இயற்கை உலகம் (46)

தெள்ளுப் பூச்சிகள் (fleas)

தெள்ளுப் பூச்சிகள் எனப்படுபவை, ஒரு வகை ஒட்டுண்ணிகள் அல்லது புல்லுருவிகள் (parasites) ஆகும். வேறொரு உயிரினத்தோடு இணைந்து வாழும் ஒரு வகைத் தாவரம் அல்லது உயிரினமே ஒட்டுண்ணி எனப்படுவது. இந்த ஒட்டுண்ணிகள் நாய் அல்லது பூனையின் மேல் இருந்துகொண்டு அவற்றின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்றன. நாய் அல்லது பூனையின் மேல் தோல் தடிமனாகவும் கதகதப்பாகவும் இருப்பதால் ஒட்டுண்ணிகள் உயிர்வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் அது ஏற்ற இடமாக விளங்குகிறது. ஒட்டுண்ணியின் தலை வட்டமாகவும் வாய்ப்பகுதி இரத்தத்தை உறிஞ்சுவதற்கு ஏற்ற வகையிலும் அமைந்துள்ளன. இதற்கு மெல்லிய சிறிய உடற்பகுதியும் மூன்று ஜோடி கால்களும் உண்டு; இறக்கைகள் ஏதுமில்லை.

ஒட்டுண்ணிகள் எல்லா உயிரினங்களின் மீதும் தாவி அமர்ந்து கொள்ளக்கூடியவை. இச்சிறு உயிரினம் காற்றில் 7 அங்குலம் வரையும் பக்கவாட்டில் 12 அங்குலம் வரையும் பறந்து தாவக்கூடியது. ஒட்டுண்ணிகள் நாய்கள் மற்றும் பூனைகள் மீது மட்டுமின்றி எலிகள், முயல்கள், அணில்கள், காட்டுப் பறவைகள் போன்ற எல்லா கதகதப்பான உடலைக் கொண்ட உயிரினங்கள் மீதும் அமர்ந்து அவற்றின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழக்கூடியவை.

வீட்டு விலங்குகள்

வீட்டு விலங்காக முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட உயிரினமாக நாயைக் கூறலாம; வேட்டையாடுவதற்கு துணைபுரியும் விலங்காக இது இருந்ததே இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. ஆடு, பசு மாடு போன்ற கால்நடைகள், பன்றி, கோழி போன்றவற்றை வீட்டு விலங்குகளாகக் கொண்டிருந்ததால் மனிதருக்குத் தேவையான உணவு எப்போதும் கிடைத்து வந்தது. குதிரை, கழுதை, ஒட்டகம் போன்ற வீட்டு விலங்குகள் மனிதரின் நீண்ட தூரப் பயணத்துக்கு உறுதுணையாக விளங்கி வந்தன. செல்லப் பிராணிகளான நாய், பூனை போன்றவை மனிதரின் நண்பர்களாகவும் உதவியாளர்களாகவும் இருந்து வந்தன. ஆட்டு மந்தைகளைக் காவல் காக்கும் நாய்கள் உழவர்களுக்கும் ஆடு மேய்ப்போர்க்கும் பாதுகாக்கும் காவலனாகப் பணிபுரிபவை. பார்வையற்றோர்க்கும் செவிப் புலன் அற்றோர்க்கும் கூட வழிகாட்டும் நாய்கள் இருக்கின்றன. மேலும் உடைமைகளைப் பாதுகாக்கவும், ஆபத்தில் உதவி புரியவும் செய்திகளைப் பிறருடன் பரிமாறிக்கொள்ளவும் கூட வீட்டு விலங்குகள் உறுதுணையாக இருப்பதுண்டு.

About The Author