கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

சாவுக்குப் பின்னும் வாழும் சடலங்கள்

1964 வது ஆண்டில் ராபர்ட் எட்டிங்டர் என்ற இயற்பியல் பேராசிரியர் ‘மரணத்தை வெல்வதற்கான வழிகள்’ என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை. ஒருவர் இறந்து போன பின்பு அவருடைய உடல் உறைய வைக்கப்பட்டால் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் மருத்துவ தொழில் நுட்பங்களால் அவரை உயிர் பிழைக்க வைக்கும் சாத்தியங்கள் உண்டு என்று எட்டின்கர் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்தக் கட்டுரை மனித உடலை உறைய வைத்துப் பாதுகாக்கும் cryonic என்னும் முறைக்கு ஆதாரமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் அல்கார் என்ற அமைப்பு 1973ல் உருவானது. இது பின்பு அல்கார் வாழ்நாள் விரிவாக்க அறக்கட்டளை என்று பெயர் மாற்றம் செய்யபட்டது. இந்த அறக்கட்டளை நூற்றுக்கும் மேலான உடல்களை உறைய வைத்துப் பாதுகாத்து வருகிறது. இதில் பலதரப்பட்ட தொழில் வல்லுனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தங்கள் உடல்களையும் பாதுகாத்து வைக்க கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளனர். இந்த அறக்கட்டளையின் தலைவரான ஜெர்ரி லெமியர் vitrification என்ற முறையில் உடல் பாதுகாக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார்.

இதன் தொழில் நுட்ப விவரங்கள் நமக்குப் புரியாமல் போனாலும் பூஜ்யத்தித்கு கீழே 130 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உடலை ஐஸ் உருவாகாமல் பாதுகாப்பது என்ற அளவில் புரிகிறது. இதன் மூலம் உடல் இயற்கையாக உயிருடன் இருப்பதுபோலப் பாதுகாக்கப்படுகிறது. மூளை மரணம் ஏற்பட்ட உடல்கள் இதன் மூலம் பாதுகாக்கப் படுவதில்லை. இதில் ஈடுபட்டிருப்பவர்கள் நேனோ டெக்னாலஜி, மரபுப் பொறியியல் மூலம் இந்த உடல்களுக்கு உயிரூட்ட முடியும் என்று நினைக்கிறார்கள். இந்த முறையைப் பற்றி விவாதங்கள் எழுவதில் ஆச்சரியமில்லை. இதில் செலவழிக்கப்படும் பணம் வீண் என்ற கருத்தும் உண்டு.

ஆனால் இதில் ஈடுபட்டிருப்பவர்கள் எவ்வளவோ அறிவியல் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது போல நிச்சயமாக இதுவும் சாத்தியமாகும் என்று திடமாக நம்புகிறார்கள். பலரும் இக்கருத்துக்களை புறக்கணித்தாலும், நகைத்தாலும், கடைசியில் வெல்வோம் என்று சவால் விடுகிறார்கள்.
(தகவல் மூலம் : சண்டே இந்தியன்)

பின் குறிப்பு:
நம்பினவர்க்கு நடராஜா நம்பாதவற்கு எமராஜா என்ற ஒரு வேடிக்கையான பழமொழி உண்டு. ஆனால் உடல் காத்து பின் உயிரூட்ட முடியும் என்று சொல்லும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் எமராஜாவையும் வெல்ல முடியும் என்று நம்புகிறார்களோ!


யாருக்குக் காய்ச்சல்?

புத்தரைத் தேடி ஒருவர் வந்தார். “இந்த உலகமே துயரத்தில் இருக்கிறது. மக்கள் மிகவும் துக்கம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். உங்களால் மட்டும் எப்படி நிம்மதியாக இருக்க முடிகிறது?” என்று கேட்டார்.

புத்தர் அமைதியாகச் சொன்னார். ”ஒருத்தர் காய்ச்சலால் அவதிப்படுகிறபோது மருத்துவரும் அவர் அருகில் படுத்துக்கொண்டு அவதிப்படவா வேண்டும்?”

என்ன ஆச்சு?

ஒருவன் 108 வது மாடியிலிருந்து விழுந்துவிட்டான். தரையில் கிடந்த அவனிடம் ஒரு அம்மையார் வந்து, “என்ன ஆச்சு?” என்றாள்.

“தெரியாது. நானே இப்பத்தான் இங்கே வந்தேன்” என்றான் அவன்.

About The Author