உதயம் வந்துவிட்டது!

உதய மொன்று வருவதை
உணர்த்து கின்ற தென்னகம்!
இதய மென்ற வானிலே
எழுக ஜோதி மாதவா!

கதிர்க ளென்ற பொற்கரம்
கருணை யன்னம் ஊட்டினால்
எதிரி லுள்ள பொய்மைகள்
எனை மயக்க முடியுமோ?

கண் துயின்ற போதிலே
காலம் நிற்க வில்லையால்
கண் விழித்த போதிலே
காட்சி மாறிப் போனது

மண் தெளிந்த வைகறை
மலர்கள் பூண்டு நின்றது
விண்தெளிந்த வைகறை
வெற்றி என்று சொன்னது

பறவை என்ற பாடகி
பனி மடந்தை தன்னுடல்
உருகி மாயப் பாடினாள்
உதயம் வந்து விட்டது!

About The Author

1 Comment

  1. P.Balakrishnan

    நல்ல சந்தக்கவிதை.- அரிமா இளங்கண்ணன்

Comments are closed.