கல்வி வளர்ப்போம் (2)

ஒரு தந்தை தாயாவதில்லை
அந்தத் தாயும் முற்றாய்
ஒரு தந்தையாவதென்பது
நிகழ்வதில்லை

ஆனால்
நம் பாடசாலைகளைப்
பாருங்கள்

பண்பினை ஊட்டுவதில்
பொன்னழகுத் தாயாய் – நல்ல
அறிவினைப் புகட்டுவதில்
பேரருள் தந்தையாய் – நம்முன்
ஓங்கி உயர்ந்தல்லவா கிடக்கிறது
*

பழைய மாணவனே
ஒரு பள்ளியின் அழியாச் சொத்து

அவன்தான்
அந்தப் பழைய கூடத்தைப்
பள்ளிக்கூடம் என்று
அழைக்கக் கிடைக்கின்ற
அற்புதச் சான்று

அவனை
அள்ளித்தராவிடில்
அது பள்ளியென்று ஆகுமா
*

பழைய மாணவர்கள்
ஒன்றாய்க் கூடி
விம்மும் நன்றிப் பெருக்கோடு
தம் பள்ளிக்கு விழா எடுக்கும்
வைரப் பொழுதுகளிலெல்லாம்

ஆயிரமாயிரமாய்ப் பொருளிறைத்துத்
தம் பள்ளியை
இமாலய வெள்ளிப் பனிமலைக்கு
உயர்த்திச் சிரிக்கும் அந்த
உத்தமப் பொழுதுகளிலெல்லாம்

என் உள்ளம்
சீனிக் கண்ணீரில் நீந்திச்
சத்தேறி மிளிர்கிறது
*

நம் வாழ்க்கை வளர
நல்ல சந்ததி தழைக்க
இந்த ஒட்டுமொத்த உலகமும்
ஒன்றாய் உயர

அந்தக் கல்வியின்
விரிந்த மடிகளில்
கணக்கற்றுத் தினந்தோறும்
நாம் அள்ளியள்ளிக் குவிப்போம்

நல்ல
நன்றியின் பெருமை தரும்
வீர மதர்ப்போடு
நாம் அள்ளியள்ளி இறைப்போம்

நன்றி

* (செப்டம்பர் 2002)

‘பச்சை மிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author