சாபம்

இவ்வளவு நாள் கழித்து பைரவியை ஒரு திருமண வீட்டில் சந்திப்பேன் என்று நினைக்கவேயில்லை. கணவன் மற்றும் மகனோடு அங்கு வந்திருந்தாள். எனக்கு முதலில் அவளை அடையாளம் தெரியவில்லை. அந்த அளவிற்கு அவள் உடல் மாற்றம் கொண்டிருந்தது. அதிக எடை போட்டிருந்தாள். மலர் போன்ற அவள் முகம் இப்போது வெறும் சதைத் திரட்சியாக மாறிவிட்டிருந்தது. அவள் கண்களைச் சுற்றிச் சுருக்கங்களும், வெளிர்ப்பும் பார்க்க விகாரமாயிருந்தது. அவள் உடைகூட நல்லதாக இல்லை. அவள் கணவன், அவளருகில் நிற்பதைத் தவிர்த்து அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பதாகப்பட்டது. அவள் மகனோ கையில் செல்போனை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். பைரவி எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் என்னை அடையாளம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நான் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். என் நினைவுகளில் பதிந்திருக்கும் பைரவி இவள் இல்லை எனப்பட்டது.

என் பருவத்தில் பைரவியைப்போல அழகான பெண்ணை நான் பார்த்ததேயில்லை. சூரியன் தோன்றவிருக்கும் வானத்தில் பாவியிருக்கும் நிறத்தைப்போல அவள் மேனியின் நிறம் குளுமையும் பளபளப்பும் மிகுந்து கொண்டே போன நாட்கள் அவை. அவளைப் பார்த்து ஆசை கொள்ளாத ஆண்மையே இருக்க முடியாது என்பதுபோல அவள் அழகு பெருகிக்கொண்டிருந்த காலம். எதிர் வீட்டில் இருப்பவன் என்பதனாலும், தூரத்து உறவினன் என்பதாலும் அவள் அழகை அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருக்க எனக்கு எந்தத் தடையும் இருந்ததில்லை. எங்கள் ஊரின் பெருமை என அவள் உலா வந்துகொண்டிருந்த காலத்தில் அந்தப் பெருமையை ஆண்டு அனுபவிக்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார் எனும் புலம்பல் ஊரின் ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் மனசுக்குள் இருந்து ஒலித்தபடியே இருந்தது.

எனது அதிர்ஷ்டம் ஊரறிந்த ரகசியம். ஐந்து பைசா லக்கி ப்ரைசில் எப்போதும் எனக்குக் கிடைப்பது ஜோக்கர்தான். என்றாலும், மனம் நைலாம் கயிறால் கட்டப்பட்டிருக்கும் அலுமினியப் பிளேடை ஆசையோடுதான் பார்த்துக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட அதிர்ஷ்டக்கட்டையான நான் தங்கத்தட்டு போன்ற பைரவியின் மேல் ஆசைப்படுவது கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் ஆசை யாரைவிட்டது?

யானை யார் கழுத்தில் மாலையிடும் என்று யாருக்குத் தெரியும்? அப்படித்தான் அழகு மதம் பிடித்த பைரவி யானை ஊரெங்கும் ஓடி ஊருக்கு வெளியே சேரியில்போய் நின்று மூச்சு வாங்கி, கையில் இருந்த மாலையை அங்கு மரம் வெட்டிக் கொண்டிருந்த வீரன் கழுத்தில் போட்டுவிட்டது. அன்றிலிருந்து வீரன் அவள் அழகை ஆட்கொண்ட அரசனாக ஆகிப்போனான்.

அலர் பெருகி, அவள் தமர் செய்தியை அறிந்துகொண்டபோது பைரவி ரொம்பவும் உறுதியாக இருந்தாள். அவனும்தான். இற்செரிப்பு நிகழ்ந்தது. எனக்கோ கிழிக்கும் ஒவ்வொரு கட்டமும் ஜோக்கரே வர வருத்தமே மிஞ்சியது. அடுத்த முகூர்த்ததிலேயே பைரவிக்கும் அவள் மாமன் மகனுக்கும் திருமணம் காதும் காதும் வைத்தாற்போல நடந்து முடிந்தது. இதையெல்லாம் கேள்விப்பட்ட வீரன், ஊரணியில் வீழ்ந்து உயிரை விட்டான். வீரன் இறந்த செய்தி பைரவியை அடையாதபடிக்கு எல்லோரும் பார்த்துக் கொண்டனர். முதலிரவுகூட முடியாத நிலையில் பைரவியை இரவோடு இரவாக அவள் ஊருக்கு அனுப்பி வைத்தனர். மார்பில் தாலியையும் மனசில் வீரனையும் சுமந்துகொண்டு பைரவி ஊரைவிட்டுப் போய்க்கொண்டிருந்தாள். ஊருக்கு வெளியே மசானத்தில் எரிந்துகொண்டிருக்கும் பிணம் வீரன்தான் என பைரவி அறிந்திருக்கவில்லை.

********

அன்றைக்குத் தெருமுனை பெட்டிக்கடைக்காரர் கூப்பிட்டு வெறுப்பேற்றினார்.

"தம்பி, இதோ பாருங்க டவுன்ல இருந்து புது லக்கிப்பிரைஸ் வாங்கியாந்துருக்கேன். மொத பரிசு கடியாரம், வந்து ஒரு போணி பண்றது"

இந்த வயசுவரை ஒருநாளும் ஐந்து பைசாகூட ஜெயித்ததேயில்லை எனும் என் அதிர்ஷ்டத்தைக் கிண்டல் செய்வதுதான் அவன் நோக்கம். அவனை முறைத்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது பைரவி வீட்டு வாசலில் கார் நின்றது. பைரவி ஊருக்கு வந்திருப்பதாக அம்மா சொன்னாள். சரி.. மாப்பிள்ளையோடு மறுவீடு வந்திருப்பாள்போல என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் அம்மாவிற்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. இரண்டு முறை பைரவி வீட்டுக்கதவைப் போய் தட்டிவிட்டு வந்தாள். யாரும் வந்து திறக்கவில்லை. நான் ‘என்னம்மா என்னம்மா’ன்னு கேட்க அவள் பதிலே சொல்லவில்லை. நானும் கேட்பதை விட்டுவிட்டு சாப்பிட்டுப் படுத்தேன். கண்களுக்குள் ஒருமுறை லக்கிப்ரைஸில் தொங்கிய கடியாரம் வந்துபோனது. அப்படியே படுத்திருந்து எழுந்தபோது மாலை வந்திருந்தது. அம்மா அதற்குள் எப்படியோ பைரவி வீடு போய் விசாரித்து வந்திருந்தாள்.

நான் கேட்காமலேயே என் கைகளைப் பிடித்து வீட்டினுள் அழைத்துப்போய் எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.

"கார்ல வந்ததுலேர்ந்தே பாத்தேன். அவ மூஞ்சே சரியில்லை. அவள நடடின்னு அவ மாமியா சொன்னா, ஆனா அவ நவரவேயில்ல. போதாக்குறைக்கு அவ முழிச்ச முழியிருக்கே. அது பாக்கவே நல்லால்ல. அவ மாமியா அவள யேதோ மரச்சாமான இழுக்காப்ல இழுத்துக்கிட்டுதான் வீட்டுக்குள்ள போனா. உள்ளுக்குள்ள போனதுமே கதவு மூடிக்கிச்சு. அதான் எனக்கு ஒண்ணும் ஓடல. இப்போ போய் விசாரிச்சா அவளுக்குப் பைத்தியம் புடிச்சிருக்காம். அவ மாமியாக்காரி இவளுக்குப் பேய்தாம் பிடிச்சிருக்குங்காளாம். என்னதான் எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னாலும் பைத்தியத்த வச்சிக் குடுத்தனம் பண்ண முடியுமா என்ன? அவ மாமியா அவ சரியானப்புறம் வந்தா போதுன்னுட்டாளாம். சாயங்காலம் ஆலங்குளத்து கோடாங்கிக்குச் சொல்லிவிட்டுருக்கு. அவன் வந்துதான் இது பைத்தியமா இல்ல பேய் பிசாசான்னு சொல்லனும். எல்லாம் தல எழுத்து. அவ அம்மாக்காரி பேசின பேச்சுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். ஏன்னா………."

அம்மா நீட்டி முழங்கிக் கொண்டே போனாள். எனக்கு என்ன சொல்வதென்றோ அல்லது எப்படி உள்வாங்கிக் கொள்வதென்றோ புரியாமல் இருந்தது. மெல்லக் காலாற நடந்தேன். பெட்டிக்கடை வந்துவிட்டது.

"தம்பி என்ன ட்ரை பண்றீகளா?" என்று ப்ரைஸ் அட்டையைக் காட்டினான்.

சட்டைப்பையைத் துளாவியபோது ஒரு இருபது ஐந்து பைசா கிடைத்தது. அவனிடம் கொடுத்துவிட்டு ஐந்து கட்டங்களைப் பிய்த்து எடுத்தேன். வழக்கம்போல ஐந்தும் ஜோக்கர்.

"விடுங்க தம்பி, ஒரு நா இல்லனா ஒரு நா விழாமலா போயிரும்"

************

ஆலங்குளத்துக்காரனைக் கண்டதும் பைரவி அலறி ஓடியிருக்கிறாள். ஒரு அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டாள். எவ்வளவு தட்டியும் திறக்கவேயில்லை. ஆலங்குளத்துக்காரனோ நடு வீட்டிலேயே ஒக்காந்து விட்டான். அவன் அடிக்கும் கோடாங்கி சத்தம் நேரம் ஆக ஆக அதிகமாயிக் கொண்டே போனது. ஆனால் பைரவி கதவைத் திறக்கவேயில்லை. பைரவியின் அப்பா கதவி உடைக்கப் போனார். ஆனால் கோடாங்கி தடுத்துவிட்டார்.

"இது நிச்சயம் பேய் வேலதான். இப்போ அத ஒண்ணும் பண்ணமுடியாது. நாள மறு நா அமாவச, அதுவரைக்கும் அது என்னவேனா பண்ணட்டும். நான் துண்ணூரு தரேன். அத அவ மேல போடுங்க. கொஞ்சம் கட்டுப்படும். நாள மறுநாள் அமாவாச ராத்திரி பூச பண்ணி சுடுகாட்டுல அரஞ்சிருவோம். இடைல ரொம்ப முடியலன்னா என்னக் கூப்பிடுங்க. வந்து பாக்கறேன்"

பைரவியின் அப்பா தந்த தட்சணையை மறுத்துவிட்டு கேடு இரண்டு வாழைப்பழத்தை வாங்கிக்கொண்டு வேகமாக நடக்கத் துவங்கிவிட்டார் கோடாங்கி. அவர் போய் ரொம்ப நேரம் கழித்துதான் பைரவி கதவைத் திறந்தாள். ஆலங்குளத்தான் தந்த திருநீரை அவள் மேல் போட்டார்கள். அவள் அசந்து படுத்துவிட்டாள். எல்லோருக்கும் கொஞ்சம் நிம்மதி வர, அவரவர் படுக்கைக்குப் போனார்கள். அவள் அம்மா மட்டும் அவள் அருகிலேயே இருப்பதாகச் சொல்லிவிட்டாள். நானும் அம்மாவும் வீடு வந்து சேர்ந்தோம். ஐந்து கட்டத்தில் ஒன்றுகூட ப்ரைசாக இல்லாததைவிட வேறதுவும் எனக்கு வருத்தமாயில்லை. வருத்தம் மேலிட அப்படியே தூங்கிப்போனேன்.

சத்தம் கேட்டு விழித்துக் கொண்டபோது மணி பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. அது பைரவியின் சத்தமும் அவள் அம்மாவின் சத்தமும்தான். கதவைத் திறந்துகொண்டு வாசலுக்கு வந்தபோது கண்ட காட்சி கொஞ்சமும் எதிர்பாராததாக இருந்தது. பைரவி வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தாள். அவள் மேனியில் ஒரு துளியும் உடையில்லை. அவள் அம்மா கொண்டுவந்து கண்டு வந்து போர்த்தும் உடைகளை அவள் கணத்தில் தூக்கியெறிந்தாள். பைரவி பார்ப்பதற்கு வஸ்திரம் சார்த்தாத ஏதோ ஒரு பெண் சிலையின் சாயலில் தெரிந்தாள். அவள் அங்கங்கள் பார்ப்பதற்குக் கூடாததுபோல பளபளப்போடு இருந்தது. அவள் உடல் பற்றிய கற்பனைகளில் ஊறிக் கழித்த நாட்களில் அதைவிட போதை தரக்கூடியதாக எதையும் நான் எண்ணியதில்லை. ஆனால் இப்போழுது கற்பனை செய்யத் தேவையற்று கண்முன்னே நிற்கிற சமயத்தில் அடிவயிறு சில்லிட்டுப்போய், செய்வதறியாது பயந்து, மனம் பின்வாங்குகிறது. சத்தம் கேட்டு இன்னும் சில வீட்டு ஆட்கள் வெளியே வந்தவர்கள் அதிர்ந்துபோய் ஆங்காங்கே நின்றுவிட்டார்கள். பெண்கள் தங்கள் கணவன்மார்களை உள்ளே போகுமாறு விரட்டிக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் பைரவி இன்னும் ஆவேசமாய் கத்தியபடி ஓட ஆரம்பித்தாள். அவள் சத்தத்தில் விழித்துக் கொண்டு குலைக்க ஆரம்பித்த நாய்கள், அவள் வரும் வேகம் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டன. இதைக் கண்டபின் யாரும் அவள் அருகே போகவேயில்லை. அவளோ ஓடி அந்தத் தெருவைக் கடந்து ஓடி கண்களிலிருந்து மறைந்தாள். பைரவியின் அம்மா பாதி தூரம் ஓடிக் கல் தடுக்கி விழுந்து, "யாராவது எம் பொண்ணக் காப்பாத்துங்க" என்று கெஞ்சியபடி அழுதுகொண்டிருந்தாள்.

அம்மா என்னிடம் "ஏண்டா நீயாவது போய் அவளப் பிடிக்க கூடாதா?"

"எப்படிம்மா அவ முண்டமா நிக்கா, நா எப்படி…"

"ஏண்டா தொடநடுங்கி, அவ பேய் பிடிச்சு கிடக்கா, அவளுக்கு முண்டம்ன்னு தெரியுமா ஒண்ணா? ஒனக்கு பயமாயிருந்தா விடு, இல்ல இப்பவே போய் அவள பிடிச்சுகிட்டுவா"

அம்மா வேறு எதையாவது சொல்லிக் கிளப்பிவிடுவாள். நான் வேறுவழியின்றி பைரவியின் புடவையை வாங்கிக்கொண்டு அவள் போன வழியே ஓடினேன். நாய்கள் எல்லாம் இப்போழுது வீரமாக கத்திக்கொண்டே என்னைத் துரத்த ஆரம்பித்தன.

***************

நான் ஓடிப்போய் அவளைக் கண்டபோது, ஊருக்கு வெளியே இருந்த சேரியில் போய் நின்றிருந்தாள். அது வீரன் இருந்த சேரி. சரியாக வீரன் வீட்டு வாசலில்தான் அவள் நின்றாள். அவள் சத்தம் கேட்டு, சேரி முழுவதும் விழித்துக் கொண்டு அவள்முன் வந்து சேர்ந்திருந்தது. யாரோ புண்ணியவானோ, புண்ணியவதியோ அவளுக்கு ஒரு சேலையையும் கட்டி விட்டிருந்தார்கள். அவள் ஆவேசமாக தண்ணீர் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தாள். ஒரு பாட்டையா அவளுக்குத் திருநீறு பூசி மந்திரித்துக் கொண்டிருந்தார். நான் அருகே போனதும் எல்லோரும் விலகிக் கொண்டார்கள்.

"என்ன சாமி, காத்து அண்டியிருக்கிற புள்ளய சாக்கிரதையாப் பாத்துக்க வேண்டாமா?" என்று புத்தி சொல்லி அனுப்பி வைத்தார்கள். அங்கிருந்து வரும்வரை அமைதியாக இருந்த பைரவி, அவள் வீட்டு வாசலுக்கு வந்ததும் ஆடத் துவங்கிவிட்டாள். வழக்கம்போல நொடியில் அம்மணமாகிவிட்டாள். இந்தமுறை, நான் அவளை வேறு வழியின்றிப் பிடித்து, வீட்டுக்குள் கொண்டு சென்று, ஒரு அறைக்குள் அடைத்துவிட்டு வெளியே வந்தேன். அதற்குள் அவள் சத்தம் பெருத்து அறைக்கதவுகளையும் தாண்டி வெளியே கேட்டது. இப்படியே விட்டால் அது நல்லதல்ல என்று எல்லோரும் பேசி, ஆலங்குளத்துகாரனுக்கு ஆள் அனுப்புவதென்று முடிவு செய்த சமயம், ஒவ்வொருவராகக் கிளம்பி அவரவர் வீடுகளுக்குப் போய்விட்டனர். எஞ்சியிருந்தது, சில கிழங்களும், பெண்களும், நானும்தான். கிழவர்களைப் போகச் சொல்லமுடியாது. வேறு வழியின்றி நானே போகும்படியானபோது, நான் கிழித்த ஐந்து ஜோக்கர்கள் முகமும் ஒருமுறை வந்துபோனது. பைரவியை அடைத்து வைத்த அறையின் ஜன்னல்கள் பட் என்று திறந்து கொண்டன. பைரவி தனது பெருத்த விழிகளை உருட்டி,

"டேய், யாருடா நீயா ஆலங்குளத்துக்காரனக் கூப்பிடப் போறது? போ. போனா திரும்பி வரமாட்டே, வழில நிறையப் பேய்க இருக்குது, அதுங்க உன்ன சும்ம விடாது" என்று சொல்லி பயமுறுத்தினாள்.

அங்கிருந்து வெளியே வந்த பின்பும் அவள் குரல் கேட்டபடி இருந்தது. அங்கிருந்த பெரியவர் ஒருவர் என்னை அருகே கூப்பிட்டார்.

"தம்பி, நீ இதுக்கெல்லாம் பயப்படாத தைரியமாப் போ, போற வழியெல்லாம் ஒங்கொலதெய்வத்த நினைச்சுக்கோ, வடக்கால மாட்டுத்தாவணி வழியாப் போகாத, அங்க துர் தேவதைங்க நிறஞ்சிருக்கும், மெயின் ரோடு வழியாப்போ, வழில யாராவது ஒம் பேரச் சொல்லி கூப்பிடற மாதிரி இருக்கும். திரும்பிப் பாத்துறாத, சைக்கிளப்பிடிச்சு இழுக்கும் பேய்ங்க. நீ பயந்தையோ போச்சு, நாக்குல தெய்வ நாமத்த வச்சிக்கிட்டு தைரியமாப்போய்வா" என்று விடைகொடுத்து அனுப்பினார்.

எவ்வளவு எளிதாக எல்லோரும் தைரியம் சொல்லி அனுப்புகிறார்கள். பைரவியின் தூரத்து சொந்தக்காரன் என்கிற பெருமையினால் வந்த சிக்கல்கள் இவை என நினைக்கும்போது எல்லாம் தலை எழுத்து என்று நொந்துகொண்டேன். இருள் விரிந்து கிடந்த சாலையில் அதைக் கிழித்துக்கொண்டு நானும் என் சைக்கிளும் பயணிக்கத் துவங்கினோம். ஒவ்வொரு திருப்பத்திலும் சைக்கிளின் வேகம் குறைந்துகொண்டே வந்தது. சைக்கிள் மிதிக்கச் சிரமமாக இருந்தது. யாரோ அதைப் பிடித்து இழுப்பதுபோலத் தோன்றியது. யாரோ என் பேர் சொல்லி அழைப்பது போலவும், அது என் அம்மா அப்பாவின் குரல் போலவும் இருந்தது. நானோ உதடுகளில் குலதெய்வத்தின் பெயரைத் தவிர எதையும் சொல்லவேயில்லை. என் வாழ்நாளில் அந்த நாமத்தை அத்தனை பயபக்தியோடு இதுவரை நான் சொன்னதேயில்லை. சாலையின் இருபுறங்களிலும் கோரைப்பற்களைக் காட்டிக்கொண்டு பேய்கள் நின்று கூச்சலிடுவதுபோல இருந்தது. உடலின் கடைசிச் சொட்டுத்துணிவையும் திரட்டி சைக்கிளை மிதித்து ஆலங்குளத்தை அடைந்தேன். கோடங்கி, அவர் வீட்டு வாசலிலேயே தயாராய் இருந்தார்.

"தம்பி, எனக்குத் தெரியும் இப்போ நீ வருவேன்னு, ஜக்கம்மா ஒரு சாமத்துக்கு முன்னாடியே வந்து இது நடக்கப்போகுதுன்னு சொல்லிட்டா, நீ பயப்படாத வா எல்லாம் சரியாயிரும்" என்று சொல்லி சைக்கிள் கேரியரில் ஏறி அமர்ந்துகொண்டார். வரும் வழியில் பேய் பிடித்து இழுத்தபோது இருந்ததைவிட இப்பொழுது சைக்கிள் மிதிக்க இன்னும் கடினமாயிருந்தது.

*************

அந்த இரவிலேயே கோடங்கி பூசையைத் துவங்கிவிட்டார். பைரவி இருந்த அறைக்கதவைத் திறந்து அவளை வெளியே அழைத்து வந்தோம். அவள் வந்ததும் கோடாங்கிமேல் ஆவேசமாய்ப் பாய்ந்தாள்.

"டேய் ஆலங்குளத்துக்காரா, சொன்னாக் கேளு இங்க இருந்து போயிரு" என்று மிரட்டினாள். அவன் ஆயிரம் பேய்களைப் பார்த்தவன். இதற்கெல்லாம் அஞ்சுவானா? கையிலிருந்த சாட்டையால் அவளை ஒரு அடி அடித்தான். அவள் சுருண்டு விழுந்தாள். அவள் மேனியில் அடி விழுந்த இடம் சிவப்பாக இரத்தம் கன்னிப்போய் விட்டது. அவள் மேலும் அடாவடி செய்வாள்போலத் தோன்றவில்லை. அவளை அமர வைத்து எலுமிச்சம் பழங்களைச் சுற்றி சில மந்திரங்களைச் சொல்லி அவளை மிரட்டி, "யார் நீ? உம் பேரென்ன? எதுக்கு இவ மேல வந்திருக்க?" என்று கேட்டான்.

ஆரம்பத்தில் சொல்ல அடம்பிடித்தவள் மேலும் சில அடிகளுக்குப் பின் பேச ஆரம்பித்தாள்.

"நான் தான் வீரன்".

எல்லோருக்கும் ஒரு கணம் மூச்சு நின்று திரும்பியது.

"சரி, எதுக்கு இவ மேல வந்த"

"நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் ஆசையா இருந்தோம், பிரிச்சுட்டாங்க பாவிக"

"சரி அதுக்கு என்ன செய்ய எல்லாம் தல எழுத்து, நீ செத்துட்டயே அப்படியே போக வேண்டியது தான, ஏன் வாழ வேண்டிய பொண்ணக் கெடுக்குற"

"என்ன விட்டுட்டு அவ வாழ மாட்டா, இது எனக்குச் சொந்தமான உடம்பு, அதுல நான்தான் இருப்பேன். வாழ்ந்திருந்தா தனித்தனியாத்தான் வாழ்ந்திருப்போம், இப்போ ஒரே உடம்புல வாழ்றோம், எங்களத் தொந்தரவு பண்ணாதீங்க, தயவு செஞ்சி விட்டுருங்க"

"அதெப்படி விடமுடியும், நீ நெனைக்கிற மாதிரியெல்லாம் விடமுடியாது. இப்போ விட்டுப் போயிரு, அடுத்த ஜென்மத்துல விதி இருந்தா சேர்ந்துக்கோங்க"

இதற்குமேல் பேச்சுவார்த்தை செய்வதில் அர்த்தம் இல்லை என்று அவள் நினைத்துவிட்டாளோ என்னவோ அங்கிருந்த அனைத்தையும் அள்ளி எறிந்தாள். பொறுமையிழந்த கோடங்கி சாட்டையால் மேலும் சில அடிகளைக் கொடுத்தார். மந்தரித்து சில தாயத்துகளை அவள் கையில் கட்டினார். அதன்பின் அவள் கொஞ்சம் நிதானம் பெற்றாள்.

"நாள மறுநாள் ராத்திரி சுடுகாட்டுல பூச போட்டு, அங்கன உள்ள மரத்துல பேய அறஞ்சிற வேண்டியதுதான். நா இப்பக் கட்டியிருக்கிற கட்டு ரெண்டு நாளைக்குத் தாங்கும், அதனால கவலைப்படாதீங்க, எல்லாம் அந்த மகமாயி பாத்துக்குவா" என்று சொல்லி அவர் புறப்படுகிறபோது விடிந்து விட்டிருந்தது. திரும்பக் கொண்டுபோய் விடச் சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன், நல்லவேளை அவர் கேட்கவில்லை. அசதி அதிகமாக வீட்டிற்கு நடந்தேன். தூரத்தில் பெட்டிக்கடைக்காரன் கடையைத் திறந்துகொண்டிருப்பது தெரிந்தது.

***************

இரண்டு நாட்களும் ஒரு பிரச்சனையும் இல்லை. வீரன் அவளுக்குள்ளிருந்து வெளியே வரவேயில்லை. பைரவி கொஞ்சம் சாதுவாக நடந்துகொண்டாள். வீட்டில் இருந்தவர்களுக்கே அவள்மேல் நம்பிக்கை பிறக்க ஆரம்பித்திருந்தது. அதனால் ஆலங்குளத்தானை வரச் சொல்வதா வேண்டாமா என்று எண்ணிக் கொண்டிருந்தபோதே கோடாங்கி அங்கு வந்து சேர்ந்தார். அழையாத விருந்தாளியைப் பார்ப்பதுபோல பைரவியின் அம்மா அவரைப் பார்த்தாள்.

"பொண்ணு இப்ப எப்படி இருக்கா?"

"நல்லபடியாயிருக்கா, எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்".

"என்ன என் ஆசீர்வாதம்னுட்டீங்க. எல்லாம் அந்தக் கருமாரி கருணைனு சொல்லுங்க"

"ஆமா, இப்போதான் நல்லாயிருக்காளே நீங்க சொன்ன பூசையெல்லாம் வேணுமா? இல்ல இன்னும் கொஞ்சம் மந்திரிச்சாப்போதுமா?".

பைரவியின் அம்மா லேசுப்பட்டவள் இல்லை என்று அம்மா சொல்வது சரிதான்.

"ஏன் எதாவது செலவாகிடும்னு பாக்கீகளோ?"

"அய்யோ சாமி என்ன அப்படிச் சொல்லிப்புட்டீங்க, என்ன செலவான என்ன? பொம்பளப்புள்ள சுடுகாட்டுக்கெல்லாம் வரணுமான்னுதான் நெனச்சேன்"

"புரியுது தாயி, சாதுவாயிருந்தா விட்டுருவாங்கன்னு அந்தப் பேய் நினைக்குது. புடிச்சிருக்கிறவன் யாரு? வீரன். முரடன். நாம காணாத நேரத்தில புள்ளய ஏதாவது பண்ணிட்டான்னா என்ன பண்ணுவ? அப்புறம் அய்யோன்னா வருமா இல்ல அம்மான்னா வருமா சொல்லு?"

"சரிதான் பூசாரி, தெரியாம சொல்லிப்புட்டேன்."

இரவில் பூசைக்கு ஏற்பாடுகள் ஆகிவிட்டிருந்தது. பைரவியோடு யாராவது ஆண் ஒருவர்கூட வந்தால் போதும் என்று சொன்னபோது எல்லோரும் என்னையே ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து அனுப்பினர். எத்தனை முறை கிழித்தாலும் எனக்கு வரும் ஜோக்கரைப்போல இவர்கள் எதற்கெடுத்தாலும் என்னையே கைகாட்டுவது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. என்றாலும் வேறு வழியில்லாமல் அவர்களோடு போனேன்.

நல்லவேளை அந்த இரவில் எந்தப் பிணமும் எரியவில்லை. பைரவி மிகவும் பழக்கப்பட்ட பாதையில் நடப்பவளைப்போல நடந்து வந்து கொண்டிருந்தாள். தலைவிரித்துப் போட்டிருக்கும் வயதான சூனியக்காரக் கிழவியைப்போல இருந்தது அந்த மரம். அதன் கீழே அவளை அமரவைத்து திருஷ்டிக் கழித்து, அவள் உச்சி முடியைப் பிடித்துக் கொத்தாக இழுத்தார். இழுத்த இழுப்பில் அவள் தலையைக் கோணிக்கொண்டாள். கொத்தாக அதைப் பிய்க்குமுன் கைநீட்டி அவரைத் தடுத்தாள்.

"இன்னும் என்ன வேணும் உனக்கு? ஆசயிருந்த சொல்லு நிறவேத்துறன்"

அவள் மேலும் கீழும் பார்த்து விட்டு, "ஒரு நிமிஷம் பேசணும் அவன்கூட" என்றாள்.

நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. அடிவயிற்றைக் கலக்கத் தொடங்கிவிட்டது. அவள் குரல் கனத்து, கட்டைக்குரலில் பேசினாள்.

"டேய், என் அப்பன் என்னையும் வீரனையும் பிரிச்சான், அவன மன்னிச்சுட்டேன், இதோ என்னையும் அவனையும் நிரந்தரமாப் பிரிக்கப் போறானே இவனையும் மன்னிச்சுட்டேன், ஆனா நான் எவ்வளவு சொல்லியும் கேக்காம இவனக் கூப்பிட்டு வந்து எங்களப் பிரிக்கையே நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன். நீ கூடத்தான் என்ன ஆசப்பட்ட, அது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சயா? உன் அதிர்ஷ்டம் ஊருக்கே தெரியும். உனக்கு நான் கிடைக்கலங்கிறதுக்காக என் சந்தோசத்தக் கெடுக்கறியே இது என்ன நியாயம்? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, எப்படி என் வீரன் என்னத் தொடாம செத்தாரோ அதேமாதிரி நீ சாகிறவரைக்கும் எந்தப் பொண்ணையும் தொடவே முடியாது. இது என் சாபம், யோவ் ஆலங்குளத்துக்காரரே இப்ப அடி என் மசுர அந்த மரத்துல" என்று சொல்லி சிலுப்பிக்கொண்டாள்.

"சரி சரி வாய மூடு" என்று அவளை அதட்டிய கோடங்கி, அவளுடைய தலைமுடியை மரத்தில் அடித்தார். அவர் என்னைத் தொட்டு உசுப்பியபோது நான் வியர்த்திருந்தேன். பேசியது வீரனா இல்லை பைரவியா என்று விளங்கிக்கொள்ளவே என்னால் முடியவில்லை.

"என்ன தம்பி பயந்துட்டீகளா? அது கெடக்குது முட்டாமூதி, அத மரத்துல அறயப்போறோம்கிற பயத்துல உங்கள மிரட்டியிருக்கு. அதல்லாம் மனசுல வச்சிக்கிறாதீக. இப்போ பாருங்க இந்தப் பொண்ண, எவ்வளவு தெளிவாயிருக்கு, இனி இதுக்கு எல்லாம் நல்லகாலம்தான்" என்று சொல்லி எங்கள் இருவரையும் அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு, தட்சணையாக பைரவியின் அம்மாவிடம் ஒரு கரவைப்பசுவைக் கேட்டு வாங்கிப் போனார் கோடங்கி. அந்த வாரம் முழுக்க ஒவ்வொருவராகவந்து என்னிடம் பேய் ஓட்டியக் கதையைக் கேட்டு, "பரவாயில்லலே நீ ஒன்னுக்குமாகாதவன்னு நினைச்சோம், ஆனா நீ பலே ஆளாயிருக்கயே" என்று பாராட்டிவிட்டுப் போனார்கள். அதன்பின்பு பெட்டிக்கடைக்காரன் என்னை அழைத்துக் கிண்டல் செய்வதை நிறுத்திக்கொண்டான். அடுத்த மாதத்தில் நல்லநாள் பார்த்து பைரவியின் மாமியார் வந்து அவளை அழைத்துப்போனாள்.

அப்பாவுக்கு வேலை வேறு ஊருக்கு மாத்தலாக நாங்கள் ஊரைக் காலி பண்ணிவிட்டு பட்டணம் வந்து சேர்ந்தோம். அதற்குப்பின் ஊர்ப்பக்கம் நான் போகவேயில்லை. அதனால் பைரவியைப் பார்க்கவும் இல்லை. இப்போதும் ஒரு நெருங்கிய சொந்தக்காரர் கல்யாணத்தில் பைரவியைப் பார்க்க முடிந்தது. அவள் பையன் அவளை மாதிரியே இருந்தான். அம்மா, அவளோடு நிறையப் பேசினாள். நான் பேசவேயில்லை. என்ன பேச என்று சும்மா இருந்துவிட்டேன். ஆனால் அவள் கண்கள் அடிக்கடி வந்து என்னைத் தொட்டுக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. அவள் பார்வை அவளை உடைகளின்றிப் பார்த்த அன்று கண்டதைப் போன்று இன்றும் இருப்பதாகப்பட்டது. சீக்கிரம் கிளம்பினால் தேவலை என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, பைரவியின் கணவன் அவளை அவசரப்படுத்திக் கிளப்பிக் கூட்டிப்போனான். புறப்படுமுன் அவள் என்னருகே வந்தாள். மரியாதை நிமித்தம் சொல்லிக்கொள்ள வருகிறாள் என்று நினைத்தேன். நெருங்கி வந்தவள், என்னைப் பார்த்து மெல்ல சிரித்தாள்.

"கல்யாணமாயிருச்சா?".

"இல்லை".

மீண்டும் சிரித்த அவள் "அவ்வளவு சீக்கிரம் ஆயிருமா என்ன?" என்று சொல்லித் திரும்பிப் பார்க்காது போனாள். அவள் பேசிய வார்த்தைகள் எனக்குள்ளாகப் போய் எதிரொலித்து எதிரொலித்துத் திரும்பிவர, கால்கள் நடுக்கமுற்று, அருகிலிருந்த நாற்காலியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தேன். அதற்குள் பைரவி அங்கிருந்து போயிருந்தாள்.

About The Author