இயற்கை உலகம்( 42)

மாடுகள் தம் உணவை அசை போடுதல்:

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிற விலங்குகளை உண்ணும் (predators) உயிரினங்களிடமிருந்து, சில விலங்குகளால் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. தம்மைப் பாதுகாத்துக் கொண்டு உயிர் வாழும் பொருட்டு, இவ்விலங்குகள் ஒரு சிறப்பு வகை உணவு உண்ணும் முறையை மேற்கொள்ளத் துவங்கின. கிடைக்கும் உணவை விரைந்து திடீரெனப் பற்றி அதனை உடனே மெல்லாமல் விழுங்கிய பின்னர், பாதுகாப்பான இடத்திற்கு அவ்விலங்குகள் ஓடிச் சென்று ஒளிந்து கொள்ளும். மறைவிடத்தில் தாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துகொண்ட பின்னர், அவை விழுங்கிய உணவை ஓய்வாக மென்று அசை போடும். பசு மாடு போன்ற சில விலங்குகள் இப்போதும் இம்முறையைப் பின்பற்றியே உணவை உட்கொள்கின்றன. இவ்வகையில் உணவை உட்கொள்வது அசை போடுதல் எனப்படுகிறது. இவ்வகை விலங்கினங்கள் அசைபோடும் விலங்குகள் (ruminants) எனப்படுகின்றன. இவ்விலங்குகளின் வயிறு சிக்கல் நிறைந்த முறையில் ஐந்து பிரிவுகளைக் (compartments) கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரிவும் உணவுச் செரிமானத்தில் ஒரு தனிப்பட்ட செயலை மேற்கொள்கின்றது.

ஆடு, ஒட்டகம், மான் போன்ற விலங்குகளும் இவ்வகை அசை போடும் முறையிலேயே தம் உணவை உட்கொள்கின்றன. ஒட்டகத்தைப் பொறுத்தவரை, பாலைவனத்தில் பயணம் செய்கையில் இவ்வகை உணவு உட்கொள்ளும் முறை மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

கரடிகளின் அபாயத்தன்மை:

கரடிகள் 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை; பொதுவாகத் தடிமனான தோலும் பறட்டை முடியும் கொண்டவை. கரடிகள் உண்மையில் செல்லப் பிராணி போல் தோற்றமளித்தாலும் மிகவும் கொடூரமானவை. இவை மரத்தில் நன்கு ஏறக்கூடியவை; ஆற்றல் வாய்ந்தவை; விரைந்து எதிர்வினை புரியக்கூடியவை; சீண்டித் துன்புறுத்தினால் தவிரப் பிறருக்குத் துன்பம் விளைவிக்காதவை. சில நேரங்களில் கரடிகள் நட்போடு பழகிப் பிரச்சினையாகவும் விளங்குகின்றன.

தேசியப் பூங்காக்களில் கரடிகள் மனித இனத்துடன் நட்புடன் பழகி விளையாடுவதுண்டு; ஆனால் மனிதர்கள், கரடியின் நகங்களால் தங்களுக்குக் காயம் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் நட்பு மிகுதியினால் தன் வலிமையான கைகளைக் கொண்டு மனிதரை ஆரத் தழுவி அவரை இறப்புக்கு ஆளாக்குவதுமுண்டு.

சில சமயங்களில் இவற்றை ‘நரைத்த கரடிகள் (grizzly bears)’ எனவும் அழைக்கின்றனர். இதற்குக் காரணம் அவற்றின் பழுப்பு நிற முடியின் இறுதியில் சில முடிகள் நரைத்து சாம்பல் நிறத்தில் இருப்பதே. இனிப்பு உணவை இவை விரும்பி உண்பதால் இவற்றின் பற்கள் அழுகிக் காணப்படும்; மரங்களில் தேனீக்களால் அடை கட்டிச் சேமிக்கப்படும் தேன் கரடிகளின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகும்.

About The Author