பரிசு

எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு பெண்ணைச் சந்திக்கும்போது என்னென்ன உணர்வுகள் வருமோ, சந்தோஷமும் சில சங்கடங்களும் சந்திராவைப் பார்த்தபோது.

உண்மையில், சந்திராதான் என்னை அடையாளம் கண்டுகொண்டாள்.

"பாலா… நீதானே?… ஸ்ஸ்… நீங்க…?"

என் கணிசமான தொந்தி, மூக்குக் கண்ணாடி, முன் வழுக்கை, காதோரம் மட்டுமின்றி பரவலாய்த் தெரிந்த நரை, இவை மீறிய கண்டிப்பு.

"சந்… சந்திரா…" என்றேன் ஒரு திடுக்கிடலுடன். பெண்கள் வயதானதை ஒப்புக் கொள்வதில்லை. ஜோடனைகள் தவிர்த்து, ஒப்பனையின்றி நின்ற சந்திராவிடம் இன்னமும் பழைய வசீகரச் சிரிப்பு மிச்சமிருந்தது.

“பாலா…!” என்றாள் மீண்டும் உரிமையாய். குரல் நெகிழ்ந்திருந்தது. கண்களில் சட்டென்று ஈரம் பூத்துக்கொண்டது. கூட்டத்தில் தொலைந்த சிறுமி, உரியவர்களில் ஒருவனை இனங்கண்ட பரவசம், நிம்மதி போல் முகத்தெளிவு!

"எதாவது சாப்பிடலாமா?" என்றாள்.

"எனக்குப் பசிக்கலே" என்றவன், சுதாரித்தேன். அழைப்பு பசிக்காக இல்லை. அமர்ந்து பேச ஓரிடம்.

"வா போகலாம்!" என்றேன். கை தன்னிச்சையாய் உயர்ந்து சட்டைப் பையைத் தொட்டுக்கொண்டது. அவசியம் இல்லைதான். கூடுதலான தொகைதான் உள் பாக்கெட்டில். மூவாயிரம். அதை மீறியா சாப்பிட்டுவிடப் போகிறோம்!

"என்ன வேணும்?…"

"கூல்ட்ரிங் எதாச்சும்…" சர்வர் நகர்ந்து போக, என்னைப் பார்த்தாள். அவள் அளவு என்னுள் பரவச அலைகள் இல்லை. புரிந்திருக்க வேண்டும்.

"பாலா! நீ மாறிட்டே!"

"நீயும்தான். கொஞ்சம் பருமன்… முகங்கூட லேசா…"

"பச்… நான் அதை சொல்லலே. மனசுல…"

"பாலா! உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?"

"ம்…" என்றேன் தலை கவிழ்ந்து.

"ஓ!…"

என்னவோ நினைவுகள் அவளுக்குள் ஓடியிருக்க வேண்டும். மிகப் பெரிய விஷயத்தை ஜீரணித்தவள் போலப் பெருமூச்சு விட்டாள்.

"எத்தனை பசங்க?"

"ஒரு பையன். சந்திரன்னு பேரு."

சர்வர் கொண்டு வைத்த பாட்டில்களை வெறித்தாள்.

"பாலா! நான் இப்ப டில்லியில் இல்லை. திரும்ப வந்துட்டேன். பெரியப்பாவும் தவறிட்டாரு."

"அடடா!…"

"கணேசன் என்னை விரட்டிவிட்டான். ப்ச்… போன்னு ரொம்ப நாகரீகமா…"

கூல்ட்ரிங்க் குடிக்க மனமின்றி ஸ்ட்ராவை உருட்டினேன்.

"உன் ஞாபகம்தான் வந்தது பாலா…"

‘சந்திரா! என்னைக் கொல்லாதே’ என்று கூவ வேண்டும் போலிருந்தது.

"எம் பேர்லதானே தப்பு பாலா?" குரல் பிசிறியது. தன்னிரக்கம் வழிந்தோடக் கேட்டாள்.

"இல்லை சந்திரா. எனக்கு அதிர்ஷ்டம் இல்லே."

"பச்! பொய் சொல்லாதே பாலா! நீ இப்ப வெல் ஸெட்டில்டு."

அவள் என்னை உற்றுப் பார்த்தது உறுத்தியது. குற்றம் சாட்டும் பார்வை. இதற்கு முன், சரியாகப் பத்து வருடங்களுக்கு முன், அவள் பார்வையில் என் மீது காதல்தான் வழிந்திருக்கும்.

******

"வேண்டாம் பாலா! ப்ளீஸ்!"

"ஊஹும்… வேணும்! இன்னைக்கே… இப்பவே…"

"பாலா…!"

"சரி! அவ்வளவுதானே?… உன்னை நான் வற்புறுத்தவே இல்லை."

"கோபமா?"

"இல்லே, ரொம்ப சந்தோஷம்! ஒண்ணு தெரியுமா? நீ மறுக்கிறது இதோட எட்டாவது முறை. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை. உன்னைப் பொறுத்தவரை நான் கெட்டவன்… அதானே?"

"பாலா…!!"

"ப்ளீஸ், போ! எனக்குத் தனிமை வேணும்! வீட்டிலேயே யாரும் இல்லே. நிம்மதியா இருக்கேன். போ!… போயிடு!"

"அம்மணி வருவாளா?"

"அது எதுக்கு?"

"சொல்லேன்! வருவாளா?"

"வர மாட்டா. மூணு நாளைக்கு அவளுக்கு லீவு கொடுத்தாச்சு."

"சரி, வா!… என்ன பார்க்கிறே? நாந்தானே வேணும்? வா… எடுத்துக்க!"

"இப்படி இல்லே. முழு மனசா. பிச்சை போட வேணாம்!"

"முழு மனசா சொல்றேன். வா! ஐ பீலீவ் யூ!"

"வே…ணாம்…!"

என் மறுப்பு தோற்றது. ஏனெனில் அது பொய்யானது. அவளின் அன்பு நிதர்சனமாய் வென்றது.

"இப்ப சொல்லு! எனக்கா உன் மேல் நம்பிக்கை இல்லை?"

தலை கவிழ்ந்தேன். அன்றும் இன்றும்.

*********

"பாலா!… என்ன யோசிக்கறே?… என்னை ஏன் பார்த்தோம்னு இருக்கா?"

"இல்லே சந்திரா. நான் ஒரு கோழை. என்னாலே யாருக்குமே சந்தோஷம் இல்லை…" இம்முறை என் குரலில் ஒப்பனை தொலைந்து நிஜம் பீரிட்டது.

"அழகான மனைவி, மகன். அப்பறம் என்ன பாலா?" என்றாள். என் வசதிகளைவிட அவள் இழப்புகளின் கனம் குரலில் தொனித்தது.

"இப்ப எங்கே இருக்கே சந்திரா?"

"பச்… என்ன செய்யறதுன்னு புரியலே பாலா. மறுபடி டெல்லிக்குப் போயிரலாமான்னு… இங்கே விட அங்க எனக்கு உதவ யாராவது இருப்பாங்கன்னு… ஆனா…"

"என்ன சந்திரா?…"

"ஒண்ணுமில்லே பாலா. என்னவோ தெரியலை. உன்னை மறுபடி பார்த்ததும் எனக்கு பழைய திடம் மனசுல வந்த மாதிரி… சில சமயங்களில், வாழ்க்கை என்னை சந்தோஷமாகவும் வச்சிருக்கு. இன்றைய சோகம் மட்டுமே சாஸ்வதம் இல்லே…"

எழுந்து கொண்டாள்.

"இதோ வரேன் பாலா. ஒரே நிமிஷம்…"

வாஷ்பேசினுக்குப் போனாள். மேஜை மீதிருந்த கைப்பையை அவள் கவனிக்கிறாளா என்று நோட்டம் விட்டு அவசரமாய்த் திறந்தேன். உள்ளே ஒரு பத்து ரூபாயும் சில சில்லறை நாணயங்களும்.

‘டெல்லிக்கே போகலாம்னு…’ சந்திரா மனசுக்குள் கேவல் கேட்டது.

திரும்பி வந்தாள். கைப்பையை எடுத்துக் கொண்டாள். பளீரெனச் சிரித்தாள்.

"நீதான் கூல்ட்ரிங்க்ஸுக்குப் பணம் தரணும். உனக்கு செலவு வைக்கிறேன்."

"என்னது சந்திரா…? ஆஃப்டர் ஆல்…"

வெளியே வந்தோம்.

"மறுபடியும் எப்ப வருவே… சந்திரா?"

"வரமாட்டேன் பாலா."

திடுக்கிட்டு அவளைப் பார்த்தேன்.

"பயப்படாதே பாலா! நான் என் வழி போறேன். எனக்கும் எதாச்சும் ஒரு நல்ல வழி கிடைக்காமலா போயிடும்?… பாலா! மறுபடியும் நாம சந்திக்கிற வரை, என்னை ஞாபகம் வச்சிருப்பியா?" கடைசி வரியில் தேம்பிச் சுதாரித்தாள்.

"வரட்டுமா?"

திரும்பிப் பார்க்காமல் போய்விட்டாள்.

*****

வத்சலா என்னை வினோதமாய்ப் பார்த்தாள்.

"அடுத்த வாரம், நம்ம மேரேஜ் டேக்கு ஏதோ வாங்கித் தந்து அசத்தப் போறேன்னு கிளம்பிப் போனீங்க… வெறுங் கையா திரும்பி வர்றீங்க!"

"அடுத்த வாரம்தானே?… இன்னும் ஆறு நாள் இருக்கே!…" என்றேன் லேசான சிரிப்புடன்.

About The Author

2 Comments

  1. A. Ravi

    பழைய காதலியை வெகு வருடங்களுக்குப் பிறகுப் பார்ப்பது மிகவும் சுகமான அதே சமயம் கொஞ்சம் நெருடலான விஷயம். நல்ல கதைக் களம். இன்னும் கூடஉணர்ச்சிகளோடு விளையாடியிருக்கலாம் ரிஷபன்.

    ரவி.

  2. Nadeeka

    அனேகமான ஆன்கல் இப்படித்தான் இந்த சமுதாயத்தில். நல்ல முயட்சி.
    வாழ்துக்கல் ரிஷபன்.

Comments are closed.