சாகசம்

புதிய ஊர், புதிய மனிதர்கள் என்று சுற்றித் திரிகிறதில் என்னவோ ஒரு பிரியம். காலில் சக்கரம் போல் எங்கும் நிற்காமல் பதினெட்டு வருடம் ஓடிவிட்டதை நினைக்கவே சிவசண்முகத்துக்கு ஆச்சர்யமாய் இருந்தது. எப்பவாவது ஊர் நினைப்பு வரும். நடேசமூர்த்தி சைக்கிளை ஓசி வாங்கி, அதில் பல்டி முதல் கைவிட்டு ஓட்டுவது வரை அநேக வித்தைகள் பழகியது… நடேசமூர்த்தியே பயந்துவிட்டான். சைக்கிள் உயரங்கூட இல்லாமல், ஆளே சராசரிக்குக் கொஞ்சம் கட்டைகுட்டையாய் உருண்ட தேகம், எப்படி சைக்கிளில் வித்தைகள் பழகினான் தைரியமாய்!

படிப்புதான் ஏறவில்லை. ரெண்டு காதிலும் துளை வைத்த ஆண்டவனே பிழை செய்தவன். மனசுள் எதுவும் தங்கவில்லை. எத்தனை உயர மரத்திலும் விறுவிறுவென்று மேலேறித் தேனெடுத்தான். தேங்காய் பறிக்க, கிணற்றுக்குள் விழுந்த வாளியை இறங்கி எடுக்க என்று ஊர் மொத்தத்துக்கும் உபகாரம், தன் வீட்டுக்குதான் சல்லிக்குப் பிரயோசனமில்லை. அப்பா அடிப்பிரியர். ஒன்று அவர் அடிப்பார்; இல்லை, அடி வாங்கிக்கொண்டு முகம் வீங்க வீடு திரும்புவார்.        

பிள்ளையாவது உருப்படுவான் என்று நினைத்துக் கனவு கண்ட அம்மைக்கு முகத்தில் கரி பூசினான் சிவசண்முகம். அப்பாவுக்குப் பயந்து பஜனை மடத்தில், ஆற்றங்கரை மண்டபத்தில், ஆல நிழலில் படுத்துறங்குதல் வாடிக்கை என்றாயிற்று. அம்மா தேடி வருவாள், அழுதபடிக் கூட்டிப் போவாள். அம்மா சிரித்துப் பார்த்த ஞாபகம் இல்லை. நான் மாட்டாவிட்டால், ஒருவேளை அப்பா அவளை அடிப்பாராய் இருக்கும். பரிட்சையில் தோற்று வீடு திரும்ப மனசில்லாமல் வெளியேறிய அந்தக் கணம், இனி அம்மா மாட்டிக் கொள்வாள்… வேறு வழியில்லை என்று வருத்தமாய் இருந்தது.

ஆனால் வெளிக்கிளம்பிய பரவசம். நிஜத்தில் இந்தப் பரிட்சை, அதன் முடிவு என்று அவன் காத்திருந்திருக்க வேண்டியதில்லை. தலைகோதும் புதிய காற்றின் ஆசுவாசம். இயற்கை பிரியமானது. பசி – மானுடத்தின் பெரும் பிரச்சினை அது. அதைக் கடந்தவர்கள் ஜெயிக்கிறார்கள் என்று அவன் புரிந்துகொண்டான்… அட அந்த வயதில்.

பள்ளிக்கூடம் இல்லாவிட்டால் என்ன, காலம் கற்றுத் தந்தது பாடங்கள். எதுவும் சாப்பிடக் கிடைக்காமல் தொடர்ச்சியாய்த் திகைத்த நாட்கள், நான் பிச்சைக்காரன் அல்ல, அல்ல – என்று தனக்குள் கதறிய நாட்கள் அவை. ஏதோ ஊர், கோவில் திருவிழா என்று கேள்விப்பட்டு, இலவசச் சாப்பாடு சுகம் கண்டு அங்கேயே அந்த வாரம் முழுதும் வேடிக்கையும் கூத்துமாய்க் கழித்த நாட்கள்.

விதவிதமான வண்ணங்களில் ஷர்பத், அதன் பேரே கலர்தான். சிலம்பாட்டம், குத்துச்சண்டை, கோழிமுட்டு – ஆடுமுட்டு என முரட்டுத்தனமான போட்டிகள்.

‘கிங் சர்க்கஸ்.’ வசீகரமான எதோ எம்ஜியார் பாட்டுடன் வரவேற்பு. டிக்கெட் கௌண்ட்டரை நோக்கிச் சிறுவர் பட்டாள உற்சாகம். நெடும்பட்டைகளாய் அடர்சாயத்தில் கூடாரம். அடுக்கிய கிறிஸ்தவ மெழுகுவர்த்தி போல. உச்சியைக் குடுமிக் கூம்பாகக் கட்டி, காற்றுக்கு அது விம்மியடங்குவதைப் பார்க்க மனசே பொங்கியது.

காட்சிகள் துவங்க, வெளியே பொழுது போகாமல் காத்திருந்தான். உள்ளே கோமாளியின் கூத்துக்குப் பையன்களின் ஊளைச்சிரிப்பு. வாசலில் டிக்கெட் கிழிக்கிறவன் அவனைப் பார்த்தான். "சர்க்கஸ் பார்க்கணுமா?" என்றான் புன்னகையுடன். அனுமதித்து விடுவான் போலிருந்தது.

"இல்ல, சேரணும்…" என்றான்.

மறுநாள் காலையில், ஏழு மணிக்கே சர்க்கஸ் பயிற்சிகள் துவங்கிவிட்டன. வெளி மணல்வெளியில் யானையைப் பெரும் குழாய்த் தண்ணீரைப் பீய்ச்சி ஒருவன் குளிப்பாட்ட, சுகமாய்க் காட்டிக்கொண்டிருந்தது. நீளக் கழுத்தசைத்து, முகத்தை நீட்டியபடி அசைபோடும் ஒட்டகம். அது வேறு உலகமாய் இருந்தது. வித்தை மாஸ்டர் சிவாஜி, அவரே கோமாளி வேஷம் போடுவார். அவர்முன் சைக்கிளில் பல்டி அடித்துக் காட்டினான். "பார்" என்றபடி அவர் சைக்கிளில், வந்தவேகத்தில் ஒரு தவ்வு பல்டி அடித்து தரையில் ஊன்றித் தடுமாறாமல் நின்றார். அசந்துவிட்டான்.

"செய்யறியா?" – தெரியாது, என்று வெட்கத்துடன் தலையாட்டினான். அவனைத் துள்ளச் சொல்லித் தான் பிடித்துக்கொண்டு ரெண்டுமுறை இறக்கி விட்டார். மூணாம்முறை விட்டுவிட்டார். தடுமாறி விழுந்தான். "வலிக்குதா?" – இல்லை, என்று தலையாட்டினான். அடுத்தமுறை சரியாய்ச்செய்ய முடிந்தது. பயம் போய்விட்டது.

அப்போது வயது பதினொண்ணு. பதினேழு, பதினெட்டு வருடங்கள் கடந்திருந்தன. எத்தனை வித்தைகள் கற்றுத் தேர்ந்து விட்டான்! சிவாஜி மாஸ்டரே ஓய்வு எடுத்துக்கொண்டு அவனை முன்னுக்குத் தள்ளி விட்டார். இத்தனை சிரத்தையாய்க் கற்றுக்கொள்ள அவர் காலத்தில் ஆள் கிடைத்த மகிழ்ச்சி அவருக்கு. டவுசரும் இல்லாமல் பேன்ட்டும் இல்லாமல் முக்கால் அளவில் ஒரு சராய். அதன் விநோதப் பட்டித் தொங்கல்கள். மூக்கில் ஒட்ட வைத்த எலுமிச்சை அளவு பிளாஸ்டிக். கண் மை, கன்ன ரவுஜ் என்று பார்க்கவே பிள்ளைகள் ஹூவென்று கொந்தளித்தார்கள்…

ஆள் இல்லையென்றால் அரிதாரம் அழித்து வளையத்துக்குள் முதலில் நாய் பாய, பின்னாலேயே அவனும் பாய்வான்.
யானைகளை, சிங்கங்களை வைத்து ரிங் மாஸ்டரோடு ஊடே ஊடே போய்ப் பயந்தாப்போல வேடிக்கைகள் செய்வான்.
நகைச்சுவைப் பேச்சு காட்சிக்குக் காட்சி மாறிக்கொண்டேயிருக்கும். இந்தி, மராட்டி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று எத்தனை பாஷைகள் தெரிந்து கொள்ள நேர்ந்தது! பள்ளிக்கூடத்தை விட அதிகம் படிக்க, தெரிந்துகொள்ள நேர்ந்தது. சிவாஜி மாஸ்டருக்கு மொத்தம் 18 பாஷை தெரியும் என நினைக்க ஆச்சர்யம்! அந்தந்த மாநிலத்தில் அந்த பாஷை பேச வேண்டியிருந்தது. பாஷை தெரியாத மாநிலம் என்றால் உள்ளூர் ஆள் ஒருத்தனிடம் மைக் கொடுத்துப் பேசச் சொல்லி விடுவார்கள். காட்சிகள் மௌனமாய் நடக்கும்… அந்தப் பாஷையின் முக்கிய வார்த்தைகள் – நன்றி மீண்டும் வருக, போலப் பேசிக் கைதட்டல் பெறுவார்கள்.

சக்கரம் பெரும் சுற்றாய்க் கீழிறங்கிய கணம் அது. அடிவயிற்றுக் குளிருடன் அதை ரசித்தான். சர்க்கஸ் வண்டி பத்து மைல் நெருக்கத்தில் வரும்போதே தன் ஊர்க்காற்றின் பரவசம் தாள முடியவில்லை. சிரிப்பில் கண் பனித்து விட்டது. பதினெட்டு வருடங்களில் ஊர் எத்தனைக்கு மாறியிருக்கும் தெரியவில்லை.

அம்மாவைப் பார்க்கிற வேகத்தில் நெஞ்சு படபடத்தது. எப்பவாவது கையில் காசு தங்கினால் அம்மா பெயருக்குப் பணம் அனுப்பி வைப்பான். சர்க்கஸ் வேலை என்று மனசு நிலைப்பட்டதும் உடனே அம்மாவுக்கு (அப்பாவுக்கு அல்ல) ஒரு வரி எழுதத் துடிப்பாய் இருந்தது. என்றாலும் கட்டுப்படுத்திக்கொண்டான். கொஞ்ச நாள் போகட்டும், போகட்டும் என்று தள்ளிபோட்டுக் கொண்டே வந்தான். வேலை, சம்பளம் என்று சிறுகச் சிறுகச் சேர்த்து இருநூறு ரூபாய் சேர்ந்ததும், சட்டென்று மனம் விழித்தது. அம்மாவுக்கு முதன்முதலில் பணம் அனுப்பப் போகிறேன். மனசெல்லாம் பூத்துச் சிரித்தது… பணம் அல்ல, அதில் அம்மா அவன் முகத்தைத்தான் பார்ப்பாள் என்பது தெரியும். அப்போது எந்த ஊரில் இருக்கிறான் என்று எழுதுவான். நான் நலம். மீண்டும் பணம் சேர்த்து, எவ்வளவு முடியுமோ அனுப்பி வைக்கிறேன்…

சர்க்கஸ் கோமாளி மணியார்டர் பண்ண தபால் ஆபிஸ் வந்ததில் எல்லாரும் சிரித்தார்கள். கூடவே அவனும் சிரித்தான் சந்தோஷமாக. முதலாளி அனுமதி தந்தால் ஒரு எட்டு போய்ப் பார்த்துவிட்டு வரலாம்… சர்க்கஸ் கம்பெனியில் விடுமுறை என்று கிடையாது. ஓய்வு கிடையாது. எல்லாரும் கடுமையாக உழைத்தார்கள். மிருகங்கள் உட்பட தினசரி மூன்று காட்சிகள் வேலை செய்தன. சுற்றுவட்டாரப் பள்ளிக்கூடங்களில் முதலாளி போய்ப் பேசி மொத்தமாய் சகாய விலையில் டிக்கெட் தந்து சிறப்புக் காட்சி கூட உண்டு. சரவணனின் கல்யாணத்தன்றைக்குக் கூட விடுமுறை இல்லை. சைக்கிள் வித்தை செய்யும் ரம்யாவையே அவன் கல்யாணம் செய்துகொண்டான். முதலாளி முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்ட எளிய கல்யாணம். பின்னிரவுக் காட்சி முடிந்தபின்தான் சரவணன் அரிதாரம் அழித்து முதலிரவு என்று கித்தான் அறைக்குள் ஒதுங்கினான்… விடுமுறை என்றால் வித்தை செய்யும்போது யாருக்காவது அடிபட்டு இரத்தம் தெறிக்க ஆஸ்பத்திரி போனால்தான். அடிபடாதது போல, அது வேடிக்கை என்கிறாப்போல உடனே இவன், உள்ளுக்குள் அழுதபடி, வேடிக்கை செய்வான். "மோட்டார் பைக்கை கூண்டுக்குள்ள ஓட்டச் சொன்னா – டிக்கிக்குள்ளியே விட்டுட்டான்…" கூட்டம் சிரிக்க, "இப்ப நான் ஓட்டறேன்" என்று தடுமாறுகிறாப்போல ஆனால் திறமையாய் ஓட்டிக் காட்டுவான் சிவசண்முகம். பின்வாசல் வழியாக வண்டியில் ஏற்றி, அடிபட்ட ஆளை ஆஸ்பத்திரிக்கு முதலாளி கூட்டிக்கொண்டு ஓடிக் கொண்டிருப்பார்.

அந்த ஒருமாதம் அடிபட்டவனுக்கு ஓய்வு!
காலம் உடலை முறுக்கேற்றியிருக்கிறது. அதிகம் பேசாத, கூச்சமான அந்தப் பையன் இல்லை இப்போது. மீசை தாடியெல்லாம் ஒரே இம்சை. தினசரி ஷேவ் எடுக்க வேண்டும். அம்மா எப்படி இருப்பாள் தெரியவில்லை. அந்தப் பக்கங்களில் வந்தாலும், இதுவரை ஊருக்கு இவ்வளவு கிட்டத்தில் டேரா போட்டதில்லை. காலையில் ஒருநாள் பயிற்சியைத் தவிர்த்துவிட்டு ஒருநடை போய்ப் பார்த்துவிடத் துடிப்பாய் இருந்தது. சிவாஜி மாஸ்டர் சிரிப்புடன் தலையைத் தடவிக் கொடுக்கிறார். "நான் எங்க ஊருக்குத் திரும்பிப் போனப்ப அம்மா செத்துப் போயிருந்தாங்க…" என்கிறார். "நீ அதிர்ஷ்டக்காரன் சம்முவம்!"

வித்தை செய்கிற மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு அம்மாவைப் பார்க்கப் போனான். ஊர் எல்லையில் அஞ்சு கிலோமீட்டர் தொலைவில் டேரா போட்டிருந்தார்கள். ரெண்டு கிராமத்தின் நடு எல்லைதான் கூட்டம் சேர்க்க வசதி. டபடப என்று அதன் சத்தமே வெடிச் சத்தமாய் வித்தியாசமாய் இருந்தது. கூடாரம் இறக்கி முளையடித்துக் கொண்டிருந்தார்கள்.

தெரு மாறவேயில்லை. வாசலில் ஐயா உட்கார்ந்திருந்தார். உடல்கட்டு தளர்ந்து மிகுந்த அலுப்பாய் இருந்தார். முரட்டுத்தனம் விலகி விட்டால் செத்துத் தொலையலாம், இனி என்னத்துக்கு இன்னமும் வாழ்க்கை இழுத்துக் கொண்டு கிடக்கிறது என்கிறாப்போல. கண் பார்வை அத்தனைக்கு இல்லை அவருக்கு… என்றாலும் "சிவு!…" என்று பரபரப்புடன் வந்தாளே அம்மா! "எய்யா யாரு வந்திருக்காக பாரும்…"

"ம்" என்றார் ஐயா. அவரால்தான் விரட்டப்பட்டான் அவன் என்கிற குற்ற உணர்வின் நெருடல். அதெல்லாம் பழைய கதை என்றிருந்தது அவனுக்கு.

"அம்மா பக்கத்தூர்ல… கிங் சர்க்கஸ்… எங்கதுதாம்மா. அதுலதான் நான் இருக்கேன்…" என்கிறான் அவள் கையைப் பிடித்துக் கொண்டே. அவன் தோளில் சாய்ந்தபடி அழும் அம்மாவைப் பார்க்க அவனுக்கு ஆனந்தமாய் இருக்கிறது.

"ஊர்ல எல்லாப் பயலுவளும் என் நடிப்பை அப்பிடிச் சொல்றாங்க. எங்க சிவாஜி மாஸ்டருக்குப் பிறகு நான்தான் மெய்ன். எல்லா வித்தையும் செய்வேன்…"

நடிப்புல சிவாஜிக்கு அப்புறம் நான்தான்!

"ரொம்ப சந்தோசம்டா" என்கிறாள் அம்மா. அவளுக்குப் பேசவே வாயில்லை. பையனைப் பார்த்ததே பெரிய விஷயமாய் இருந்தது.

"நாளைக்கு வந்து பாரும்மா! எய்யா, நீரும் வாரும்" என்றான்.

அப்பா ஏனோ வரவில்லை. அம்மா முன் வித்தைகள் செய்வது அதுவே முதல் முறை என்பதால் சந்தோஷமாய் இருக்கிறது.

உள்ளே கூட்டிப்போய் முதலாளி முதல் சிவாஜி மாஸ்டர் வரை எல்லாரையும் அறிமுகம் செய்தான்.

உள்ளேயே தனியே அவளை உட்கார வைத்தார்கள். பபூன் வேஷத்தில் அவனைப் பார்க்க அம்மா விழுந்து விழுந்து சிரித்தாள்.

உற்சாகமாய் ஊஞ்சலில் தாவியேறும் போது சர்ரக்கென்று விழுந்து விடுகிறாப்போலப் பாசாங்கு செய்து விநாடி நேரத்தில் சுதாரித்து ஏறினான்.

கூட்டம் ஒரு விநாடி திகைத்துப் பின் வியந்து கைதட்டியது.

கைதட்டலுக்குச் சந்தோஷப்படுவாள் அம்மா என்று நினைத்தான்.

அடுத்த காட்சி. சிவாஜி மாஸ்டர் அவன் தலையில் பூசணிக்காயை வைத்துச் சுடுவது போலப் பாவ்லா செய்தார். பயந்து அவன் "விட்ருங்க மாஸ்டர், விட்ருங்க மாஸ்டர்" எனக் கதறி அழ வேண்டும். படார்! அவன் நெஞ்சுக்குள்ளிருந்து சிவப்பு மையைப் பீய்ச்சி மயங்கி விழுந்தான். கூட்டம் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது.

"ஐயோ என் பிள்ளைக்கு என்னாச்சி?" என்று அம்மா சர்க்கசுக்குள் ஓடி வந்தாள்.

About The Author