காலைக் காட்சி

அவிழ்த்து விடப்பட்ட
கிழண்டு போன குதிரைகள்
ஓட்டிவிடப்பட்ட
ஒன்றுக்கும் உதவா மாடுகள்
மதில்களில் மறைந்து பதுங்கி
பால் திருடக் காத்திருக்கும்
கள்ளப் பூனை
இரவுப் பேருந்தில் அகப்பட்டு
சாலையில் பதிந்த சித்திரமாய்
கோரக் காட்சியாய்
கண்ணில் பட்டுவிடும் ஒரு நாய்
கோயில் –
வாயிலிலும் வெளிகளிலும்
தவிர்க்க இயலாமல்
தவறாமல் காணக் கிடைக்கும்
இளைத்து நொந்த இரவலர்கள்
இவற்றினிடையே
நடைப் பயிற்சியாய்
வீட்டிற்கு வெளியே
விரியும் நிம்மதி தேடி
வீதிகளின் வழியே
விரிந்த வலிந்த சிரிப்போடு
விசாலமாய் உலாத்தும்
முதியோர் என்கிற
சீனியர் சிட்டிசன்ஸ்!!

About The Author

1 Comment

  1. suresukumaran

    நெடுஞ்சாலையில் பூத்த மலர்.
    நெடுஞ்சாலை நடுவில்
    அகல விரிந்த கண்களுடன்
    தலை தப்பிய சிறு நாய்..
    யரோ பாடம் பண்ணி வைத்தாற்போல்
    தலை தவிர அனைத்தும்
    நசுங்கிப் பாயாகி
    காட்சிப் பொருளென்றானது.

    கருணை உள்ளம் கொண்ட
    வாகன ஓட்டிகளோ
    தலை தவிர்த்து
    உடல் மிதித்து சென்றனர்.

    மலங்க விழிக்கும் நண்பா!
    இனி…
    நிமிர்ந்த தலை
    தாழ்த்தினாலே போதும்..
    சமன் செய்ய.

Comments are closed.