சில்லுனு ஒரு அரட்டை

ஹாய்! ஹாய்!! ஹாய்!!!

என்னுடைய எழுத்துக்களைப் படித்து, ரசித்து, பாராட்டிய அனைத்து வாசக நண்பிகளுக்கும் என்னுடைய நன்றி. ஜோதி, வித்யா, கவிப்ரியா, கோகிலா, லக்ஷ்மி மாதிரி நண்பிகளுடன் மீண்டும் உங்க எல்லாரையும் சந்திக்கறதில் பயங்கர மகிழ்ச்சி (நண்பர் யாருமே பாராட்டாதது கொஞ்சம் வருத்தமாயிருக்கு 🙁

எல்லோரும் எப்படி இருக்கீங்க? இதே கேள்வியை என்னை யார் எப்போ கேட்டாலும் நான் சொல்ற பதில், "சூப்பரா இருக்கேன்." எப்படி எல்லா நேரத்திலும் சொல்ல முடியும்? அப்படின்னா எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையா? இப்படி நிறையக் கேள்விகள் உங்களுக்குத் தோன்றலாம். ரொம்ப ஸிம்பிள் கான்செப்ட்டுங்க. பிரச்சினை இல்லாதவங்க யாருமே கிடையாது. ஆனால் இதை மட்டுமே நினைச்சு வருத்தப்பட்டுப் புலம்பறதால் பிரச்சனை தீரப்போகுதான்னா கண்டிப்பா இல்லை. இதனால் சந்தோஷமாகவும் தைரியமாகவும் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாமே. என்ன சொல்றீங்க? இப்போ சொல்லுங்க எப்படி இருக்கீங்க?

நான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிப் படங்களை விரும்பிப் பார்பேன். ஆனால் ஆங்கிலப் படங்கள்னா கொஞ்சம் நாலடி தள்ளியே இருப்பேன். அதுக்குக் காரணம் அவங்களோட ஸ்லாங். ஆனால் சன்டே நான் பார்த்த "வால்-ஈ" (Wall-E) படத்தில் இந்தப் பிரச்சனையே இல்லை. துருப்பிடிச்ச வால்-ஈ ரோபோவுக்கும் அல்ட்ரா மாடர்ன் ரோபோ ஈவுக்கும் இடையே ஏற்படும் காதல்தான் கதை. ரோபோக்கள் என்பதால் வசனங்கள் எதுவும் கிடையாது. ரோபோக்கள் ஒருவரை ஒருவர் பேர் சொல்லிக் கூப்பிடுவதுதான் வசனங்கள். பாவனைகளால் ரோபோக்கள் தங்களுடைய எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்துவது சூப்பர். ஆமா Wall-E அப்படின்னா என்ன? Waste Allocation Load Lifter, Earth-Class (Wall-E). நண்பர் எனக்குக் கொடுத்த தகவல் உங்களுக்கும் சொல்ல நினைச்சேன். நீங்களும் உங்கள் வீட்டருகில் இருக்கும் வீடியோ லைப்ரரியில் இருந்தா வாங்கிப் பாருங்க. திருட்டு விசிடி பாக்காதீங்க.

என்னுடைய ப்ரண்ட் கவிதாவுக்குக் குறும்பு ரொம்ப ஜாஸ்திங்க. நேத்து எனக்கு ஒரு வீடியோ ஃபைல் ஈமெயிலில் அனுப்பியிருந்தா. காயத்ரி, ஆபிஸில் மதியம் நீ வேலை செய்யறதைப் படம் பிடித்து அனுப்பியிருக்கேன்னு கூடவே ஒரு செய்தியும் அனுப்பியிருந்தா. ஒரு ஆர்வத்தில் நானும் வீடியோவைப் பார்த்தேன். என்னையும் மீறி பலமா சிரிச்சுட்டேன்.

http://www.youtube.com/watch?v=Mv5WTyqlsVQ

"என்னங்க செய்யறது? உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டாமே" ஏதோ கொஞ்சம் கண்ணசர்றதுதான். அதுக்குன்னு இப்படியாங்க கிண்டல் செய்யறது? சின்னப்புள்ளத்தனமாயில்லை?

ஸன் மியூஸிக்ல "தோழியாய் என் காதலியாய் யாரடி என் கண்ணே.." பாட்டு ஓடிட்டிருந்தது. ரொம்பப் பிடிச்சுப் போய் என் தங்கைகிட்ட அந்தப் பாடலை யார் பாடினதுன்னு கேட்டேன். ஹரீஷ் ராகவேந்தரா பாடினதுன்னு சொன்னா. இது என் தங்கையோட ஸ்பெஷாலிட்டி. எந்தப் பாடலா இருந்தாலும் யார் பாடினது, யார் இசையமைப்பாளர்னு சரியா சொல்லுவா. புதுப் படங்கள்னு மட்டுமில்லைங்க, பழைய படங்களாயிருந்தாலும் பதில் சரியா இருக்கும். உங்களுக்கு ஏதாவது தெரியணுமின்னா கேளுங்க… நான் அவகிட்டே கேட்டுச் சொல்லி உங்ககிட்ட நல்ல பேர் வாங்கிக்கறேன்.

அதிருக்கட்டும், நீங்க எதில் ஸ்பெஷலிஸ்ட்? எங்களுடன் பகிர்ந்துக்குங்களேன். என்னைப் போல் தன்னோட ஸ்பெஷாலிட்டி என்னன்னு தெரியாதவங்க கவலைப்படாதீங்க. தேடிக் கண்டுபிடிச்சுடலாம். தேடினா கடவுளே கிடைப்பாராம். இதை நம்மால கண்டுபிடிக்க முடியாதா? நிலாஷாப்லயிருந்து என் தங்கைக்கு ரொம்பப் பிடித்த ஏ.ஆர். ரஹமான் பாடல்கள் கலெக்ஷ்ன் வி.சி.டி. வாங்கிக் கொடுத்து ஐஸ் வச்சிருக்கேன்: (உங்ககிட்டேருந்து கேள்வி வந்தா அவ பதில் சொல்லணுமே!)

http://www.nilashop.com/product_info.php?products_id=774

எனக்கு ரமணி சந்திரன் அவர்கள் எழுதும் நாவல், தொடர்கதைகள் ரொம்பப் பிடிக்கும். எதனால பிடிக்கும்னா, கதாநாயகன், கதாநாயகியின் பெயர்கள், வீட்டு நபர்களிடையே நிலவும் அன்பு, அக்கறை இப்படிப் பல காரணங்களை அடுக்கலாம். சமீபத்தில் அவர்களுடைய பேட்டியை சினேகிதில படித்தேன். அவங்க தமிழ் அகராதியின் உதவியுடன் கதாநாயகன், கதாநாயகிக்கு அழகாகவும், பொருத்தமாகவும் பெயர் வைப்பாங்களாம். சில சமயம் பொருத்தமான பெயர் கிடைக்க 2/3 தினங்களாகிடுமாம். நியூமராலஜிப்படிதான் பெயர் வைப்பேன்னு அடம் பிடிப்பவர்களின் காதுகளுக்கு எட்டுமா?

குழந்தைகளுக்கு சுடிதார் தைக்கும்போது துணி நிறைய மீதமாயிடுது. நிறையத் துணி மீந்து போறதால் தூக்கிப் போடவும் மனசில்லை. மீதமான துணியை உபயோகப்படுத்த முடியுமான்னு எங்க பக்கத்து வீட்டு ஆன்ட்டி கேட்டாங்க. குட்டீஸ்க்கு எந்த டிரெஸ் போட்டாலும் அழகா இருக்கும். மீந்து போகும் துணியில் ஃப்ராக் (frok)/டாப்ஸ் (tops) தைக்கலாமே. இதனால் குழந்தைகளும் குஷியாகிடுவாங்க, உங்களுக்கும் கவலையில்லை. என்னங்க ஜடியா ஓகேவா?

எனக்கு சின்ன வயசுலயிருந்தே கணிதம் ரொம்பப் பிடிச்ச பாடம். (மதர் ப்ராமிஸ் யாரையும் கணக்குப் பண்ணினது இல்லை, நம்புங்க.) இப்போகூட இணைய தளத்தில் வித்தியாசமான கணக்கு எதாவது இருக்கான்னு தேடுவேன். வித்தியாசமான சில கணக்குகளைப் பார்த்தேன்.

என்னதான் தமிழ் மொழி பழமையானது, இனிமையானது அப்படி இப்படின்னு பேசினாலும் நாம பேசறது என்னவோ தங்கிலீஷ்தான். நாம் ஒரு வரி பேசறதுக்கு முன்னாடி எவ்வளவு ஆங்கில வார்த்தைகள் அதில் உபயோகிக்கிறோம். ! மற்ற மொழிகளுக்கு நான் எதிரி கிடையாது. மற்ற மொழிகளையும் கத்துக்கனும். ஆனால் அதே நேரம் நம்ம மொழியை நாம் மறந்துடக்கூடாது இல்லையா? முடிந்த வரை நம்ப மக்கள் கிட்ட தமிழ்ல பேசலாமே. நான் இப்போ கொஞ்ச நாளா இதைச் செய்யறேன். நீங்களும் முயலுங்களேன்.

அதோட, தினம் ஒரு குறள் அதன் விளக்கத்துடன் தெரிஞ்சுக்கறேன் (ஆங்கில புத்தகங்களைப் படிக்கிறதா இங்கே சில பேர் அலட்டிக்கிறாங்க. ஸ்டைலாமாம்!) உங்களுடைய மின் அஞ்சலிலிருந்து naaloru.kural@gmail.com மின் அஞ்சலுக்கு தினம் ஒரு குறள் பெற விருப்பம் என்று அஞ்சல் அனுபபினால் தினமும் ஒரு குறள் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்தோடு உங்களைத் தேடி வரும். இது கூட சூப்பர் ஐடியாதானே?

போகிற போக்கில் ஒரு விஷயம். ஒரு சோப்புக் கம்பெனி முதலாளியை சந்திச்சுப் பேசிட்டு இருந்தேன். அப்போ அவர் சொன்ன தகவல், நம்மில் பலர் குளிக்கும் போது சோப்பை உடம்பில் தேய்த்து குளிக்கிறோம். ஆனால் அது சரியில்லையாம். அப்படத் தேய்த்துக் குளிப்பதால் தோல் துவாரங்களில் சோப்புத் துகள்கள் சேர்ந்து ஒவ்வாமைக்கு வழி வகுக்குமாம். உங்களுடைய காதுகளில் போட்டு வைக்கணும்னு தோனிச்சு. அதுதான் சொன்னேன். (எதுக்கும் கொஞ்சம் உஷாராவே இருங்க)

சரி வாசகர்களே! தேவைக்கு அதிகமாகவே அரட்டையடிச்சாச்சு. போய்க் கொஞ்சம் வேலையும் செய்யறேன். முடியலையா இருக்கவே இருக்கு (வேலை செய்றமாதிரி) பாவ்லா. அதுதான் நமக்கு நல்லா வருமே.

நாம்ப மறுபடியும் பார்த்தாலும் சரி, பார்க்கலைன்னாலும் சரி, பேசினாலும் சரி பேசலைன்னாலும் சரி, "நல்லாயிருப்போம், நல்லாயிருப்போம் எல்லோரும் நல்லாயிருப்போம்."

About The Author

5 Comments

  1. வடுவூர் குமார்

    அந்த மீர்குட் யூடூப் – அருமையாக இருந்தது.

  2. ரிஷி

    நான் பயிறு மாவு மொத்தமா அரைச்சு வச்சுக்கிட்டு அத யூஸ் பண்ணிதான் குளிக்கிறது. சோப்பெல்லாம் விட்டு ஒன்றரை வருஷமாச்சு.

  3. TSPadmanabhan

    பலதகவல்கள் மிகவும் சுவையாக இருக்கின்றன- வாழ்த்துகள்;

  4. Gayathri

    ரசிச்சு வாழ்த்தின ஜோதி, வடுவூர் குமார், Tஸ்P ஸார் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி. ரிஷி நல்ல ஐடியா அதையே யூஸ் பண்ணுங்க.

Comments are closed.