செய்தியே, உனக்கு ஒரு செய்தி (2)

ஈழத் தாயைப்
பெற்றெடுக்க இரத்தம் சிந்தும்
சேய்களுக்கு
வெற்றி முத்தம் ஒன்று
கொண்டு வருவாயா?

‘வளைகுடாக்
கரையோடு வையம் எல்லாம்
வெள்ளைப் புறாக்களுக்கு
விளையாடும் இடம்’
இப்படிப் பிரகடனம் செய்ய
எப்போது வாய் திறப்பாய்?

"அன்னாருக்கு
வயது அறுபத்தாறு" என்று
கண்ணை மூடியவர் கதையை
அழுதழுது உனக்கும்
தழுதழுத்துப் போனது தொண்டை!

இன்னாருக்கு வயது இருபத்திரண்டு
இதைச் சாதித்தார் எனப்
படங்காட்டிச்
சாதனைகளால்
சரித்திரக் கதவுகளைத்
திறப்பாயா?

வறுமை, பிணிக்காடுகளில்
அறுவடை செய்த
பிணங்களை
மூட்டை மூட்டைகளாய்
முதுகு வளையச்
சுமந்து வரும் நீ!
கை நிறையச்
சோறள்ளி வருவாயா?
இந்தா இந்தா என்று
இருமல் மனிதர்க்கு
மருந்து கொண்டு வருவாயா?

உண்மையாய் எப்போது
வருவாய்? செய்தியே எப்போது
வருவாய்?

About The Author