கடிதம்

நள்ளிரவில் விழித்துக் கொண்டு கடிதம் எழுதுகிறவனைப் பார்த்திருக்கிறீர்களா? குறைந்தபட்சம் சந்தித்தது உண்டா? இருக்க முடியாது. மனிதன் ஆறரிவு படைத்த பிராணி. அன்பிற்கும் பாசத்திற்கும் சுலபமாய் வசப்படுகிற பிராணி.

எதிர் அறையில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. ஹாஸ்டல் விதிப்படி இந்நேரம் விளக்கெரிந்தால் தவறு. வார்டன் தூங்கிப் போயிருந்தால் கூட அவர் கவனத்திற்குப் போய் விடும். நாளை, முதல் வேலையாக தண்டிப்புத் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டு வருவார். ஆனாலும் விழித்திருந்தான். சாட்சியாய்ப் பாடப் புத்தகம். நடந்தே இராத பக்கம் பிரிந்து கிடந்தது. விழித்துக் கொண்டு வந்து வார்டன் பார்த்தாலும் இந்தக் கோடை இரவில் சிலிர்த்துப் போகக் கூடும். ‘அட்வான்ஸ்டு’ சப்ஜெக்டில் இத்தனை அட்வான்ஸாய்ப் படிக்கிறவனைப் பெருமிதமாய்ப் பார்த்து ஸ்பெஷல் டீ கூடப் போட்டுத் தரலாம். பிற மாணவர்களுக்கு முன்னுதாரணம் காட்டாலாம்.

கலாவை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நள்ளிரவிலும் அந்த ஆராய்ச்சிதான். விரிவாக ஒரு கடிதம் எழுதி அதன் மூலமாவது அவள் புரிந்து கொள்ளக்கூடும் என்று நினைத்தான்.

மேஜையின் ஒருபுறம் எழுதிக் குவித்த நோட்டுகள். மூன்று செமஸ்டர்களில் நடத்தப்பட்ட வெவ்வேறு பாடங்கள். சரளமாய் கை வைத்த மாத்திரத்தில் அருவி போல கொட்டிய எழுத்துகள். ஆனால் கடிதம் மட்டும் நினைத்தபடி எழுத முடியவில்லை. பேனா திறந்தே கிடந்தது. எழுத எடுத்த வைத்த பேப்பரில் எந்த சுவடுமின்றி.. அவன் மனது போல வெறித்திருந்தது.

"பேச வேணாம்"
"எ…. ன்ன"
"பேச வேணாம்".

ஓர் ஆள் மட்டுமே நிற்கிற அளவு மிகச்சிறிதான டெலிபோன் கூண்டுக்குள் வெளியே காவலாய் அமர்ந்திருக்கிற பூத் கிழவரைத் தவிர வேறு ஆளரவமற்ற இடத்தில் ரிசீவரில் கேட்கிற குரலுக்கு என்ன பதில் தரலாம்?

கலா மிரட்டிப் பேசியதில்லை இதுவரை. குரலில் சிநேகம் அப்பியிருக்கும். சில நேரம் வசதியான கூண்டு கிட்டாத தருணங்களில் நடைபாதை, திறந்த டெலிபோன்களில் பேச்சின் வார்த்தைகள் துல்லியமாய்க் கேட்காமல், இன்னொரு தரம் விசாரித்தால் கூட பொறுமை இழக்காமல் சொல்லுகிறவள். இப்போதும் மிரட்டவில்லை. ஆனால் குரலில் எத்தனை சுலபமாய் தொற்றிக் கொண்டுவிட்ட அன்னியம். சிநேகமற்றுப் போன மாதிரி! எதிர் வீட்டுப் பெண்மணி வந்து கதவைத் திறந்து அவசர ஃபோனில் பதில் சொன்ன மாதிரி, "பேச வேணாம்."

சத்தியமா? என்ற யோசனையிலேயே நேரம் ஓடியது. பதில் தரவேண்டும் என்கிற அவசரத்தில் படபடப்பு கூடியது. வார்த்தைகள் வசப்படாத திணறலில் உடம்பு நடுங்கியது.

"என்ன திடீர்னு?"

"வச்சிரட்டுமா"

காத்திராமல் வைத்து விட்டாள். புத்திக்குப் பிறகுதான் புரிந்தது. அவசரமாய் இன்னொரு தரம் டயல் செய்தான். எங்கோ மணி அடித்துக் கொண்டிருந்தது. அழுகிற குழந்தையைப் போல எடுத்து ஆறுதல் படுத் த எவரும் முன்வராத நிலையில்.

கிழவரின் கவனம் வேறெங்கோ இருப்பது போல கூண்டுக்குள் இருப்பவன் மீது படர்ந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது. எத்தனை பேரைப் பார்த்திருப்பார். அவர் நோக்கம் எல்லாம் சிவப்பில் ஒளிர்கிற மீட்டர் ரீடிங் அதிகபட அவர் வாழ்கையில் சந்தோஷம் கூடும். பேசு… ஏன் பேசுவதை நிறுத்தி விட்டாய்?- பேசு. மானசீக ஜபம்தான் அவருடையது.

இன்னொரு தரம் முயற்சி செய்யலாமா? என்று யோசித்து மனந்தளர்ந்து வெளியில் வந்தான்.

"ஒரு ருபாய் இருபத்தாறு பைசா"

இத்தனை நாட்களில் மிகக் குறைவான பில். கலா இல்லாத நேரங்களில் அவள் அப்பாவுடன் கூட இரண்டொரு வார்த்தைகள் பேசிய பிறகுதான் ஃபோனை வைத்திருக்கிறான். ஏழெட்டு ரூபாய் பில் வரும்வரை.

ஒண்ணரை ரூபாய் மனிதர்களும் பூத் கிழவருக்கு வேண்டியிருக்கிறது. லைனே கிடைக்காமல் போகிறவனைவிட இவன் மேல்.

மூன்று கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே வந்தான். மனசுக்குள் வழி நெடுக பேசிக் கொண்டு. எந்த மீட்டரும் அளவெடுக்காத தொலைபேசியில், சகாவின் விசாரணைக்கு அரை மனதாய்ப் பதில். பசியற்ற அறைக்குள் முடங்கி சகா திரும்புவதற்குள் தூங்கிப் போய் நள்ளிரவில் திடுமென்று விழித்துக் கடிதம் ஒரு வார்த்தையும் எழுதப்படாமல்.

இப்போதே கிளம்பி ஊருக்குப் போய் விடலாமா? வாட்ச்மென் அறியாமல் சுவர் எறிக் குதித்தாவது. தெளிவற்ற ஆலோசனைகளை மனசு வழங்கியது. இன்னொரு தரம் ஃபோன் செய்து. இந்த நடுநிசியிலா…? அத்தனை பெரும் ஆழ்ந்த உறக்கத்தில். அமைதியைக் கலைத்து டெலிபோன் மணி வித்யாவை அனுப்பி கலாவுடன் பேசச் சொல்லலாமா? என்னவென்று சொல்வது? எப்படி புரிந்து கொள்வாள்?

கலாவின் சுபாவத்திற்கு மூன்றாம் மனிதரின் தலையீடு நிச்சயம் எதிர்மறை விளைவைத்தானே தரும். கலாவுக்குப் பிடிக்காது. பிடிக்கும் என்ற பட்டியல் கைவசம் இருந்தது. இத்தனை கால பழக்கத்தில் சேகரித்தது. கலாவுடன் பேசும், பேசாத நேரங்களில் கண் எதிரே பட்டியல் விரிந்து கிடக்கும். புதுப்புது விஷயங்களை அதில் சேர்த்தும், ஏற்கெனவே தவறாய்ச் சேர்த்த விஷயங்களை நீக்கியும், சரி செய்தும் அவனின் ஒரு பகுதி கவனம் செலவழியும்.

"பேசறப்ப முழுசா கவனிக்க மாட்டீங்களா?"

"கவனிக்கிறேன். நேத்து திடீர்னு மழை பெருசாக் கொட்டினது. வீட்டு படிக்கட்டு மேல மழை பெருசாக் கொட்டினது. வீட்டு வாசல்ல படிக்கட்டு மேல தண்ணி வந்தது. மழைன்னா உனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்புறம் பார்த்தா ஒரு செடி மழை வேகம் தாங்காம சரிஞ்சு கிடந்தது… நீ தவிச்சுப் போனது".

முந்தைய நிமிடம் வரை அவள் பேசியதை ரீப்ளே செய்ததும் அவள் மறுபடியும் தன் கருத்தை வலியுறுத்தியதும். "நீங்க என்னதான் சமாளிச்சாலும் உங்க முழு கவனம் என் பேச்சில் இல்லை. அதுதான் நிஜம்".

நிஜம்தான். பேச்சில் இல்லை. உன்மீதுதான். ஆனால் சொல்ல முடியாது. சொல்லத் தோன்றவில்லை. சில விஷயங்களை ஆழ்மனதில் பத்திரப்படுத்தத் தோன்றுகிறது. வெகு சிநேகமான மனிதரிடம் கூடப் பகிராமல். சொல்லக் கூடாது என்றில்லை. சொல்லத் தோன்றாமல் இன்னொரு பயமும். வெளிப்படுத்திய மறுநிமிடம் அது தன் சுவாரசியத்தை இழந்து விடுகிறது. மனசுக்குள் புதைந்து கிடைக்கிறவரை அதன் வீர்யம் குறைவதில்லை.சொல்வது மட்டுமில்லை. நினைப்பதில் கூட, எந்த ஒரு ஆழ்மனது விஷயத்தையும் பூரணமாய் மனசுக்குள் கூட விரித்துப் பார்க்க அனுமதி இல்லை. இலேசாய் எதேனும் ஒரு பக்கம் பார்த்துப் பிற பகுதிகளை அனுமானித்து சந்தோஷப்படலாம். மனசுக்குள் எடுத்து முழுசாய்ப் பார்த்தால் கூடப் போச்சு.

இந்த விளையாட்டை கலாவுடன் இருக்கிற, இல்லாத நேரங்களில் எல்லாம் விளையாடுகிறான். அதனால்தான் இப்படி மாட்டிக் கொள்ள நேர்கிறது. அவளுக்கு எதுவும் விளையாட்டில்லை. நூறு சதவீதத் தீவிரம். எதுவானாலும், நேசிப்பைச் சொல்வதானாலும். "பேசாதே" என்று கட்டளையிட்டாலும்…

எழுந்து விளக்கை அணைத்து விட்டான். இரவு முழுக்க விழித்திருந்தாலும் ஒரு வரி கூட எழுதப் போவதில்லை. என்ன எழுதுவது என்ற தீர்மானமற்று பேனாவை திறந்தால் இப்படித்தான். ஏற்கெனவே அச்சிட்ட பாடப்பகுதி போல எழுத அத்தனை சுலபமில்லை. துக்கமும் தடங்கல் செய்ய போகிறது. ஹாஸ்டல் எதிரே பூத் திறக்க எட்டு மணி ஆகும். அவனுக்கு முன்பே காத்திருக்கிற பிற மாணவர்கள், ஆசிரியர்கள். ஏன் சில சமயம் வார்டன் கூட!

விளக்கு அணைத்துப் படுத்த மறு நிமிடம் தடங்கலே இல்லாமல் ஓர் அற்புதமான கடிதம் மனசில் ஓட ஆரம்பித்தது. "எழுந்திருக்காதே" என்று யாரோ அன்பாய் எச்சரித்தார்கள். "கடிதம் முழுவதும் கேள்" வார்த்தைகளில் முழுவதுமாய் அவன் மனத்தைச் சொல்லி… கலாவுக்கு அவன் எழுத நினைத்த கடிதத்தைவிட உசத்தியாய்… நேர்த்தியாய்… சரளமாய்… மனத்தின் பக்கங்கள் சரசரவென விரிந்து… குண்டு குண்டாய்க் கையெழுத்தில்….. இதுநாள் வரை யாருமே எழுதியிராத கடிதம். கலாவை முன்னிறுத்திப் பேசிக் கொண்டு போன தொனியில்.

காலை பத்து மணிக்கு பூத்தின் கதவு மூடிக் கொண்டு, எதிர்முனையில் கலாவின் குரலுக்காக அவன் காத்திருந்த நேரம்… நள்ளிரவில் எழுதிய கடிதம் ஒரு வார்த்தை கூட நினைவில் இல்லை.

ஆனால் எதிர்முனையில் மணி அடிப்பது நின்று குரல் கேட்டது. பிரியமாய்… இனிமையை முறித்துப் போடாத விதமாய்… எழுதப்படாத கடிதம் அதற்கான நபரிடம் சேர்ந்து தன் விளைவை நிகழ்த்தி விட்டதைப் போல.

"என்ன ஸ்ரீ?"

சுருக்கமாய் அவன் பெயரை அவளுக்கேயான சுவாதீனத்தில் சொன்னபோது, நேற்று ஏன் அப்படிப் பேசினாள் என்று கேட்கத் தோன்றவில்லை அவனுக்கு.

About The Author

1 Comment

Comments are closed.