கும்பகோணம் காட்சிகள் ஜூலை 2004 (2)

வாத்தியாருங்க எல்லாம்
எங்கே போனாங்க
பிள்ளைகளைவிடத்
தப்பிக்கிற அறிவு
அதிகமா இருந்ததாலே
தப்பிச்சுட்டாங்களோ?

அவர்கள் கைகளில் இருந்த
இந்தியாவின்
வளமான எதிர்காலத்தைப்
பாதுகாக்க ஓடிவிட்டார்களோ
.

கருகிய பிஞ்சுகளின்மேல்
கட்சிக்கொடி போர்த்தி
எதிர்க்கட்சியைத் தூற்றி
மேடை முழக்கம்
பெரும் சாலை கோசம்

அடப்பாவிகளா
என்னிக்குத்தான்டா உங்க
வியாபாரத்தை நிறுத்துவீங்க
இன்னிக்காச்சும்
விடுமுறை விடக்கூடாதா

*

கல்விதேடும் பிள்ளைகளைக்
காசுதேடும் பள்ளிகள்
கண்மூடிக் கொளுத்த

உதிரத்தில் உறவுநெய்து
உயிர்விட்டு உயிர்வளர்த்துப்
பறிகொடுத்த உயிர்க்கெல்லாம்
பதிலென்று ஒன்றில்லை

*

வீடெங்கும் ஒப்பாரி
வீதியெங்கும் கருமாதி

இந்தக்
கறுப்பு நெருப்பு எரிப்பு நாளை
பள்ளிகளின்
பாதுகாப்புத் தினமாக அறிவித்து
ஆவன செய்ய ஆணையிடுகிறது
மௌனத்தில் எரியும்
இதயம்

(ஜூலை 16, 2004 கும்பகோணம் தனியார் பள்ளியில் இடம்பெற்ற
தீவிபத்தில் கிட்டத்தட்ட 100 குழந்தைகள் பரிதாபமாய் உயிரிழந்தனர்)

‘பச்சை மிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author