கவியரசனே கண்ணதாசனே -2

ஞானத்
தாமரை ஒன்று
மண்ணின் இரைப்பையில்
ஜீரணிக்கப்பட்டுவிட்டது

வேதனை நெஞ்சங்களை
வருடிக் கொடுக்கும்
ஒரு

மகத்தான கவிமலர்க்கரம்

தீக்கரங்களுடன்
கை குலுக்கிக் கொண்டுவிட்டது

மாகவியே
இதுதான் உன்
கடைசிக் கவிதையா

ஆனால்
இதை நீ
இவ்வளவு சீக்கிரம்
இத்துணைச் சோகமாய்
எழுதி விடுவாய்
என்று நான்
எண்ணியிருக்கவில்லையே

கவிதேவனே
உன்
வலக்கர விரல்கள் ஆறு

ம்..
மைவற்றா தூரிகையும்
உனக்கொரு விரல்தானே

உன்
பாதம்பட்ட
இடங்களில்தாம்
எத்தனைக் கவிமணம்

நீ
மயானத் தீவில் நின்று
பாடினாலும்
அங்கே
மண்ணைப் பிளந்து
செவிப் பூக்கள் வெளிப்படுமே

உனக்குத் தெரியுமா

கடைசியில் இடும்
என்
கையெழுத்தைத் தவிர
என்
காதல் கடிதங்களில்
உன்
கவிதை முத்துக்களே
ரகசியம் பேசுகின்றன

கண்ணதாசா
என்
உயிர் தொட்ட
உன்னதக் கவிஞனே

உன்
செவிமலர்க் கதவுகளில்
சாவுமணி ஒலித்தபோது
நீ
என்ன செய்தாய்

அழுதாயா

இல்லை
நீ
அழுதிருக்கமாட்டாய்

அந்த
அகோர ராகத்திற்கும்
ஓர்
அழகு கவியல்லவா
படைத்திருப்பாய்

‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து

To buy this EBook, Please click here


About The Author