எழுதக் கூடாத கடிதம் (3)

என் மனதை
ஒலிபெருக்கியில்
அறிவிக்காவிட்டாலும்
உன் செவியோரத்தில்
ஒரு சின்னக்
கிசுகிசுப்பாய் அறிவித்துவிடேன்
என்ற
உன் விழிக் கெஞ்சல்களையும்
நான்
நிதானமாகவே நிராகரிக்கிறேன்
.

இருந்தும்
என் காதலை உன்முன்
என்
உதடுகள் உச்சரிக்காவிட்டாலும்
உள்ளம் உச்சரித்து
ஓர்
உற்சவமே நடத்திவிட்டது

சந்தேகமிருந்தால்
நான்
அடிக்கடி சென்று
மனம் வடிந்து வருவேனே
அந்த ஏகாந்த மணல்வெளி

அதன்
ஒவ்வோரு
மணல் மொட்டுகளையும்
கேட்டுப் பார்

அவை சொல்லும்

கண்ணே
நான் உன்னைக்
காதலிக்கிறேனடி

இதயத்தின்
எல்லா அணுக்களாலும்
நான் உன்னை
நேசிக்கிறேனடி

உயிரின்
உதடுகளால்கூட
உன் பெயரை
உச்சரிக்கிறேனடி

என்று நான்
தினந்தினம்
தொண்டை கிழியக் கூவும்
சோகத்தை
.

நீ கேட்கலாம்
இதுமட்டும் தகுமோ என்று

உண்மைதான்
இதுவும் தகாதுதான்
இதுவும் கூடாதுதான்
இதுவும் நியாயமல்லதான்

இருந்தும் என் அன்பே…

நான்
எத்தனையோ தூரமாய்
ஓடி ஓடிப் போனாலும்
என்னை
இழுத்து இழுத்து
உன் நினைவு வனத்திலேயே
கொண்டுவந்து விடும்

அந்த
மரணமடையாத மனத் துடிப்புகள்
எனக்குள் எப்படியோ
நிரந்தரக் குடியமைத்தபின்

என்னால்
விரட்டவே முடியாத
விசித்திரங்களாகி விட்டனவே
நான் என்ன செய்ய

*

‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author