சிட்டுக் குருவி

கூர்க்காக் காவல் காரனைப்போல்
கூட்டுக்கு வெளியே ஒரு குருவி
பார்த்துக் கொண்டே இருக்கிறது
பகைவர் வந்தால் அறிவிக்க

வேலைகள் தீர்ந்து முற்றத்தில்
வெற்றிலை போடும் தலைவியர் போல்
நீல மணிக்கண் சிறுகுருவி
நிற்கிறதோ? இது கற்பனையோ!

தனிமையில் அஞ்சிய குஞ்சுகள் தம்
தாயை வேண்டி அழைக்கின்ற
இனிய கீச்சுக் கீச்சுகள் தாம்
எத்தனை அமுத சங்கீதம்!

அட்சதை பொறுக்கி வைத்திருந்தேன்
அர்ச்சனை செய்ய; குருக்களுக்கு
தட்சணைச் செலவு இல்லாமல்
தானே பூசனைஏற்றதுபோல்
கொத்திச் சென்று தாய்க்குருவி
குஞ்சுகள் சிவந்த அலகுக்குள்
வைத்துணவூட்டிய காட்சியிலே
வையத்தில் இறை வந்துவிட்டான்

About The Author

1 Comment

  1. kanmani

    சிட்டுக் குருவி கவிதை மிகமிக அருமை.அன்னையே இறை

Comments are closed.