தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (20)

ஓவியம் பற்றிய பெயர்கள்

ஓவியத்தை வட்டிகைச் செய்தி என்பர். என்னை? “வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்” என்பது மணிமேகலை.

வண்ணம் தீட்டாமல் வரைந்த ஓவியத்துக்குப் புனையா ஓவியம் என்று பெயர் கூறப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Outline drawing என்பர்.

"மனையகம் புகுந்து மணிமே கலைதான்
புனையா ஓவியம் போல நிற்றலும்"1

என்றும்,

"புனையா ஓவியம் புறம்போந் தென்ன"2
என்றும் மணிமேகலை கூறுகிறது.

“புனையா ஓவியம் கடுப்ப” என்று நெடுநல்வாடை (147) கூறுகிறது. இதற்கு, "புனையா ஓவியம் கடுப்ப-வண்ணங்களைக் கொண்டெழுதாத வடிவைக் கோட்டின சித்திரத்தை யொப்ப" என்று நச்சினார்க்கினியர் உரை எழுதுகிறார்.

ஓவியத் தொழிலுக்கு வட்டிகைச் செய்தி என்னும் பெயரும் உண்டு. வட்டிகை என்பது துகிலிகை.3
காவிரிப்பூம்பட்டினத்திலே, தன் காதலியுடன் அமர்ந்து யாழ் வாசித்துக் கொண்டிருந்த எட்டி குமரன் என்பவன், திடீரென்று ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து ஓவியம் போன்று அசைவற்றிருந்ததைக் கூறுகிற சீத்தலைச் சாத்தனார், வட்டிகைச் செய்தி (ஓவியப் படம்) போல் இருந்தான் என்று கூறுகிறார்:

"தகரக் குழலாள் மன்னொடு மயங்கி
மகர யாழின் வான்கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
எட்டி குமரன் இருந்தான்…”4

வட்டிகைப் பலகை என்பது, ஓவியம் எழுதும்போது வர்ணங்களைக் குழைக்கும் பலகை.
பாலை பாடிய பெருங்கடுங்கோ என்பவர் அரசர் குலத்தில் பிறந்த புலவர். இவர், ஓவியர் சித்திரம் எழுதும் துகிலிகை, பாதிரிப்பூவைப் போல இருக்கும் என்று கூறுகிறார்.

"ஓவ மாக்கள் ஒள்ளரக் கூட்டிய
துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி"

என்பது அவர் வாக்கு.5

சில ஓவியச் செய்திகள்

கந்தரத்தனார் என்னும் புலவர், அழகிய பெண் மகள் ஒருத்தியை ஓவியக் கலைஞன் எழுதிய பெண் உருவத்திற்கு உவமை கூறுகிறார்.

"வல்லோன்
எழுதி யன்ன காண்டகு வனப்பின்
ஐயள் மாயோள்…………….."

என்று அவர் கூறுகிறார்.6

ஓவியத்தைப் பற்றிச் சீவகசிந்தாமணிக் காவியத்தில் திருத்தக்கதேவர் குறிப்பிடுகிறார். தோலாமொழித் தேவரும் தமது சூளாமணிக் காவியத்தில் கூறுகிறார். கொங்குவேளிரும் பெருங்கதை என்னும் காவியத்திலே கூறுகிறார்.

கம்பர், தமது இராமாயணத்தில் தமிழ் நாட்டுப் பண்புகளை அமைத்துக் கூறுவது போலவே, இவர்களும் தமது காவியங்களில் தமிழ் நாட்டுக் கலைகள் பலவற்றை இடையிடையே அமைத்துக் கூறுகின்றனர். ஓவியக் கலையைப் பற்றி இவர்கள் கூறுவதைக் காண்போம்.

–கலை வளரும்…

________________________________________
1. மணிமேகலை, ஆதிரை., 130-131.
2. மணி., சிறைக்கோட்டம்., 88
3. துகிலிகை – Brush
4. மணிமேகலை, பளிக்கறை., 55-58.
5. நற்றிணை, 118
6. நற்றிணை, 146

About The Author