சில்லுனு ஒரு அரட்டை

வணக்கம் நண்பர்களே, சில சுவாரஸ்யமான மற்றும் திகிலூட்டும் விஷயங்களுடன் மீண்டும் என் அரட்டை.

இன்றைய காலகட்டத்தில் தியானம் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு பலமையங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் இவற்றில் எது உண்மையானது, எது போலியானது என்பதை அறிவது முக்கியம்…

தியானம் என்பது எதையும் யாசிப்பதல்ல.
தன்னுள் மூழ்கி தன்னைத்தானே அறிதலே!
மவுனம் என்பது பேச்சை நிறுத்துவதல்ல.
அது ஒரு நிசப்த சங்கீதம்.
தனிமையுண்டு அதிலே சாரமிருக்குதம்மா!

என்பது பாரதியின் பாடல் வரிகள். அப்படிப்பட்ட தியான உணர்வுகளைத் தரும் ஒரு இடம் மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீஇராமகிருஷ்ண மடமாகும். இங்குள்ள தியான பீடத்தைக் கோவில் என்கின்றனர். யார் வேண்டுமானாலும் இங்கு வந்து தியானத்தில் ஈடுபடலாம். ஞாயிற்றுக் கிழமைகளில் பகவத்கீதை சொற்பொழிவுகளும், மாலையில் பஜனைகளும் இருக்கின்றன. நாமும் இது போன்ற இடங்களுக்கு சென்று தனிமையில் இனிமை காணுவோமே!

நான் அனுபவித்த சில விஷயங்கள்…

– எந்த ஒரு வேலையையும் செய்து முடித்த பிறகுதான் அதைச் செய்வதற்கான எளிய வழி தென்படும்.

– ஆசிரியர்களுக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும் பாடம்தான் மாணவர்களுக்கு அறுவையாக இருக்கும்.

– எந்த ஒரு தொலைந்த பொருளும் அதற்கான மாற்றை வாங்கியவுடன் திரும்பக் கிடைத்துவிடும்.

– 99% ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்திருக்கும்போதுதான் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

– வீட்டில் நன்றாக வேலை செய்த கேமராதான் வெளியில் சென்றவுடன் பழுதடைந்து விட்டிருக்கும்.

– நாம் ஏறிய அரசு விரைவுப் பேருந்துதான் மற்றவற்றைவிட மெதுவாக செல்லும்.

– எந்த ஒரு வாய்ப்பும் நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில்தான் கதவைத் தட்டும்.

உங்களுக்கும் இது போன்ற எக்ஸ்பிரியன்ஸ் இருந்தால் சொல்லுங்களேன்.

இந்த முறை ஒரு சிம்பிளான சவால்….

Image

மேலே உள்ள படத்தைப் பார்த்திட்டிங்களா? இது என்னன்னு கண்டுபிடிக்கணும் அவ்வளவுதான்.

அட! அதுக்குள்ளேயே கண்டுபிடிச்சிட்டிங்களா? ம்..ம்.. இன்னும் சிலர் கண்டுபுடிக்கலைன்னு நினைக்கிறேன். சரி பரவாயில்ல.. இது என்னங்கறதைக் கடைசில பார்க்கலாம்.

இப்ப நம்ம அரட்டையின் அடுத்த பகுதி. மின்சாரத்தை சேமிக்கிறதுக்காக லைட் ஆஃப் பண்ணிட்டு கணினியில இணையத்த பார்த்துக்கிட்டிருந்திங்கன்னா உடனே போய் லைட்ட ஆன் பண்ணிக்குங்க, நான் சொல்லப்போற மேட்டரு கொஞ்சம் த்ரில்லிங்கா இருக்கும்.

சரி.. நான் ஸ்ட்ரெய்ட்டா விஷயத்திற்கே வந்திடறேன். நீங்க பேய் பிசாசு எல்லாம் பார்த்தது உண்டா? இல்லைனா உடனே கண்ணாடில போய் பாருங்க! ஹி..ஹி.. சும்மா கலாய்ச்சேன். நிஜமாவே அதெல்லாம் பார்த்ததில்லையா? நானும் நேர்ல அதெல்லாம் பார்த்ததில்லைங்க. ஆனா, நம்முடையா தாத்தா பாட்டி அவுங்களோட மூதாதையர்கள் பார்த்ததா கேள்விப்பட்டிருப்பீங்க. அது மட்டும் இல்லாம அவுங்க உங்களுக்கு கதை கதையா அளந்து விட்டிருப்பாங்க. நீங்களும் உம் கொட்டிக்கிட்டே கேட்டிருந்திருப்பீங்க இல்லையா. இப்பவும் நாம அனேக கிராமங்கள்ல பார்க்கலாம், ஒரு குட்ட பனை மரத்துல பெரிய ஆணி அடிச்சு வச்சி கருப்பு கயிரு, சில துணிகளையும் கட்டியிருப்பாங்க.

இதெல்லாம் எதுக்கு உங்களுக்கு ஞாபகப்படுத்துறேன்னா, நெருப்பு இல்லாம புகையுமா? அதுபோலத்தான் உண்மையில்லாம அதெல்லாம் மக்களிடம் பரவுமா? கண்டிப்பா யோசிக்க வேண்டிய விஷயம். நீங்களே கீழே உள்ள படத்த பாருங்க…

Picture

என்ன பார்த்திட்டிங்களா. இதுல ஒண்ணும் தெரியாது. படத்துல வட்டம் போட்ட இடத்தைக் கீழே ஜூம் பண்ணி போட்டிருக்கேன்.. அதையும் பாருங்க…

Ghost

பார்த்தாச்சா.. இப்ப என்ன சொல்றீங்க? இதை இணைய தளத்தில் பார்த்திருந்தாலோ அல்லது வேறு யாரிடமிருந்தோ மின்னஞ்சல் வந்திருந்தாலோ இதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்திருக்கமாட்டேன். ஆனா இது என்னோட அலுவலக நண்பர் ஒருவர் டூர் போயிருந்தபோது எடுத்தது. ஃபோட்டோவை கணினியில் வைத்து ஜூம் பண்ணிப் பார்த்த போதுதான் இதைப் பார்த்து அதிந்து போனார்களாம். இதைப் பார்த்த பின்பும் என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

உண்மையிலேயே விபத்தில் இறந்தவர்கள்தான் ஆவியாக வருவார்கள் என்பது தெரிந்ததுதான். ஆனால் கண்களுக்கு தெரியுமா என்றுதான் புரியவில்லை. இதைப் பற்றி புரிந்தவர்கள் அல்லது தெரிந்தவர்கள் தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாமே. மேலும் இந்தப் படம் டிஜிடல் கேமிரா மூலம் எடுக்கப்பட்டது. இதையே நாம் நேரடியாக கண்கள் மூலம் கண்டிருக்க முடியுமா? இதுபோன்ற ஆயிரத்தெட்டு கேள்விகள் எழுகின்றன. ஆனால் பதில்?

இந்த வார காமெடி ட்ராக்…

இப்போதெல்லாம் எந்த ஒரு விஷயத்திற்கும் விளம்பரம் என்பது மிகத் தேவையான ஒன்றாகிவிட்டது. இப்படித்தான் வியாபாரி ஒருவர் இறக்கும் தருவாயில் இருந்த போது எமன் வந்து அந்த வியாபாரியிடம் கேட்டான். "உனக்கு சொர்க்கம் வேண்டுமா அல்லது நரகம் வேண்டுமா?" என்று. அதற்கு அவன் எது எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சாதானே சொல்லமுடியும்னான். "சரி.. அப்படின்னா ஏதாவது ஒன்ன மட்டும் காட்டறேன், எத பார்க்கணும்?"

ம்..ம்.. யோசித்த வியாபாரி, "நரகம்" என்றார். எமன் நரகத்தைக் காட்டுகிறார். அங்கே ரம்பா, ஊர்வசி எல்லோரும் ஆனந்தமாக நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். நரகம்தான் வேணும்கிறார் வியாபாரி. நரகத்திற்கு வந்தபின்பு அவனை எண்ணை கொப்பரையில் போடுகிறார்கள். "என்ன எமா.. அப்போ வேற காமிச்சியே"ங்கறார் வியாபாரி. எமன் சிரிச்சிக்கிட்டே சொன்னார்… "அது நரகத்தோட அட்வர்டைஸ்மென்ட்!"

சரி.. இப்ப நம்ம சவால் பகுதியோட முடிவுக்கு வருவோம். சிலருக்கு இது ஏதோ பிச்சிப் போட்ட படமாக இருப்பது போல் தெரியும், சிலர் எளிதில் கண்டுபிடித்திருப்பீர்கள். இதில் LIFT ங்கற ஒரு வார்த்தை ஒளிஞ்சிருக்கு.

அப்பாடா!.. உங்களோட பேசிக்கிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல. மீண்டும் பிறிதொரு நாளில் சந்திப்போம்!

அன்புடன்,
மாயன்.

About The Author

19 Comments

  1. maleek

    எமன்,இது நரகத்தோடு அட்வர்டைஸ்மென்ட்” என்று சொன்னதும்,அந்த
    வியாபாரி,என்னாது சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்று சொல்லவில்லையா?”

  2. Rishi

    மாலீக்,
    இன்னிக்கு டிவில வர்ற சில விளம்பரங்கள் அப்படித்தானே சொல்ல வைக்கின்றன!
    கிரியேட்டிவ் டைரக்டர்களின் சிந்தனையே சிந்தனை!!!

  3. meenal

    சில சம்யங்களில் நம்மையே நவின உலக அமைப்புக்கள் (நம் கண்களை) ஏமாற்றி விடக்கூடும். வேவ்வேறு விதமான கண்ணாஅடிகளில் வேவெறு விதமான உருவங்கள் எதிரியும் என்பது உணமை. மிக அழகான உருவம் உடையவர்கள் கூட சில கண்ணாடிகளின் பிரதிபலிக்கும் தன்மையின் மாற்றத்தினால் அசிங்கமாக தோன்றத்தில் தெரிவார்கள். எதிரே நிற்கும் இளையரின் உருவம் ஒரு கண்ணாடியில் பட்டு மற்றொரு கண்ணடியின் வழியாக பிரதிபலிக்கும் போது அசிங்கமான உருவத்தைப் பெற்றிருக்கலாம். அவர் நிற்கும் இடத்திற்கு எதிரே கார் கண்ணாடியோ அல்லது ஒரு துண்டு கண்ணாடியோ தரையில் இருக்க வாய்ப்பு உண்டு .அதனால் ஏற்பட்ட மாற்றம் ஆகும். பல விளக்குகள் பல திசைகலில் எரியும் போது பல நிழல்கல் தெரியும வை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாய் இருக்கும், நம்முன்னே பின்னே பக்கவாட்டில் தெரியும் போஒது ஆவி உலா வருவது போல் தோஒன்றும் இது கண்ணாடியின் பிரதிபலிப்பாஅக இருக்கக்கூஉடும் கவலைப்படாதே சகோதரா!

  4. Mahendra Raj

    இணையதளத்தில் இந்த மாதிரி நிறைய ஆவி படம் உலா வந்து உள்ளன. அனைத்தும் போலியனவை, எதற்க்கும் நிருபணம் இல்லை என்பதுதான் உண்மை. எந்த ஒரு ஆத்மாவும் உடலை விட்டு பிரிந்த பின், அது தன் உருவத்தை இழந்துவிடும். ஆவி என்று உருவகப்படுதுவது மடத்தனம், உங்களின் அனுபவதில் இல்லதவரை இந்தமாத்ரி கதைகளை நம்ப வேண்டியதுஇல்லை.

  5. Jothi

    போட்டோ பார்த்து பக்குன்னு ஆயிடுச்சு.. நல்ல வேளை பகல்ல படிச்சேன்.. வழக்கம் போல உங்க புதிர் நல்லாருந்தது.

  6. R.V.Raji

    மாயன்!..
    தாங்கள் அனுபவித்த விஷயங்களில் கடைசி வரியைத் தவிர மற்ற அனைத்து வரிகள் நானும் அனுபவித்தவையே.

    ஆவியின் முகமும் அப்பா(ஆ)வியாய்த் தானே தெரிகிறது?..
    பாவம்! யாரு பெத்த பெண்ணோ?…

  7. Rishi

    நண்பா.. மஹேந்திரா,
    நான் ஆவி பார்த்திருக்கேன்…. எங்க வீட்டு இட்லி குக்கர்ல..!!!

  8. Rishi

    //எந்த ஒரு வாய்ப்பும் நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில்தான் கதவைத் தட்டும்.//
    மாயன்,
    எனக்கு வாய்ப்புகள் கதவைத் தட்டிக்கொண்டேதான் இருக்கின்றன. எழுந்திருச்சிப் போயி திறக்கத்தான் சோம்பேறித்தனம். எனக்கு ஒருநாள் ஆப்பு இருக்கு!!

  9. maayan

    நன்றி மாலீக் நண்பரே,

    //எமன்,இது நரகத்தோடு அட்வர்டைஸ்மென்ட்” என்று சொன்னதும்,அந்த
    வியாபாரி,என்னாது சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்று சொல்லவில்லையா?//

    அந்த இடத்தில் வடிவேலு இருந்திருந்தா சொல்லியிருப்பாரோ என்னவோ!”

  10. maayan

    உங்கள் கருத்துக்கு நன்றி ஜனனி மற்றும் ரிஷி நண்பர்களே

    //னிஙல் காட்டிய படம் சுப்பர்//

    அது சரி பாலா, நிஙல் (சாரி எனக்கு சரியா வரல) கருத்துக்கு மிக்க நன்றி.

  11. maayan

    நன்றி மகேந்திர ராஜ், அது சரி அனுபவத்தில் என்றால் நேரிடையாக காணுவதைத்தானே சொல்கிறீர்கள்.
    நம் உறவினர்களே கண்டிருக்கிறேன் என்று சொல்லும்போது, அதில் என்ன தவறு இருக்க முடியும். முடியும் என்றால்
    நாம் காணுவது எப்படி 100% உண்மையாக இருக்க முடியும். எது எப்படியோ, நானும் ரிஷி சொன்னதுபோல் இட்லி குக்கரில்தான்
    ஆவி பாரித்திருக்கிறேம்.
    இருந்தாலு உங்களுக்கு ரொம்பதான் லொள்ளு ரிஷி அண்ணாச்சி!

  12. maayan

    என்னுடைய கருத்துக்கள் உடணடியாக அப்லோடு ஆகவில்லை விக்கிபீடியா போன்று. இதறு எவ்வளவு நேரமாகும் என்பதை
    தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்!

  13. maayan

    உங்க கருத்துக்கு நன்றிங்க ராஜி, ஆமா அது பெண ஆவிதான்னு எப்படி இவ்வளவு கரெக்டா சொல்றிங்க.
    படத்தில் காட்டுவதுபோல் ஆவி என்றால் பெண் என்று முடிவுகட்டிவிட்டீர்களா.

  14. maayan

    நன்றி மீனல் சகோதரி, உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது நன்றாக இதில் ஆராய்ச்சியே செய்திருப்பீர்கள்போல் தெரிகிறது!
    ரைட், அப்படி பிரதிபலிப்பினால்தான் தெரிகிறது என்றால், அந்த பிம்பம் நிழலில் விழுவதற்கு வாய்ப்பில்லை என்பது என்னுடைய
    கருத்து. மேலும் அது சரியாக ஜன்னலில் போயா விழ வேண்டும். எப்படி இருந்தாலும் மிக்க நன்றி சகோதரியே. மகேந்திர ராஜ் சொன்னதுபோல் எனக்கு கூடிய சீக்கிரம் அந்த அனுபவம் கிடைக்கட்டும், அதன் பின்பே நம்புகின்றேன்.

  15. Rishi

    //என்னுடைய கருத்துக்கள் உடணடியாக அப்லோடு ஆகவில்லை விக்கிபீடியா போன்று. இதறு எவ்வளவு நேரமாகும் //
    அது பின்னூட்ட ரிலீஸரின் பணிச்சுமையைப் பொறுத்தது. பொறுத்திருங்கள்!!

  16. Rishi

    //படத்தில் காட்டுவதுபோல் ஆவி என்றால் பெண் என்று முடிவுகட்டிவிட்டீர்களா.//
    ஆவி என்றால் பெண்; ஆவன் என்றால் ஆண்.
    (நாமளும் கதையக் கெளப்பி விடுவோம்!!!!)

  17. R.V.Raji

    மாயன்!
    அப்போ படத்தை குத்துமதிப்பாத்தான் காட்டினீங்களா?
    நானாத்தான் உளறிட்டேனா?

Comments are closed.