குறிக்கோளை அடைய குறுக்கு வழி

ஆழ்மனதின் ஆற்றல் பற்றி எவ்வளவோ படித்திருப்பீர்கள். அந்த ஆற்றல் நம் வாழ்க்கையை ஆக்கவும்; உதவும் அழிக்கவும் செய்யும். ஆழ்மனதின் நம்பிக்கைகளை ஒட்டியே நம் வாழ்க்கை அமைகிறது. பகீரதப் பிரயத்தனப்பட்டும் உங்கள் குறிக்கோளை நீங்கள் அடையமுடியவில்லை என்றால் அதற்கு உங்கள் ஆழ்மனதிலுள்ள குறுக்கும் நம்பிக்கைகளே காரணமாக இருக்கும்.

‘என் ஆசைகள் எப்போதுமே நிறைவேறுவதில்லை’
‘நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி’
‘வாழ்க்கையில் முன்னேற அதிர்ஷ்டம் தேவை’

போன்ற நம்பிக்கைகள் ஆழ்மனதில் இருக்கும் பட்சத்தில் எதிர்மறையான எண்ணங்களே தோன்றும்.

நம்பிக்கைகள் எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றன. எண்ணங்கள் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. எண்ணங்கள் எதிர்மறையாக இருந்தால் நீங்கள் விரும்புவதற்கு நேர்மாறாகவே விளைவுகள் இருக்கும்.

ஆழ்மன நம்பிக்கைகளை ஆராய்ந்து அவற்றை மாற்றுவதற்கு மிகுந்த பொறுமையும் விடாமுயற்சியும் தேவை.

ஆனால், அதற்கான குறுக்கு வழி ஒன்று உண்டு. தகுந்த விளைவுகளை வலிந்து உருவாக்குவதன் மூலம் எண்ணங்களை மாற்றலாம். எண்ணங்கள் மாறினால் நம்பிக்கைகள் மாறும். இந்தப் பாஸிடிவ் அதிர்வுகள் மேலும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது உங்கள் இலக்கு சுலபமாக எட்டக் கூடியதே என்று உங்கள் ஆழ்மனம் நம்பிவிட்டால், உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான வழிகளை அது தானாகவே கண்டுபிடிக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டுமெனெப் பார்ப்போம்.

1. முதலில் உங்களது இலக்கு என்ன என்பதைத் தெளிவாக எழுதுங்கள்
எ.கா: சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும்

2. உங்கள் இலக்கினை நீங்கள் எட்டிவிட்டால் உங்கள் வாழ்க்கை முறையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்பதைப் பட்டியலிடுங்கள்

எ.கா: அ) ஸ்போர்ட்ஸ் கார் வைத்திருப்பேன்
        ஆ) டிஸைனர் ஷர்ட்ஸ் அணிவேன்
        இ) வைர மோதிரம் அணிந்திருப்பேன்
        ஈ) எப்போதும் பாக்கெட்டில் பத்தாயிரம் ரூபாய் வைத்திருப்பேன்
        உ) ஒரு குழந்தையின் படிப்புக்கு உதவுவேன்
        ஊ) பார்க்காத ஒரு இடத்துக்கு மாதமொருமுறை பயணிப்பேன்
        எ) இரண்டு மொபைல் ஃபோன்கள் வைத்திருப்பேன்
        ஏ) வங்கிக் கணக்கில் 10 லட்சம் ரூபாய் சேமிப்பு எப்போதும் இருக்கும்
        ஐ) பெற்றோருக்கு வசதிகள் செய்து தருவேன்

3. இந்தப் பட்டியலிலிருக்கும் மாற்றங்களை தற்போதைய நிலையில் எவ்வளவு சுலபமாக உங்களால் செய்யமுடியும் என மதிப்பிடுங்கள். (10 – வெகு சுலபம்; 1 – மிகக் கடினம்). உதாரணத்துக்கு, வைரமோதிரம் வாங்கி நீங்கள் அணிவது உங்களின் தற்போதைய பொருளாதார நிலையில் எவ்வளவு சுலபம் என மதிப்பிடுங்கள். வைரமோதிரம் என்றுதான் எழுதியிருக்கிறீர்களே ஒழிய, எவ்வளவு பெரிது என்று கணக்கொன்றும் இல்லாததால், ஆகக் குறைந்த விலையில் ஒரு வைரமோதிரம் வாங்குவது உங்கள் பட்ஜெட்டில் பெரிய பிரச்சினை ஒன்றையும் ஏற்படுத்தாது என்பதால் அதற்கு 6 மதிப்பெண்கள் தரலாம்.

ஒரு ரூபாய் நன்கொடையாகத் தந்து கூட ஒரு குழந்தையின் படிப்புக்கு உதவலாம். எனவே அதனை அடைவது மிக சுலபம். பார்க்காத இடத்துக்கு மாதமொரு முறை பயணிப்பதும் எளிதில் சாத்தியப்படும் விஷயமே. எவ்வளவு தொலைவு பயணிக்கிறீர்கள் என்பது உங்கள் பர்ஸின் கனத்தைப் பொறுத்தது. சென்னையிலிருந்து கொண்டே செயின்ட் தாமஸ் மலை உச்சிக்கு இதுவரை ஏறியதில்லை என்றால் அது கூட ஒருவகையில் புதிய பயணம்தான்.

எ.கா:
        அ) ஸ்போர்ட்ஸ் கார் வைத்திருப்பேன் – 1
        ஆ) டிஸைனர் ஷர்ட்ஸ் அணிவேன் – 7
        இ) வைர மோதிரம் அணிந்திருப்பேன் – 6
        ஈ) பாக்கெட்டில் பத்தாயிரம் ரூபாய் வைத்திருப்பேன் – 5
        உ) ஒரு குழந்தையின் படிப்புக்கு உதவுவேன் – 10
        ஊ) ஒரு புது இடத்துக்கு மாதமொருமுறை பயணிப்பேன் – 10
        எ) இரண்டு மொபைல் ஃபோன்கள் வைத்திருப்பேன் – 8
        ஏ) வங்கிக் கணக்கில் 10 லட்சம் ரூபாய் சேமிப்பு எப்போதும் இருக்கும் – 2
        ஐ) பெற்றோருக்கு வசதிகள் செய்து தருவேன் – 10

4. நீங்கள் எளிதாக செய்யக் கூடிய மாற்றங்களை அடையாளம் கொண்டுவிட்டீர்கள். நேரம் கடத்தாமல் அவற்றை செயல்படுத்த ஆரம்பியுங்கள்.

எ.கா: அ) மாதம் உங்களுக்கு வசதியான ஒரு குறிப்பிட்ட தொகையை ஏதேனும் சேவை நிறுவனத்துக்கு அனுப்பி ஒரு குழந்தையின் படிப்புக்கு உதவ ஆரம்பியுங்கள். எவ்வளவு அனுப்புகிறீர்கள் என்பது முக்கியமல்ல.
        ஆ) மாதமொருமுறை வார இறுதிகளில் அருகிலிருக்கும் ஒரு புதிய இடத்துக்குப் பயணப்படுங்கள்.
        இ) இரண்டு சாதாரண சட்டைகளுக்குப் பதிலாக ஒரு டிசைனர் சட்டை வாங்குங்கள்
        ஈ) பாக்கெட்டில் இப்போது ஐநூறு ரூபாய் வைத்திருந்தால் ஆயிரம் ரூபாயாக அதிகரியுங்கள். கூடுதலான ஐநூறு ரூபாயை செலவு செய்ய வேண்டுமென்பதில்லையே!

இப்படி உங்கள் இலக்கினை எட்டியபிறகு இருக்கும் வாழ்க்கை சூழலை நீங்கள் கொஞ்ச கொஞ்சமாய் ஏற்படுத்த ஆரம்பித்தீர்களானால், உங்கள் எண்ணங்களில் மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள். முன்பு தொழில் தொடங்குவதை நினைத்தவுடன் ‘அந்த வாய்ப்பு எனக்கு இந்த ஜென்மத்தில் கிடைக்குமா தெரியவில்லை’ என்ற எண்ணம் ஏற்பட்டிருக்குமாயின் இப்போது ‘அதொன்றும் பெரிய காரியமில்லை. கொஞ்சம் தாமதமாகிறது. அவ்வளவுதான்’ என்று எண்ணத் தோன்றும்.

இப்படிப்பட்ட எண்ணங்கள் எழுமாயின் ஆழ்மனதுக்கு உங்கள் இலக்கு மலைப்பாகத் தெரியாது. விருப்பங்கள் நிறைவேறும் வழிகள் தானாகத் திறப்பதைக் காண்பீர்கள்.

அதற்காக கடன் வாங்கி பட்டியலிலிருக்கும் எல்லாவற்றையும் உடனேயே செயல்படுத்த நினைப்பது சரியல்ல; அது ஆழ்மனத்தில் அபாயமணியை எழுப்புமே தவிர நம்பிக்கையை ஏற்படுத்தாது. எனவே சின்னச் சின்ன மாற்றங்களை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்துங்கள். மாறுதல்களை நிச்சயம் காண்பீர்கள். 

About The Author

2 Comments

Comments are closed.