலா வந்தபோது
நான் உணரவில்லை

நான் கருவான முதல் இரவு
என் முதலிரவில்லையாம்

பனிக்குடப் பிசுபிசுப்போடு
எட்டி இந்த உலகு பார்த்து
நானழுத முதல் இரவு
என் முதலிரவில்லையாம்

சட்டப்படிப் பெண்ணொருத்தியைப்
பட்டு மெத்தையில்
தொட்டுப்பார்க்கும் இரவுதான்
எனக்கு முதலிரவாம்

அடடா…
பாலுறவில் உள்ளதோ
நம் பண்பாடு?

அந்தச் சமுதாயப்
பண்பாட்டு இரவிலும்கூட
நான் உணரவில்லை

‘பச்சை மிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author