திருவண்ணாமலை கிரிவல மகிமை (3)

அடுத்து 8.5 கிலோமீட்டரில் அமைந்திருப்பது வாயு லிங்மாகும். இவரை சுவாசம் சம்பந்தமான மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் குணமாக வேண்டி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அதன் பின்பு சிறிது தூரத்தில் வலதுபுறத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயமும், இடதுபுறத்தில் லோபமுத்ரா அகஸ்தியர் ஆசிரமமும் இருக்கின்றன. அதைத் தொடர்ந்து பஞ்சமுக தரிசன பகுதியும் வருகிறது. இங்கு இரண்டு சித்தர்களின் சமாதிகள் இருக்கின்றன.

அடுத்த இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் குபேர லிங்கம் இருக்கிறது. இங்கு மட்டும் பக்தர்கள் கூட்டம் சற்று அலைமோதுகிறது. நாட்டிற்கும் வீட்டிற்கும் செல்வம் வேண்டி வணங்குகின்றனர். இங்கு மூலவரின் கருவறைக்குள் நாணயங்களை எறிகின்றனர். பதிலுக்கு அவர் நமக்கு அளவில்லா செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

அடுத்ததாக உச்சிப்பிளையார் கோவிலும் அதைத் தொடர்ந்து இரண்டு கிலோமீட்டரில் ஈசான்ய லிங்கமும் இருக்கின்றன. ஏழரை நாட்டுச் சனி பிடித்திருப்பவர்கள் இவரை வணங்கி கஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாமாம்.

அடுத்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தால் அண்ணாமலையார் கோவிலின் கிழக்கு இராஜகோபுரத்தை அடைந்து விடலாம்.
கோவிலினுள் அண்ணாமலையாரும், உண்ணாமலையம்மாளும் குடிகொண்டிருக்கின்றனர். கோவில் உள்ளே மூன்று கோபுரங்களுடன் மிக விஸ்தீரணமாக இருக்கிறது.

கோவிலின் மாதிரி வடிவம்

Kovil model

கோவிலின் உள்புறத் தோற்றம்:

Kovil inside

கிரிவலம் வரும்போது கடைபிடிக்க வேண்டியவை :

1.அமாவாசை அன்று ஆண்கள் காவி வேட்டியும், துண்டும் அணிந்து செல்லலாம். பெண்கள் செவ்வாடை அணிந்து செல்லலாம்.

2.பெளர்ணமி அன்று ஆண்கள் பச்சை வேட்டி அல்லது வெண்ணிற ஆடை அணிந்து செல்லலாம். பெண்கள் பச்சை ஆடை அணிந்து செல்வது மிகுந்த பலனைத் தரும்.

3.கிரிவலம் வரும் ஒவ்வொருவரும் ஒரு எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்துச் செல்வது உத்தமம். அவ்வாறு எடுத்து வரும் எலுமிச்சம்பழத்தை பூஜை அறையிலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ வைப்பது மிகுந்த பலன் தரும். எதிர் மறை சக்திகளை அறவே நீக்கும் சக்தி கொண்டதாகக் கூறப்படுகிறது.

4.கிரிவலம் வரும் வழியில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் ஊதுபத்தியும், கற்பூரமும் அவசியம் ஏற்ற வேண்டும். ஊதுபத்தி நறுமணம் தீய எண்ணங்களைத் தடுக்கும் சக்தி கொண்டது.

5.முக்கியமாக, அமாவாசை-பெளர்ணமி திதி எப்பொழுது ஆரம்பமாகிறது என்று சரியாக பார்த்து செல்ல வேண்டும். திதி முடியும் தருவாயில் அவசர அவசரமாகச் செல்ல வேண்டாம். மேலும் திதி இரவு முழுவதும் இருந்தால் அந்த இரவில் வலம் வருவது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும்.

6.கிரிவலத்தின் போது காலணிகள் இல்லாமல் செல்ல வேண்டும். குழந்தைகள், வயதானவர்கள், நோயுற்றவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் மட்டும் வாகனத்தில் வலம் வரலாம்.

7.கிரிவலம் வரும்போது வீண் அரட்டை அடிக்காமல் அமைதியாக பஞ்சாட்சர மந்திரத்தை மனதில் தியானித்துக் கொண்டு செல்ல வேண்டும்.

8.கிரிவலம் முடிந்ததும் வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு சென்றால் அதன் முழு பலனையும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக ஐதீகம்.

9.பரம்பரையில் வந்த நல்ல குருநாதர்களிடம் சிவதீட்சை பெற்றுக் கொண்டு கிரிவலம் வந்தால் ‘பிறவியில்லா பெருவாழ்வு’ என்ற பேரானந்த நிலை கிடைக்கப் பெறலாம்.

அமைவிடம், செல்லும் வழி

திருவண்ணாமலை கோவில் விழுப்புரத்திற்கும் காட்பாடிக்கும் இடையில் உள்ளது. விழுப்புரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும், காட்பாடியிலிருந்து 90 கிலோ மீட்டரிலும் மற்றும் சென்னையிலிருந்து 185 கிலோ மீட்டரிலும் உள்ளது. சென்னை, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து வசதி அடிக்கடி உள்ளது. ஆனால் ரயில் தடம் இந்தப் பகுதியில் இல்லை. ஆகவே, தென் தமிழ்நாட்டில் இருந்து ரயிலில் வருபவர்கள் விழுப்புரத்தில் இறங்கி பேருந்தில் செல்லலாம். மேலும், சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு, திண்டிவனம், மதுராந்தகம், வேலூர் மற்றும் போலுரில் இருந்தும் பேருந்து வசதி தாராளமாக உள்ளது. பெளர்ணமி நாளில் மட்டும் அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. அங்கு தங்குவதாக இருந்தால் கோவிலுக்குச் சொந்தமான விடுதிகளில் வசதிக்கேற்ப 50 ரூபாயிலிருந்து 200 ரூபாய் அளவு வரை தனி ரூம் பிடித்து தங்கிக் கொள்ளலாம். கோவிலுக்கு அருகிலும், சுற்றிலும் தனியார் விடுதிகளும் நிறைய உள்ளன.

இம்மலையில் பல ஜீவ ஆத்மாக்கள் அடங்கியுள்ளன. அவர்களை வலம் வருவது கோரிக்கைகள் நிறைவேறவும், நிம்மதி கிடைக்கவும், நல்ல பலன்களை அடைவதற்கும் ஒரு வழியாகும். ஜீவ காருண்ய மனதுடன் வலம் வந்தால் தனி நபர் சுபிட்சம் மட்டும் அல்லாது உலக சுபிட்சம் ஏற்படவும் வழி பிறக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

About The Author

2 Comments

  1. V.RAVI KUMAR

    Om Namavasiya
    This is very useful for all the devotees who aim to start girivalam & its secrets.

Comments are closed.