சொற்கள் கொன்றவன்!

நீண்ட நாட்களுக்குத்
தோன்றிய பிறகே
நினைவுக்கிடங்கைக்
குடைந்தேன்.

மருந்துக்குக்கூட
சொற்கள் கிடைக்கவில்லை!
ஆனால் நிறைய
சொற்கள் இருந்தமைக்கான
தழும்புகள் இருந்தன.

அவற்றிலெல்லாம் நிறைய
புள்ளி வைத்த எழுத்துக்கள்
மட்டுமே குவிந்துகிடந்தன.

முன்னெழுத்துக்கள் இன்றி
எப்படி இந்தப்
புள்ளி எழுத்துக்களில்
ஒரு வாக்கியத்தையோ அல்லது
ஒரு வாழ்வையோ எழுதமுடியும்?

செலவழிக்கும் முன்
யோசித்திருக்க வேண்டும்.
சொல்கொன்ற குற்றவாளியாக
நிற்கிறேன்
காலச் சிறையில்!

About The Author

1 Comment

  1. ரிஷபன்

    புள்ளி எழுத்துக்களில்
    ஒரு வாக்கியத்தையோ அல்லது
    ஒரு வாழ்வையோ எழுதமுடியும்?

    சொற்கள் கொன்றவன்.. தலைப்பே வித்தியாசமாய்.. கவிதையும் சிந்தனையைத் தூண்டுவதாய்.. வாழ்த்துகள் ஹரணி !

Comments are closed.