கிரீடத்தைக் கழட்டி வை (2)

பழனி சேர்வை. நம்ம எக்ஸ்ஸுடைய தேர்ச் சாரதி.

பழனி சேர்வையுடைய ஜல்ஜல் ஒற்றைமாட்டு வண்டியில் தான் தினமும் எக்ஸ்ஸுக்கு சவாரி. வண்டிக்குள்ளே எக்கச்சக்கமாய் இடமிருந்தாலும் முன்னால், வண்டிக்காரருக்கு சமமாய்க் கோஸ்பெட்டியில் உட்கார்ந்து காலைக் கீழே தொங்கப்போட்டுக் கொண்டு வருவது தான் எக்ஸ்ஸுக்குப் பிடிக்கும்.

பழனி சேர்வை ஒரு சிவாஜி ரசிகர்.

ஸ்கூலுக்குப் போகிறபோதும் வருகிற போதும் ரெண்டு பேரும் பேசிக் கொண்டே தான் போவார்கள். ரெண்டு பேருக்கும் பொதுவான சப்ஜெக்ட் சினிமா. ஆனால் தனக்குத் தெரிந்திருப்பதைக் காட்டிலும் சினிமா பற்றியும் சிவாஜி கணேசன் பற்றியும் இந்தச் சின்னப் பயலுக்கு அதிக விவரங்கள் தெரிந்திருப்பது பழனி சேர்வையைப் பொறாமைப் படுத்தும்.

போன ஞாயிற்றுக் கிழமை மெனக்கெட்டு மதுரைக்குப் போய்ப் பரமேஸ்வரி டாக்கீஸீல் ‘தூக்குத் தூக்கி’ பார்த்து விட்டு வந்திருந்தான் பழனி சேர்வை. அதை வைத்துத்தான் சாயங்காலம் இந்தச் சிறுவனை மடக்க வேண்டும்.

சாயங்காலம் பள்ளிக்கூட வாசலில் வண்டி பூட்டி ரெடியாயிருந்தது. நம்ம எக்ஸ் வண்டியில் ஏறுவதற்காக வந்த போது பின்னாலேயே ஓடிவந்தாள் ஸ்டெல்லா டீச்சர். எக்ஸுக்கு நடக்கவிருக்கும் டெஸ்ட்டைப் பற்றிச் சொன்னாள். நாற்பத்தெட்டு மணி நேரத்தில் எக்ஸ், ஜியாலஜி வகுப்புக்குத் தயார் பண்ணிக் கொண்டு வந்து, வெற்றிக் கொடி நாட்டி, எதிரிகள் முகத்தில் கரியைப் பூசி மகிழ வேண்டுமென்றாள்.

நாற்பத்தெட்டு மணி நேரம் அநாவசியம். நாளைக்குக் காலையிலேயே நான் ரெடி யென்று நெத்தியடி அடித்த எஸ்க்ஸைப் புளகாங்கித மிகுதியால் ஸ்டெல்லா டீச்சர், ஸ்கூல் வாசலில் வைத்தே இறுக்கிப் பிடித்து நெற்றியில் ஆவேசமாய் ஒரு முத்தம் பதித்தபோது, கழண்டு விழப்போன எக்ஸுடைய விசாலமான கண்ணாடியைப் பழனி சேர்வை மின்னல் வேகத்தில் வந்து காட்ச் பிடித்துக் காப்பாற்றினான்.

அடுத்த நாள், ஸிக்ஸ்த் பாம் வகுப்பறையில் எக்ஸுடைய க்லாஸ்க்கு ஏற்பாடாகியிருந்தது. வகுப்பு ஆரம்பிக்கு முன்னால், ஜியாலஜிக்குத் "தமிழ்ல என்னப்பு" என்று அம்புரோஸின் காதைக் கடித்தார் பாண்டியன்.

"மானத்த வாங்காதப்பு. வகுப்பக் கவனி" என்று அம்புரோஸ் தன்ஆசனத்தில் அமர்ந்தார்.

மாணவர்களாய்ப் பாண்டியன், குணசீலன், அம்புரோஸ், ராஜமாணிக்கம், மற்றும் ஸ்டெல்லா டீச்சர்.

ஸ்டெல்லா டீச்சருக்குப் பக்க பலமாய், கண்ணாடியணிந்த கமலா டீச்சர்.

ஆங்கிலமும் தமிழும் கலந்து க்லாஸ் எடுத்தான் எக்ஸ்.

"நம்முடைய பூமி, அதாவது எர்த்" என்று ஆரம்பித்தான். "நாம் வசிக்கிற இந்த பூமி, எழுபது சதவீதம் நீர்ப்பரப்பாலும், முப்பது சதவீதமே நிலப்பரப்பாலும் ஆனது" என்று கரும்பலகையில் எழுதினான். பிறகு, "பூமி என்றால் என்ன?" என்கிற கேள்வியை முன் வைத்தான்.

"பூமியானது, அதில் வாசம் செய்கிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாய் அர்த்தப்படுகிறது. ஓர் உழவனுக்கு, பூமியென்பது வளமான மண். சாலை அமைக்கிற தொழிலாளிக்கு, பூமி என்பது கடினமான பாறை. ஒரு கடல் மாலுமிக்கு, பூமி என்பது நாற்புறமும் நீர்ப்பரப்பு, ஓர்ஆகாய விமானிக்கு, பூமி என்பது கொஞ்சம் கடல், கொஞ்சம் மலை, கொஞ்சம் பச்சைப்பசேலென்கிற வயல் வெளி. வருங்காலத்தில் சந்திரமண்டலத்துக்குப் போகப் போகிற விண்வெளி வீரனுக்கு, பூமி என்றால் கோலப் பரப்போடு கூடிய ஒரு கோளம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் அர்த்தப்படுகிற பூமியைப் பற்றிய சரியான கணிப்பை யாரும் சொல்கிறார்களில்லை."

ஆரம்பமே அசத்தல்.

ஆசிரியர்கள் அசந்து போய் உட்கார்ந்திருக்க, நம்ப எக்ஸ், பூலோகத்திலிருந்து எம்பி, வான் வெளிக்குப் போனான். சூரியனை ஒன்பது கோளங்கள் சுற்றி வருகிற ஸோலார் ஸிஸ்டமைச் சொன்னான்.

அதைப் போல, பல கோடிக்கணக்கான ஸோலார் ஸிஸ்டம்களை உள்ளடக்கிய காலக்ஸியைப் பற்றிச் சொன்னான். இந்த காலக்ஸியைப் போல கோடானு கோடி காலக்ஸிகளை உள்ளடக்கிய யுனிவர்ஸைப்பற்றிச் சொன்னான். பிறகு திரும்ப பூலோகத்துக்குத் திரும்பினான்.

12 கோடி வருஷங்களுக்கு முந்தின க்ரிடாஷியஸ் காலத்துக்கும், 18 கோடி வருஷங்களுக்கும் முந்தின ஜுராஸிக் காலத்துக்கும், 35 கோடி வருஷங்களுக்கு முந்தின மிஸிஸிப்பியன் காலத்துக்கும், இவன் முன்னால் வாய் பிளந்து உட்கார்ந்திருந்த அனைவரையும் அழைத்துப்போய்த் திரும்பக் கொண்டு வந்து விட்டான்.

நிலநடுக்கம் மற்றும் பூகம்பங்கள் பற்றிய விளக்கங்களைப் புட்டுப்புட்டு வைத்தான்.

வாசலில் நின்று இந்தக் காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஹெட்மாஸ்டருக்கும் கரஸ்பாண்டன்ட்டுக்குமிடையே கிடைத்த இடைவெளியில் முகத்தை நுழைத்து இளங்கண்ணன் சிரித்துக் கொண்டிருந்தார். அம்புரோஸும் பாண்டியனும் உள் வெப்பத்தில் பொருமிக் கொண்டிருக்க, ஸ்டெல்லா டீச்சருக்குப் பெருமையோ பெருமை.

வேறே வழியில்லாமல் நம்ப எக்ஸின் மேன்மை ஏகமனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவனுக்கு டபுள் ப்ரமோஷன் என்பது உறுதி செய்யப் பட்டது.

அதன் பிறகு, எஸ்.எஸ்.எல்.ஸிக்கு அண்டர் ஏஜ் என்று எக்ஸ் ஒரு வருஷம் காத்திருந்தது, அவன் எஸ்.எஸ்.எல்.ஸி. எழுதின வருஷம் மாநிலத்திலேயே முதல் மாணவனாய்த் தேறி, செட்டியார் ஸ்கூலின் பேரை நாடறியச் செய்தது, அம்புரோஸ், பாண்டியன் உட்பட எல்லாஆசிரியர்களும் மனம் மாறி எக்ஸைக் கொண்டாடியது, எக்ஸ் பள்ளியை விட்டுப் போன போது ஸ்டெல்லா டீச்சர் அவனைக் கட்டிக் கொண்டு குமுறிக் குமுறி அழுதது, எல்லாம் ஐம்பது வருஷப் புராதனக் கதை.
புராதனம் என்றால் பழசு என்று அர்த்தமல்ல. பழம் பெருமை வாய்ந்தது என்று அர்த்தம்.

சரி, இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டு.

"என்னுடைய புத்திக் கூர்மையாலும் திறமையாலும் ஐ.ஏ.எஸ். தேறி மாநில அரசிலும் மத்திய அரசிலும் பல உயர்ந்த பதவிகள் வகித்து, பலருடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு, பிறகு ரிட்டயராகி, இதோ நான் என்னுடைய பேரக் குழந்தைகளோடு உட்கார்ந்திருக்கிறேன், சென்னையில், ஷெனாய் நகரில்.

நான் என்றால் யார்?

நான் தான் உங்கள் எக்ஸ்."

இந்தப் பேரக் குழந்தைகளுக்கு இந்த எக்ஸ் கதை சுவாரஸ்யமாகவே இல்லை. "இந்த ஜியாலஜி சமாச்சாரம் எல்லாம் இப்ப கம்ப்யூட்டர்ல இருக்கே தாத்தா" என்றான் ஒருவன்.

"இன்ட்டர்நெட்டுக்கு உள்ள போனா ஒங்களுக்கு என்னென்ன வேணுமோ அதெல்லாம் கெடைக்குமே." 

"பதிமூணாம் வாய்ப்பாடு கூட."

"கம்ப்யூட்டர்லயும் இன்ட்டர்நெட்லயும் இல்லாத விஷயமே ஒலகத்துல இப்ப கெடையாது தாத்தா."

"ஏன் தாத்தா, நீங்க ஸ்கூல்ல படிக்கிற காலத்துல கம்ப்யூட்டர் கெடையாதா?"

"நீ ஒண்ணு, பாட்டி சொன்னாங்க, தாத்தா படிக்கிற காலத்துல கால்க்குலேட்டரே கெடயாதாம், அப்புறம் எங்க கம்ப்யூட்டர்!"

"தாத்தா ஒங்களுக்குக் கம்ப்யூட்டர் தெரியுமா தாத்தா? நா வேணா கத்துத்தறேன் தாத்தா."

தப்பு. இந்த வாண்டுகளிடம் வாயைக் கொடுத்து என்னுடைய வீரப் பிரதாபங்களைப் பிரஸ்தாபித்ததே தப்பு.

தப்பித்தாக வேண்டும் இங்கேயிருந்து உடனடியாய். தப்பிக்க யத்தனித்த போது ஒரு வாண்டு கிண்டலாய்க் கேட்டது, "தாத்தா, கம்ப்யூட்டருக்கு ஸ்பெல்லிங்காவது ஒங்களுக்குத் தெரியுமா தாத்தா?"

"ஹ. பெரிய கம்ப்யூட்டர்! பெரிய ஸ்பெல்லிங்!"

வாண்டுகளை நோக்கி வீரத்துடன் திரும்புகிறேன். வாயைத் திறக்குமுன் வாய்க்குள்ளே சொல்லிப் பார்த்துக் கொள்கிறேன் ஸ்பெல்லிங்கை.

கடைசி ரெண்டு எழுத்து உதைக்கிறது. ஓ ரா அல்லது இ ரா? இ ரா அல்லது ஓ ரா?

ம்ஹூம். எட்டவில்லை.

என்னுடைய அவஸ்தையைப் பார்த்து என் பத்தினி என் உதவிக்கு வருகிறாள்.

"கொழந்தைங்களா, எல்லாரும் ஹோம் ஒர்க் செஞ்சாச்சா, போங்க போய்ப் படிக்க ஒக்காருங்க. தாத்தா படுக்கப் போறார்."

பிறகு என்னிடம் சொல்கிறாள்:

"ஒங்க காலம் மாதிரி இல்லிங்க இது, இந்த ஜெனரேஷன் வேற. இப்ப ஒவ்வொரு கொழந்தையும் ஒரு ஜீனியஸ். ஒவ்வொண்ணும் ஒரு ப்ராடிஜி. ஒங்க பழம் பெருமைய நீங்க இந்த இளைய தலைமுறைகிட்ட பேசிட்டிருக்காதீங்க."

ஆமாம். இவள் சொல்வது உண்மைதான். இது அறிவு செறிந்த ஒரு தலைமுறை. பிரகாசமான தலைமுறை. இந்தத் தலைமுறையின் ஒவ்வொரு குழந்தையும் ஒரு மேதை.

நான் பின்புறந் திரும்பி, இந்தியாவின் இளைய தலைமுறையைப் பெருமை பொங்கப் பார்க்கிறேன்.
மனசுக்கு ரொம்ப உற்சாகமாயும் சந்தோஷமாயுமிருக்கிறது.

(ஆனந்த விகடன், 15.12.2002)

About The Author