கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

நம்மை வளர்த்தெடுக்கிற நட்புகள்!

“நம் மனப் பிரதேசத்தை ஈரமாகவும் கனிவாகவும் வைத்திருக்கிறது நட்பின் உயிர்ப்பு”

“வாழ்வு எப்போதும் புன்னகையும், புதிரும் நிரம்பியதாகவே இருக்கிறது. புதிர்களின் வழி விழுகிற முடிச்சுக்களின் அதிர்வுகளும், புன்னகையின் ஊடே மிளிர்கிற சந்தோஷங்களுமாய். நம்மைக் கைபிடித்திருக்கிறது இந்த வாழ்வு. விரல் பற்றி நடை பழகத் தொடங்கியது முதல் நமது ஒவ்வொரு பருவமும் நட்பின் கதகதப்பால் பதப்படுத்தப்படுகிறது. மனதிற்கிசைந்த நட்பொன்று கிட்டிவிட்டால் நம் சமவெளி பூ பூத்து விடுகிறது. வலிமையான பருவமழைக் குறிப்புடன், குளிர்ச்சியுறுகிறது. செழித்த புற்பரப்பில் கால் புதைய நடந்து செல்லலின் அனுபவமொன்றை சுவைக்கத் தருகிறது.

நட்பு விரிக்கிற ராஜபாட்டை.

ஒரு நட்பு வந்து நம்மிடம் கை குலுக்குகிற நேரம் எத்தனை உன்னதமானது. வித்தாய் விழுந்து., வீரியமாய் முளைத்து, பெரு விருட்சமாய், அது கிளைத்து விட்டதெனில், அதில் இளைப்பாறுகிற தருணம் தான் எவ்வளவு அற்புதமானது.தானும் அழகாகி, தான் இருக்குமிடத்தையும் அழகாக்கி விடுகிற தீட்சண்யமிக்க நண்பர்கள் சூழ் உலகத்தில் சுவாசிக்க வாய்ப்பது எத்தனை இனிமை தரக்கூடியது. ஒத்த எண்ணங்களைக் கொண்ட இதயங்களிடம், நமக்கென மன நிறைவைத் தேடிக் கொள்ளவே எப்போதும் விழைகிறோம். நாம் நாமாகவே இருக்கின்ற நிமிஷங்கள் அவை.

வீணை மீட்டலில், அதிர்கின்ற தந்திக் கம்பிகளின் வழியே எழுகிற ஸ்வரங்கள், எத்தனை இதமோ அத்தனை இதம் ஒத்திசைவான நண்பர்களுடனான பகிர்தல்கள் வலியை அழுது அழுது தீர்க்கப் பார்க்கும் குழந்தையைப் போல் பேசிப் பேசி, பகிர்ந்து, பகிர்ந்து வாழ்வு சுமத்துகிற கனங்களைக் குறைக்கப் பார்க்கிறோம். கதையோ, கவிதையோ, கடிதமோ எதை எழுதினாலும் மனமொத்த தோழமைகைளிடையே பகிர்ந்து கொள்ள விஷயங்கள் தீராமல் பெருகிக் கொண்டேதானிருக்கின்றன.அவரவர் பாத்திரத்திற்குத் தக்க நிரம்பிக் கொண்டுதான் இருக்கிறது தோழமைத் தேனின் சொட்டு.

(நன்றி – : பிரியத்தின் சிறகுகள் – சிறுகதைத் தொகுப்பு – –ரிஷபன் முன்னுரையிலிருந்து ரசித்த பகுதிகள்)

                                                                         *****

ஞானம்

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞனை வழிப்போக்கர் ஒருவர் கேட்டார்.

"இன்று வானிலை எப்படி இருக்குமென்று நினைக்கிறாய்?"

"நான் விரும்புகிற மாதிரியேதான் இன்று வானிலை இருக்கும்" என்றான் அவன்.

"அது எப்படி அவ்வளவு நிச்சயமாக நீ விரும்புகிற மாதிரிதான் வானிலை இருக்கும் என்று நிச்சயமாக சொல்கிறாய்"

அவன், “வானிலை என்பது என் கையில் இல்லை. அதை என்னால் மாற்ற முடியாதென்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். அதனால் நான் எந்த மாதிரி வானிலை இருந்தாலும் அதை விரும்புவதென முடிவு செய்து விட்டேன். ஆகவே, நிம்மதியாகக் கவலையின்றி இருக்கிறேன்.”

"சுட்ட பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமாமா?" என்று அவ்வையிடம் கேட்ட முருகனைப்போல் அந்த ஆடு மேய்ப்பவர் இருப்பதாக வழிப்போக்கருக்குத் தோன்றியிருக்கக் கூடும்!

                                                                          *****
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!

வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:

• ஒரு ரம்யமான காதல் அமைவது

• வயிறு வலிக்க வாய் விட்டுச் சிரிப்பது

• விடுமுறையிலிருந்து நீங்கள் திரும்பி வருகையில் உங்களுக்காகக் காட்த்திருக்குக்ம் நண்பர்களின் கடிதங்கள் – , மெயில்கள்

• ஒரு அழகான ஊருக்கு சுற்றுலா செல்வது

• நீங்கள் மனதில் அசை போட்டுக் கொண்டிருந்த ஒரு பாட்டு அப்போதே வானொலியில் எதிர்பார்க்காமல் ஒலிபரப்பாவது

• வெளியில் பொழிகின்ற என்ற மழையின் ஓசையை படுக்கை அறையிலிருந்து ரசிப்பது

• வெகுநாட்கள் தொடர்பு விட்டுப் போன ஒரு நண்பரிடபிமிருந்து வரும் தொலைபேசி அழைப்பு

• பல நாட்களாக உபப்யோகிக்காத உங்கள் பேண்ட் பையில், எப்போதோ வைத்த ரூபாய்

• நோட்டுக்கள் கிடைப்பது

• மலை உச்சியிலிருந்து சூரியன் மறைவதைக் காண்பது

• உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைப் பற்றி நல்ல விதமாகப் பிறர் பேசும்போது கேட்பது

• புதிதானய நண்பர்கள் கிடைக்கும்போது

• கடற்கரை ஓரமாக அலைகளை ரசித்தபடியே மணலில் கால் புதைய நடப்பது

இன்னும் எத்தனை எத்தனையோ!

                                                                           *****
காலில் விழுந்ததேன்?

ஒரு அரங்கத்திலிருந்து ஒரு பெரியவர் வெளியில் வந்து கொண்டிருந்தார்.

அவர் பின்னாலேயே அவரைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஒருவர், அவருக்கு முன்னனால் ஓடிச் சென்று அவரது காலில் விழுந்து வணங்கி, பின் எழுந்து சென்றார்.

பின்னால் வந்த இன்னொருவரும் இவரைப் பார்த்து தானும் பெரியவர் காலில் வணங்கி எழுந்து சென்றார்.

பின் முதலில் வணங்கியவனிடம் கேட்டார். "அவர் யார்? ரொம்பப் பெரியவரா? எதுக்காக அவர் காலில் ஓடி வந்து விழுந்தீங்க?"

"அந்த ஆளு போட்டிருக்கறது என் செருப்பான்னு கண்டுபிடிக்கத்தான்!"

About The Author

3 Comments

  1. meenal devaraajan

    வாழ்க்கையில் சின்ன விஷயங்கள் இன்பம் தருவன. பல கவலைகளுக்கு இடையே அவற்றை ரசித்தால் பிரச்சனைகளின் சுமை தெரியாது.
    பல நாள்களுக்கு பிறகு பெய்யும் மழையில் நனவது
    புது மழையின் போது மண் வாசனை
    அழகிய காலைப் பொழுதில் பறவைகளின் கீச்கீச் சத்தம்
    இப்படி எத்தனை எத்தனையோ அதனால் தான் பாரதியார் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்று பாடினார் போலும். ஆனால் இத்தனையையும் இழந்து விட்டு பணத்தின் பின்னால் கணினியின் பின்னால் காலத்தை வீணாக்குகிறோமோ என்ற கவலையும் அவ்வப்போது எழுகிறது!

  2. rajeswari

    வாழ்க்கையில் தான் எத்தனை இனிமைகல்..னினைது பார்க்கவே சுகமாக இருக்கிரது…ஆனால் இதையெல்லாம் அனுபவிக்க நேரமில்லை நம் மனிதர்கலுக்கு…

  3. S. Vaanambadi

    இந்த மாதிரி ஒரு கட்டுரையை படிப்பது கூட வாழ்க்கையில் இருக்கும் இனிமையான தருணங்களில் ஒன்றாகும்.

    நான் வாழ்க்கையில் இனிமையாக இருக்க பழக வேண்டும் என்பதற்காக என் தந்தை எனக்கு இட்ட பெயர் வானம்பாடி. நானும் அந்த முயற்சியில் இனிமை காண்கிறேன்.

    நன்றியுடன்

    வானம்பாடி

Comments are closed.