கவின் குறு நூறு-27

79

கவினோடு கடற்கரையிலிருந்து
நேற்றிரவு வீட்டுக்குத்
திரும்பியபோது மணி
பத்தைக் கடந்திருந்தது.
அவன் பாதங்களைச்
சினேகித்திருந்த மணல் பொடிகளில்
அடங்காத கடலின்
அன்புப் பரவசங்கள்;
மெரினா மீட்டிய தாலாட்டு
கண்மணிக்குத் தூக்கத்தைத் தூக்கி வந்தது.

80

கவின் செய்யும் கலாட்டக்களால்,
வீட்டில் சிலைக்குள் இருக்கும்
புத்தரின் தியானம்
எத்தனையோ முறை கலைந்திருக்கிறது.
ஆனால் ஒரு குறும்பும் அவன்
உற்பத்தி செய்யாத நாளிலும்
புத்தர் தியானத்திலிருந்து
வெளியில் வந்து
‘என்ன நேர்ந்தது?
ஏன் கவின் ஒரு குறும்பும்
இயற்றவில்லை?’ என்று
கேட்காமல் இருக்கவும் முடியவில்லை.

About The Author