சில்லுனு ஒரு அரட்டை

வணக்கம் நண்பர்களே! சென்ற வாரங்களில் சில விஷயங்களைப் பற்றி ஆராய்ந்தோம். இந்த வாரம் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்வோம்.

டி.வி, மொபைல், கம்ப்யூட்டர், இணையம் இல்லாத வாழ்க்கையை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? கடினம்தான்! சுமாராக 1980களில் ஆரம்பித்த இணையதள சேவை இன்று அபார வளர்ச்சி கண்டிருக்கிறது. இன்றைய பொழுதில் 20 கோடிகளுக்கும் மேல் இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவாம். இன்றைக்கு இணையத்தின் தேவை பொழுதுபோக்காகு, தகவல் பரிமாற்றம், வர்த்தகம், நிர்வாகம், கல்வி என்று விரிந்து கொண்டே போகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு வளர்ச்சி உள்ளதோ அந்த அளவுக்கு இணையதள மோசடிகளும் இருக்கத்தான் செய்கின்றன.

சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஒருவ்ரின் வங்கியிலிருந்து இரண்டாயிரம் டாலர்கள் இணையம் வழியாகத் திருட்டுப்போனது. வங்கியில் அதைக் கண்டுபிடித்துத் திரும்பக் கொடுத்துவிட்டார்கள். இது போல தினம் தினம் இணையத்தளம் மூலம் தகவல்களும் பணமும் திருடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதற்காக இணையவழி வங்கிச் சேவையைப் பயன்படுத்துவதற்கு பயப்படத் தேவையில்லை. சில விதிமுறைகளை சரியாக கடைபிடித்துவிட்டால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அநேகமாக அனைத்து வங்கிகளும் இணையதளத்துக்குள் நுழைவதற்கு விர்ச்சுவல் கீபோர்டு (virtual keyboard) என்ற தட்டச்சுமுறையை கொடுத்திருப்பார்கள். இதன் மூலம் கீ லாக்கர் போன்ற ஸ்பைவேர்கள் நமது பாஸ்வேர்டைத் திருடுவதைத் தடுக்க முடியும். அதே போல வங்கிகள் இரண்டடுக்கு பாஸ்வேர்டு முறையைப் பயன்படுத்துகின்றன. அதற்கும் மேல் நீங்கள் உங்கள் அக்கவுண்டை லாக் ஆஃப் (logoff) செய்யும்போது உங்கள் பிரவுசரில் சேமிக்கப்பட்ட பேங்க் பரிவர்த்தனை சம்பந்தமான அனைத்து தகவல்களும் அழிக்கப்பட்டுவிடும். எனவே இது நம்பகமானதேயாகும். இந்த ஆன்லைன் பேங்க்கிங் பற்றிய உங்களுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்கலாமே!

சென்ற ஒரு அரட்டையில் கோயம்புத்தூரில் இருக்கிற தியானலிங்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா? போன மாதம் (ஆகஸ்ட்) சுதந்திர தின நாளில் விடுமுறையானதால் அங்கு சென்றிருந்தேன்.

தியானலிங்கம் ஒரே கிரானைட் கல்லினால் செய்யப்பட்டதாம். அது எந்த மதத்தையும் சார்ந்ததில்லை, ஆனா அளப்பரிய சக்திகளை ஒன்றுபடுத்தி அடக்கி வக்கிறதுக்கு அந்த வடிவம்தான் சிறந்ததுன்னு சத்குரு (தியான லிங்கத்தை பிரதிஷ்டை செய்தவர்) சொல்லியிருக்கிறார்.

எப்பவுமே பார்த்தீங்கன்னா கோவிலுக்குப் போகும்போது குளிச்சிட்டுப் போகணும்னு சொல்வாங்க, அதே மாதிரி கோவில்ல தண்ணில நனைஞ்சி அங்கப் பிரதட்சனம் பண்ணிட்டு சாமி கும்பிடப் போறத பார்த்திருப்பீங்க.. அது எதுக்குன்னா நம்ம ஈரமான உடம்பு அந்த கடவுள் வடிவ சிலையில் இருந்து வரக்கூடிய சக்திகளை ஈசியா கிரகிச்சிக்கிடுமாம்.

அதேபோல இங்கேயும் தியானலிங்கத்துக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு தீர்த்த குண்டத்துல குளிக்கச் சொல்றாங்க. அந்த தீர்த்த குண்டத்துல கிட்டதட்ட ஒரு அடி விட்டமுள்ள முழுக்க முழுக்க பாதரசத்தால செய்யப்பட்ட ஒரு உருளை வச்சிருக்காங்க. அதனால்தானோ என்னவோ தண்ணீர் மிகக் குளிர்ச்சியாக வருது.

இந்த தியானலிங்கம் இன்னும் ஐந்தாயிரம் வருஷங்களைக் கடந்தாலும் அதன் சக்தியை இழக்காதாம். இதேபோல் ஒரு தியானலிங்கம் வடநாட்டில் நானூறு வருடங்களுக்கு முன்னாடியே ஸ்தாபிக்கப்பட்டதாம். ஆனால் அது அப்போது முழுமையடையாமல் போய்விட்டதாம். இன்னும் அந்த லிங்கம் தன் சக்தியை இழக்காமல் இருக்கிறதாம். ஆனால் அது முழுமையடையாமல் இருப்பதால் அங்கு யாரும் செல்வதில்லையாம்.

தியானலிங்கம் பற்றி சொல்வதற்கு அனேக விஷயங்கள் இருந்தாலும் அவற்றை இந்த ஒரே அரட்டையில் முடித்து விட முடியாது. ஆகவே அடுத்த டாபிக்குக்கு தாவிவிடுவோம்.

நம் நாட்டின் கனவான சந்திராயன் -1 வெற்றிகரமாக கடந்த ஆண்டு சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. இரண்டு ஆண்டுகள் செயல்பட வேண்டிய சந்திராயன் தன் ஆயுளை கடந்த மாதத்துடன் முடித்துக் கொண்டது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனாலும் அது செய்யவேண்டிய முக்கியமான வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டதாக அதன் இயக்குனர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். மேலும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த எம்3 என்ற கருவியை நாசா நமக்கு வழங்கியிருந்தது. இப்போது அதை நம்மிடமிருந்து வாங்கி ஆய்வு செய்து, சந்திரனில் தண்ணீர் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இந்தியா தன் திறமையை உலகுக்கு நிரூபித்துள்ளதாக மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். இதே உத்வேகத்துடன் அடுத்து சந்திராயன் -2 தயாராகிவிட்டது. அனேகமாக அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இது விண்ணில் செலுத்தப்படும். சரி அதனால் நமக்கென்ன பயன்னுதானே கேட்குறீங்க? இதன் மூலம் இந்தியாவின் மதிப்பும், பொருளாதாரமும் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளுக்குள்தான் விஞ்ஞானத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. நான்கு வருங்களுக்கு முன்பு நான் சென்னை வந்தபோது, எங்கோ ஒரு மூலையில்தான் ஏ.டி.எம் மெஷின் இருந்தது. எங்கள் ஊரான விருதுநகரில் அப்பொழுது அதுவும் கிடையாது. ஆனால் இப்பொழுது பாருங்கள் மூலைக்கு மூலை ஏ.டி.எம் வந்துவிட்டது. இது போதாதென்று கிட்டத்தட்ட அனைத்து முழு வர்த்தக கடைகளிலும் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்திக் கொள்ளும் வசதி வந்துவிட்டது.

முன்பெல்லாம் அந்தந்த வங்கிக்கு உரிய மெஷினைத்தான் பயன்படுத்தி வந்தனர். இப்பொழுது எந்த ஏ.டி.எம் மெஷின் எங்கிருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றளவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் மெஷின் என்று வரும்போது சில குளறுபடிகள் வரத்தானே செய்யும். அதுவும் வேறு வேறு வங்கிகளின் மெஷின் வேறு. மெஷினில் நாம் உள்ளீடு செய்த அளவு பணம் வரவில்லையென்றாலும் தவறுதலாக அதற்கான கணக்கு வரவு வைக்கப்பட்டுவிடுகிறது. இதற்கு நாம் வங்கிக்கு சென்று எழுதிக் கொடுத்துவிட்டு நீண்ட நாட்கள்வரை காத்திருக்க வேண்டும். இது பெருவாரியான மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால் ரிசர்வ் பேங்க் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தவறாக கணக்கு வரவு செய்யப்பட்டால் நாம் எழுதிக்கொடுத்த பன்னிரெண்டு நாட்களுக்குள் அந்த வங்கி அதனை சரி செய்து தரவேண்டும். இல்லை என்றால் அதற்கு பின்பு தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் நூறு ரூபாய் அபராதமாக அக்கவுண்டு ஹோல்டருக்கு வரவு செய்யவேண்டும் என்று அறிவித்துள்ளது. இருந்தாலும் அதை நாம் எழுதிக் கொடுக்காமலே வங்கியே கண்டுபிடித்து சரிசெய்தால் நமக்கு அலைச்சல் மிச்சம்தானே. நீங்க என்ன சொல்றீங்க? கூடிய விரைவில் ரிசர்வ் பேங்க் அதையும் செயல்படுத்தும் என்று எதிர்பார்ப்போம்.

அப்பப்பா! இன்றைய காலத்து குழந்தைகளின் சேட்டைதானென்ன! சுட்டித்தனம் மட்டுமல்ல அவர்களின் அபார அறிவு வளர்ச்சியும் நம்மை பிரம்மிக்க வைக்கிறது. ஒரு சிறுவன் ஆறு வயதிலேயே பைக் ஓட்டுகிறானாம் (கால் எட்டாதே என்ன செய்வான்?) மற்றொரு சிறுமி ஐந்து வயதுகூட நிரம்பவில்லை.. அத்தனை குறள்களையும் மனப்பாடமாக ஒப்பிக்கிறாளாம். ஆனாலும் பள்ளிக்கூடத்தில் நாம் செய்யாத சேட்டைகளா?

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் நடந்த சுவையான ஒரு சம்பவம் இப்பவும் என் மனதில் நிழலாடுகிறது. தீபாவளி பட்டாசில் சீனிவெடி, சரவெடி, அணுகுண்டு கேள்விப்பட்டிருப்போம். ஆனா அந்த அணுகுண்டை டைம்பாம்மா பயன்படுத்த முடியுமா?

பள்ளியில் வழக்கம் போல் அன்று காலை பிரேயர் நடந்து கொண்டிருந்தது. ஒரு பத்து நிமிடங்கள் சென்று இருக்கும் அப்போது ‘டமால்’ என ஒரு அணுகுண்டு பிரேயர் நடக்கும் பில்டிங்கின் மொட்டை மாடியில் வெடித்தது. ஆனால் அது தீபாவளி நேரம் என்பதால் வேறெங்கேயோ வெடிக்கிறது என்று ஆசிரியர்கள் சும்மா இருந்துவிட்டனர். அடுத்த பத்து நிமிடங்கள் கழிந்தபோது படபடவென சரவெடி பொறிந்து தள்ளிவிட்டது. இப்பொழுதுதான் அங்கிருந்த ஆசிரியர்களுக்கு உரைக்க ஆரம்பித்தது. அதற்குள் பிரேயரும் முடிந்திருந்தபடியால் ஆசிரியர்கள் சிலர் ஓடிச்சென்று பார்த்தனர். மற்ற ஆசிரியர்கள் மாணவர்களை ஒழுங்குபடுத்தி வகுப்பிற்கு அனுப்பிவிட்டனர்.

அந்த பில்டிங்கின் மொட்டை மாடியில்தான் அணுகுண்டும், சரவெடியும் வெடித்திருந்தது. ஆனால் வெடிக்கு நெருப்பு வைக்க அங்கு குறும்புபையன்கள் யாரும் இல்லை. எப்படி வெடித்தது அதுவும் சிறிது நேர இடைவெளியில்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்போதுதான் எங்க கெமிஸ்ட்ரி வாத்தியார் கண்டுபிடித்தார். அங்கே ஒரு பத்திக்குச்சி எரிந்து முடியும் தருவாயில் இருந்தது. அருகில் இருந்த வாத்தியார்களிடம் காண்பித்துள்ளார். அதற்குள் எங்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டது. வெடிவைத்தது யாருன்னு பையன்களிடையே பட்டிமன்றம் நடக்காத குறைதான்.

சிறிது நேரத்தில் கெமிஸ்ட்ரி வாத்தியாரே எங்கள் வகுப்பிற்கு வந்தார். அங்கே நடந்திருந்ததை அவரே சொன்னார். எங்களுக்கு முன்னமே தெரியும் என்றாலும் தெரியாததைப் போல் காட்டிக் கொண்டோம். யாரோ சிலர் பத்திக்குச்சியோட முனையிலிருந்து பாதிதூரத்துல அணுகுண்டையும், பத்திக்குச்சி முடியிற இடத்துல சரவெடியையும் கட்டிவிட்டுட்டு பத்திக் குச்சிக்கு நெருப்பு வெச்சிருந்திருக்காங்க. அதான் கிட்டதட்ட பத்து நிமிட இடைவெளி விட்டு இரண்டும் வெடிச்சிருக்கு என்றார். ஆனா அந்த பையன்தான் யாருன்னு கடைசி வரைக்கும் எங்களுக்கும் தெரியல.

ஆங்… நேரமாகிவிட்டது, மீண்டும் சந்திப்போம் வேறு நல்ல அரட்டை செய்திகளுடன்.

வர்ட்டா!

About The Author

1 Comment

  1. R.V.Raji

    மாயன்!
    அப்போ அணுகுண்டும், சரவெடியும் வச்சது நீங்க இல்லையா?

Comments are closed.