கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

காமராஜரும் பெரியாரும்

விருதுநகரில் தேர்தல் சமயம். நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், படிக்காத காமராசரைப் பற்றி படித்த காமராசன் (கவிஞர் நா.காமராசன்) பேசுவார் என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. காமராசரின் மீது மதிப்பு, மரியாதை கொண்ட தந்தை பெரியாரிடம் ஒருவர் சென்று, “அய்யா.. பெருந்தலைவரை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்” என்று சுவரொட்டியைக் காட்டி கோபப்பட.. பெரியார் அந்த சுவரொட்டியைப் பார்த்து விட்டுச் சொன்னாராம். “சரியாத்தான் போட்டிருக்கானுங்க.. ஆனா இதுல ஒரு வார்த்தை சேர்த்துக்கிட்டா நல்லாருக்கும். படிக்காத காமராசர் உருவாக்கிய பள்ளிக்கூடத்தில் படித்த காமராசர் பேசுவார் என்று போட்டிருக்கணும்” என்றாராம்.

மிகச் சுருக்கமான திகில் கதை:

இந்தக் கதையை யார் எழுதினார்கள் என்பது தெரியாது. ஆனால் ஹெமிங்வே, ஃப்ரெட்ரிக் ப்ரவுன் என்று பல பெயர்கள் அடிபடுகின்றன.

இதுதான் கதை:
உலகத்தின் கடைசி மனிதன் தன்னந்தனியாக அறையைத் தாளிட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான். அப்போது மெதுவாக வெளியிலிருந்து கதவைத் தட்டும் ஒசை கேட்டது.

வேடிக்கையாக இதற்குப் பின்னால் சிலர் ஒரு வரி எழுதியிருக்கிறார்கள். அதில் ஒன்று…

“அது அவன் மாமியார்”

முதல்முதலாய் அம்மாவுக்கு:

கவியரசு வைரமுத்துவின் ’முதல்முதலாய் அம்மாவுக்கு’ என்ற அற்புதக் கவிதையிலிருந்து மாதிரிக்கு சில வரிகள் மட்டும்..

ஆயிரந்தான் கவி சொன்னேன்;
அழகழகாப் பொய் சொன்னேன்!
பெத்தவளே, ஒம் பெரும
ஒத்த வரி சொல்லலியே!…..
வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில நீ சுமந்ததில்ல
வயித்தில நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு!
(இது வேறு)
வாழ்ந்து கெட்ட சீமாட்டி
வளவி மட்டும் போட்டது போல்
கோடையிலும் குடிதண்ணி
கொஞ்சூண்டு வெச்ச குளம்!
இன்னைக்குத் தேதிக்கு
இல்லேன்னு போன குளம்
என்னக்கு நெனச்சாலும்
என் கண்ணில் உப்புக்குளம்!

சுட்ட கணக்கு:

ஒரு எண்ணை, ஒன்பதால் வகுத்தால் எட்டும், எட்டால் வகுத்தால் ஏழும், ஏழால் வகுத்தால் ஆறும், ஆறால் வகுத்தால் ஐந்தும், ஐந்தால் வகுத்தால் நான்கும், நான்கால் வகுத்தால் மூன்றும், மூன்றால் வகுத்தால் இரண்டும், இரண்டால் வகுத்தால் ஒன்றும் தரும்.

அந்த எண் 2519.

சற்றே சிரிக்க!

எம்ஜியார் முதலைமைச்சராக இருந்த பொழுது சட்டசபை விவாதத்தில் கூச்சல் எழுந்தது. "உங்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்" என்று எம்ஜியார் சொன்ன மறு நிமிடம் எதிர்க்கட்சி தலைவராய் இருந்த கலைஞர் எழுந்து, "இதற்கு முன் தமிழ் நாட்டை ’ஆண்டவன்’ என்று என்னை சொல்வதால், நான் இருக்கிறேன் காப்பாற்ற!" என்று கூறியதைக் கேட்டு மொத்த சபையும் ரசித்தது.

முல்லா நஸ்ருதீன் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருமுறை முல்லாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டிருந்தது. பல மனைவிகள் இருந்ததாக முல்லா மீது குற்றச்சாட்டு இருந்தும் அதை நிரூபிக்க ஆதாரமில்லாமல் இருந்தது. முல்லாவின் வழக்கறிஞர், "நீ அமைதியாக இரு. ஒரு வார்த்தை கூட பேசாதே. மற்றதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.

அமைதியாக இருந்ததால் புத்தரைப் போல முல்லா காட்சி தந்தார். வழக்கை விசாரித்து முடித்த நீதிபதி, "சாட்சிகள் இல்லாததால் உன் மீது உள்ள குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்" என்றார். அதுவரை அமைதியாக இருந்த முல்லா வழக்கு வெற்றியாக முடிந்து விட்ட சந்தோஷத்தில், "எந்த வீட்டுக்கு நான் போவது யுவர் ஹானர்!" என்று கூறிவிட்டார்.

About The Author

2 Comments

  1. jayaraman

    எப்படி சொன்னாலும் சமயமரிந்து பெசுவதில் கருனானிதி வல்லவர்
    ஜயராமன்

  2. Harun Basha

    உலகத்தின் கடைசி மனிதன் தன்னந்தனியாக அறையைத் தாளிட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான். அப்போது வெளியிலிருந்து கதவை பூட்டப்பட்டது.

    இது கிட்ச்காகினால் திருத்தப்பட்டது

Comments are closed.