சில்லுனு ஒரு அரட்டை

வந்தனம், வந்தனம்னு வாசகர்களுக்கு வணக்கம் சொல்றது கொங்கு நாட்டு சிங்கி. எல்லோரும் எப்படியிருக்கீங்க?

ரொம்ப நாளாச்சு நாம பேசி… அரட்டை நண்பர்கள் எல்லோருக்கும் சிற்சில சொந்த வேலைகள் இருப்பதால் கூட்டத்தைக் கூட்ட முடியலை. எனக்கும் நண்பர்கள், உறவினர்கள் வருகையால் உங்களையெல்லாம் சந்திக்க முடியலை(சரக்கு தீர்ந்து போச்சான்னு கேக்கறது காதில விழுகுது, அணுவைத் துளைத்தாவது அறிக்கைகள் தயாரித்து உங்களை சந்திக்க வந்திட்டோம்ல). மின்னஞ்சல் மற்றும் பின்னூட்டம் மூலம் தங்கள் அன்பைத் தெரிவித்த வாசகர்களுக்கு நன்றி.

எங்கள் உறவினர்களுடன் Page, Grand Canyan, Las Vegas என்று பல இடங்கள் சுற்றுலா போயிருந்தோம். பேஜில் முன்னால் மிகப் பெரிய மலைகளாக இருந்தவை எல்லாம் மண் அரிப்பின் காரணத்தால் குகைகளாக மாறி இருந்தன. கொதிக்கும் பாலைவன மணலில் புழுதி பறக்க, அழைத்துச் செல்கிறார்கள் ஒரு மைலுக்கும் மேலாக.

    

குகையின் உள்ளே நுழைந்ததும், சட்டென ஒரு குளிர்ச்சி. தகிக்கும் கதிரவனின் ஒளி சிறிதே உள்ளே வர, தகதகவென தங்கமாய் ஜொலிக்கும் குகையின் சுவர்கள். காணக் கண் கோடி வேண்டும். பகல் 12.00 மணிக்குப் போனால் அற்புதமாய் தெரிகின்றன அந்த குகைகள். அமெரிக்க பழங்குடி மக்களின் பாரம்பரிய விழா, அவர்களின் நம்பிக்கைகள் என சலிக்காமல் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னார் எங்களுடன் வந்த வழிகாட்டி. அத்துடன் குகையின் ஒவ்வொரு பகுதியிலும் குதிரையின் கால், மனித இதயம், பள்ளத்தாக்கு என விதவிதமான உருவம் தெரிய, அழகாய் படம் பிடித்தும் கொடுத்தார் வந்திருந்த அனைவருக்கும்..

மற்ற இன மக்களின் ஆக்கிரமிப்பினால் அமெரிக்க இந்திய மக்கள் தங்கள் நிலங்களை இழந்து தங்களின் அன்றாடச் செலவுகளுக்கு அணிகலன்கள் விற்று, உயிர் வாழ்கின்றனர். பேஜ் போகும் வழியெங்கும் அவர்களின் சாலையோரக் கடைகளைப் பார்க்கையில் கேசென்யோ சைமொனொவா என்ற பெண்மணியின் மணல் ஒவியங்களாக தெரிந்தார்கள். நீங்களும் பார்க்க:

http://www.youtube.com/watch_popup?v=vOhf3OvRXKg

பேஜிலிருந்து திரும்பும் வழியில் குதிரையின் கால் போன்ற வடிவமைப்புடன் இருக்கும் பாறையைப் பார்த்தோம். அதைச் சுற்றி கொஞ்சம் பசுமை கலந்த நீரோடை, சுற்றிலும் அரண்களாய் பாறைகள். நீங்களும் பார்க்க:

    

அங்கிருந்து கிரான் கேன்யானின் தென்பகுதிக்குப் போய்ச் சூரியன் மறைவதைப் பார்த்தோம். அடுத்த இரண்டு நாட்கள் லாஸ் வேகஸில் வேர்க்க, விறுவிறுக்க, விளையாடி என் பொண்ணுக்கு பொம்மைகள் சேர்த்தோம் (எடிட்டரம்மா வேலையிலிருந்து நீக்கிட்டாங்கனா, அப்படியே ஒரு பொம்மைக்கடை வைச்சுப் பொழச்சுக்கதான்).

"புதிய இடங்களுக்குச் செல்லும்போது புலன்கள் நிகழ்கால அனுபவத்தில் லயிக்கின்றன. மனித ஆற்றல் புலன்களில் நிலைப்பதால் மனம் அமைதிபெறுகிறது" நிலாவோட பயணக்குறிப்பை நினைவுபடுத்தும் விதமாக அழகான நினைவுகளை தந்தது இந்த சுற்றுலா.

நிலாவின் பயணக் கட்டுரையைப் படிக்க:

https://www.nilacharal.com/ocms/log/11020903.asp

எங்கள் உறவினர்களை வழியனுப்ப, விமான நிலையம் போனபோது அமெரிக்கர் ஒருவர்என் பெண்ணுடன் கார் ரேஸ் ஓட்டி விளையாடிட்டு, காரை என் பெண்ணுக்குக் கொடுத்துட்டுப் போயிட்டார் (பொம்மை கார்தாங்க). என் பெண்ணின் கையிலிருந்த காரைப் பார்த்திட்டு, பக்கதிலிருந்த குழந்தை அது என்னோட காருன்னு அழ, சமாதானபடுத்தப் போயி நண்பியானாங்க டயானா.

விசாரிக்கையில் நிலாச்சாரல் பற்றிக் கூறியதுமே, சில்லுனு ஒரு அரட்டையில் எழுதுவீங்களே அவங்களா நீங்கன்னு கேட்க…..

ஆன்டி ! எங்கம்மாவை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?. அப்ப இந்தக் காரை உங்க பெண்ணுக்குக் கொடுக்கறேன்னு என் பெண் பொம்மையைக் கொடுத்தாள். . நிறைய பேசி, கிளம்பும் போது என்னவரைக் குனிய வைத்து, ஒரு ஆட்டோகிராப் போட்டு வீட்டுக்கு வந்தோம்.

டயானா சொன்ன பல விஷயங்களில், தமிழை வளர்ப்பது பற்றி அவங்க சொன்னது-, "பெரிய பெரிய மாநாடுகள் நடத்தியோ, உயிர்த் தியாகம் பண்ணியோ தமிழை வளர்த்தனும்னு அவசியமில்லை. நம் குழந்தைகள், நண்பர்களிடம் தமிழில் பேசி, எழுதி வந்தாலே தானாகவே தமிழ் வளரும்"னு. உங்களோட கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

பல தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. 8 வகுப்புக்கள் கொண்ட பள்ளிக்கு இரண்டே இரண்டு ஆசிரியர்கள். ஆசிரியர்களின் சம்பளத்தில் ஒரு சிறு பகுதி, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் சிறு பகுதின்னு போட்டு ஒரு சில பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்கின்றனர்.

செம்மொழி மாநாட்டுக்கு செலவு செய்வதைவிட, இது போன்ற விஷயங்களுக்கு அரசு செலவு செய்திருக்கலாம். வாக்கு வேட்டைக்காக விமர்சையாக கொண்டாடப்பட்ட விழான்னுதான் எனக்குத் தோன்றுகிறது செம்மொழி மாநாட்டைப் பார்க்கையில்.

தங்களால் முடிந்தளவு இத்தகைய குறைகளைக் களைய விழைகிறது இந்தியா டீம் அமைப்பு. அரசாங்கப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளைப் பெருக்க, அமெரிக்க வாழ் இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு ஆண்டு தோறும் குலுக்கல் மூலம் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து வசதிகள் அமைத்து தருகிறது. மனம் இருப்போர், மேலும் விபரம் அறிய:

http://indiateam.org/.

இவர்களின் இந்தச் சேவையால் நான் படித்த ஆரம்பப் பள்ளியும் பயனடைந்துள்ளது. சமீபத்தில் கல்வித்துளிர் அறக்கட்டளைக்காக, பள்ளியின் போட்டோக்களைப் பார்த்தபோது, கீதாவின் கதை நினைவிற்கு வந்தது. நீங்களும் படிக்க:

https://www.nilacharal.com/ocms/log/11240805.asp

கூட்டத்தைக் கலைக்கறதுக்கு முன்னாடி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நடந்த நேர்காணலை பாருங்க:

https://www.nilacharal.com/ocms/log/09280910.asp

பில் கேட்ஸிடம் நானும் சில கேள்விகள் கேட்கணும்…

1. "CON" அப்படின்னு ஒரு ஃபோல்டரை கணினியின் எந்த பகுதியிலும் உருவாக்க முடியலை. ஏன்?
2. ஒரு நோட் பேடில் Bush hid the facts ன்னு எழுதி சேமியுங்கள். திரும்பவும் அந்த நோட் பேடை திறந்த்தால் புஷைக் காணோம் மக்களே… கண்டுபிடிங்க..
3. வேர்ட் டாக்குமெண்டில் =rand (200, 99) ன்னு டைப் பண்ணி என்டர் அடித்தால் என்ன நடக்குதுன்னு பார்த்து பில் கேட்ஸிடம் சொல்லுங்க.

பின்னூட்டத்தில் சந்திக்கும் வரைக்கும் "அன்பாய் இருங்கள், ஆரோக்கியமாய் இருங்கள்" எனக் கூறிப் போய் வருகிறேன்.

About The Author

1 Comment

  1. PREMALATHA

    அம்மிணி சுகமா? என்ன அம்மிணி? இப்புடி சொல்லாம கொல்லாம எங்க போனீங்கோ…. நம்ம தலைவர் ரிஷியையும் கோணோமுங்கோ….நிலாச்சாரல் வேற இனி வராதாமுல?! எழுத்து ஆன்மாவின் வெளிப்பாடுன்னு சொன்னது இங்க தானுங்கோ!! அதை நிறுத்தலாமாங்க? ஏணுங்க! கொஞ்சம் உங்கள் நிலாம்மாக்கிட்ட சொல்லலாமுலங்க! கொ.ப.செ பதவியை கொடுத்துட்டு இப்புடி பொசுக்குணு பறிச்சிட்டு இந்த தலைவர் எஸ்கேப் ஆயிட்டாருங்களே………….நீங்களாவது வந்தீங்களே ரொம்ப சந்தோஷுமுங்க.

Comments are closed.