நிறைவேறாத ஆசைகள்

ஆழ என்னெஞ்சில் தைத்த
அயல்மொழிப் படத்தின் கதையை
அருகிருந்து உனக்கு நான்
அங்குலம் தவறாது சொல்ல வேண்டும் !

தூக்கத்தில் வந்தென்னைத்
துரத்திய மதயானையைப் பற்றித்
துடிக்கும் உதடுகளால் சொல்லித்
துயரத்தைப் பகிர வேண்டும்!

நித்தமும் என் நெற்றிப் பொட்டில்
நச்சென்று தெறிக்கும்
தலைவலியின் கொடுமையைத்
தவறாமல் சொல்ல வேண்டும்!

குட்டிப் பாப்பா செய்கின்ற
குறும்புச் சேட்டைகளையெல்லாம்
குறைவில்லாமல் சொல்லி, உன்னைக்
கிறுகிறுக்க வைக்க வேண்டும்!

உனக்குப் பிடித்தப் புடவையொன்றை
இந்நேரம் உடுத்தியிருப்பதையும்,
உன் மீதான என் காதலையும் சொல்லி
உன்னைத் திக்குமுக்காடச் செய்ய வேண்டும்!

அலைமோதும் என் ஆசைகளை
அப்படியே சொல்லிவிட,
தொலைபேசியில் அழைக்கிறேன்,
தொலைவில் வாழும் உன்னை!

"ஏழு நாட்களுக்குள் ஏனிந்த அழைப்பு?
அதிகமாய்ச் செலவாகுமே,
அடுத்தவாரம் பேசுவோமெ"ன்று
அவசரமாய்த் துண்டிக்கிறாய்!

நிராசையாகிப்போன என் நித்திய வலிகள்
கலையாத என் கண்மையைக்
கரைந்தோடச் செய்கின்றன!

About The Author

4 Comments

  1. P.Balakrishnan

    VELI NAADU SENDRA VUNNAI VIRUMBI AZHAIKIREN, VIRAINTHU VANTHUVIDU VENDIYATHAI TAHNTHUVIDU ,VAZHI MEETHU VIZHI VAITTHUK KAATTHIRUPPEN VAA KANNA VAA – endru azhippathaippol vullathu Arumaiyana kavithai.

Comments are closed.