தமிழ் என்னும் விந்தை! (21)

சுழிகுளம் – 1

சித்திர கவிகளில் ‘சுழி குளம்’ இன்னொரு வகையாகும். இது எவ்வெட்டெழுத்துக் கொண்ட நான்கு அடிச் செய்யுளாய் மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும், புறம் சென்றும் முடியும்படி படிக்கத்தக்க வகையில் பாடப்படுவதாகும்.

இதற்கு எடுத்துக்காட்டாகப் பரிதிமாற் கலைஞர் தரும் செய்யுள் இது:-

"கவிமுதி யார்பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா"

இந்தச் செய்யுளின் பொருள்:-

கவி முதியார் பாவே – செய்யுள் இயற்றுவதில் முதிர்ச்சி அடைந்தவர் பாடல்களே
விலை அருமை மா நன்மை பா – விலை மதித்தற்கு அரிய பெருமை வாய்ந்த நல்ல பாடல்களாகும்;
முயல்வது உறுநர் – முயற்சி செய்வதில் நன்கு பொருந்தினவர் தம்
திரு அழிந்து மாயா – செல்வம் சிதைந்து தொலையா.இதைச் சித்திரத்தில் அமைத்தால் வருவதைக் கீழே காணலாம்.

அடுத்து இன்னொரு பாடல்:

"மதந விராகா வாமா
தநத சகாவே நீவா
நததந தாதா வேகா
விசந விரோதா காரா"

இந்தச் செய்யுளின் பொருள்:-

மதந விராகா – மன்மதன் மீது விருப்பம் இல்லாதவனே!
வாமா – ஒளியை உடையவனே!
தநத சகாவே – குபேரனுக்குத் தோழனே!
நத் அதந தாதா – மேகத்தை விட அதிகமான கொடையாளியே!
விசந விரோதா காரா – துக்கத்தைச் செய்யும் விரோதமான விஷமாகிய உணவினை உடையவனே! (இதன் இன்னொரு பொருள்:- விசனத்திற்கு விரோதமான அதாவது விசனத்தைப் போக்கும் ஸ்வரூபத்தை உடையவனே!)
நீ வா கா – நீ பிரத்தியக்ஷமாகத் தரிசனம் தந்து எம்மைக் காப்பாற்றுவாயாக!

இந்தச் செய்யுள் அமைந்த சித்திரத்தைக் கீழே காணலாம்:

கிடைமட்டமாகச் செய்யுளின் நான்கு அடிகளும் வருவதை முதலில் காணலாம். பின்னர், எட்டு செங்குத்தான வரிசைகளில் மேலிருந்து கீழாக முதல் வரிசையிலும், அடுத்து கீழிருந்து மேலாக எட்டாம் வரிசையிலும், ஆக இப்படி மாறி மாறி 2, 7, 3, 6, 4, 5 ஆகிய வரிசைகளில் செய்யுள் அமைவதைக் கண்டு இன்புறலாம்.

இன்னும் சில சுழிகுள வகைப் பாடல்களை வரும் வாரங்களில் காண்போம்!

–விந்தைகள் தொடரும்…

About The Author