காற்று (7)

16. நீ எனக்கு மட்டுமே
வேண்டும் என்று
காற்றிடம்
சொல்ல முடியாது!
அதே போல
நம் நட்பு, உறவுகளிடமும்..
கற்றுக் கொடுத்த
காற்றிற்கு
வந்தனம்!

17. என் கனவில் ஒரு முறை கூட
காற்று வந்ததில்லை.
கடல்.. வானம்.. பூக்கள்..
பறவைகள்..
இப்படி எவை எவையோ
வந்திருந்தாலும்..
காற்று வராதது
மனசுக்குள் வருத்தம்.
யோசித்தால்..
நான் மிக நேசித்த
பல விஷயங்கள்
கனவில் வந்ததில்லை..
அதனால்தான்
காற்றும் வரவில்லையோ..

18. என் ஒவ்வொரு வயதிலும்
காற்று மட்டும்
அதே இளமையாய்..
என் மூச்சுக் காற்று மட்டுமே
ஞாபகப் படுத்துகிறது
வயதானதை!

19. ஒரு குழந்தையைப் போல
அணுகி நிற்கும் சில நேரம்.
முரட்டுத் தனமாய்
விரட்டுவதும் உண்டு.
தழுவிப் போகும்
நேரங்களுமுண்டு.
அருகிலேயே இருந்தாலும்
முகம் காட்டாத
தருணங்களும் ஆக
இப்படி எல்லா வகையிலும்
காற்று என் வாழ்வில்!

About The Author