ஆயிரம் தீவுகள் (2)

விலகி விலகி
என்றும்
வீணாகிப் போகும்
நம் மனிதமனங்களையும்
இணைத்துப் போடப்
புதுப் பாலங்கள் வாராதோ
என்ற
ஏக்கம் எழுந்தது

நதியால்
தீவுகளுக்குப் பெருமையா
தீவுகளால்
நதிக்கு மகுடமா
என்றொரு
பட்டிமன்றமே நடத்தலாம்

அப்படியோர் அழகு
அந்த லாரன்ஸ் நதிக்கு

ஓடாத ஓடங்களாய்
எங்கெங்கும்
தீவுகள்… தீவுகள்…

அவற்றில்
ஓடிப்போய் நின்று…
ஓஹோ வென்று
உச்சக்குரலெழுப்ப
உள்ளம் மனுப்போடுகிறது

சிற்றோடைக் கரைகளில்
சின்னஞ்சிறு பருவத்தில்
காகிதக் கப்பல் விட்டுக்
களித்த நாட்களை
மனம் இன்று
ஒப்பிட்டுப் பார்க்கிறது

எந்தச் சிறுவனின்
அற்புத விளையாட்டோ
இந்தத் தீவுகளின்
சுந்தர ஊர்வலம்?

திசைகளெங்கும் பரவித்
திளைத்தோங்கிய
தீவுகளே… தீவுகளே…

நீங்கள்
நீராடி முடித்ததும்
மெல்ல எழுந்து
என்முன்
நடக்கத் துவங்கிவிடுவீர்களோ…

காத்திருக்கவா
நானிந்த நதிக்கரையில்?

* (ஆகஸ்ட் 2000)

‘பச்சை மிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author