இளங்கவிதைகள் (2)

கண்ணே,
எனது கவிதை வரிகளில் –
எழுத்து மலர்களின் வாசங்கள் –
உன் நினைவுத் தென்றல்
கொண்டு வரும்
இன்பக் கனவின்
உயிர்த்துடிப்புகள்!

உன் விழித் தூரிகைகள் தீட்டும்
இந்தக் கவிதைகள்
பேசும் சித்திரங்களாவது –
உனது வார்த்தைகளில்
என்னைக் காண்பதற்கே!

உன் நினைவு மாளிகையின்
சுவர்களில்
என் எண்ணங்களின்
பிரதிபலிப்புகள்
இங்கே கவிதைகளாக
உன் வார்த்தைகளில்!

உன் விழித்தூரிகைகள்
என் எண்ணங்களை
படங்களாக –
கவிதை வரிகளில்
எழுதுவது எப்படி?

உன் விழிகள் செய்த
(அ)ஹிம்சைப் போராட்டத்தில்
என் மனம் என்னுடன்
தொடங்கியது
‘ஒத்துழையாமை இயக்கம்’!
அதனால் சிறைப்பட்டது
உன் இதமான நினைவுகளில்!

எத்தனை வருடக் கடுங்காவல்
அளிக்கப் போகிறாய்
நீ எனக்கு –
உன் இதயத்தில்?

என் இதய வானில்
என் கற்பனைச் சிறகுகளால்
எத்தனை உயரத்தில் நீ!
அன்பே,
நீ ரோஜாத் தோட்டத்தில் புகுந்தால்…
வேண்டாம்….
நீ தொலைந்து விடலாம்!

என் இதயத்தில் இடம் பிடித்த உன்னிடம்
நான் கேட்கும் ஒரே ஒரு வரம் –
"என் இதயத்தை பிறருக்கு நீ
கடன் கொடுத்து விடாதே"!

About The Author