பாபா பதில்கள்-வினைப்பயன் என்பது என்ன?

Q. வினைப்பயன் என்பது என்ன?

கம்பராமாயணத்தில் பரதனுடைய சைன்யம் வருவதைப் பார்த்து லட்சுமணனுக்கு கோபம் வருகிறது. நான் போய் அவர்களை அழித்துவிட்டு வருகிறேன் என்ற போது "இது விதியின் பிழை வெகுண்டது என்ன" என்று இராமர் கூறுகிறார். மாரீசனின் குரல் ராமா என்று கேட்கும்போது செல்ல மறுக்கிற லட்சுமணனை கடுமையான வார்த்தைகளால் சீதை கோபித்துக் கொண்டதும் இலட்சுமணன் மிகுந்த வேதனையுடன் இனி என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று தனது சகோதரனைத் தேடிப் புறப்பட்டபோது "விதி என்னைத் தள்ளுகிறது, என்ன செய்வது" என்று கூறுகிறான். யாரெல்லாம் மனச்சோர்வு அடையாமல் முன்னேறுகிறார்களோ அவர்களெல்லாம் விதியை வென்று விடலாம். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் எழுதும் போது ஏதோ ஒரு பிறவியில் கோவலன் வேறொருவனுடைய மரணத்திற்கு காரணமாகியதால் இந்தப் பிறவியில் அதை அனுபவிக்க வேண்டியதைத்தான் இந்த காவியத்தில் பாடுகிறேன் என்று கூறுகிறார்.

ஆத்மா அழியாத வஸ்து. சரீரம்தான் துக்கப்படுகிறது. இதை அனுபவித்துப் போக வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு வழியை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. இதை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதாகவும் இருக்கலாம். அல்லது இறைவனே அவர்களுக்கு மோக்ஷத்தை கொடுப்பதற்காக அளித்த வழியாகவும் இருக்கலாம். ஆகவே விதியை மதியால் வெல்லலாம். மதி-சந்திரன். மனதின் அம்சம். மனது ஒரு நிமிடத்தில் எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியது. மனதை பக்குவப்படுத்துவதன் மூலமாக விதியினுடைய போக்கிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். மதியால் விதியை வென்று விடலாம்.

சம்ரட்சணாவிற்கு வருபவர்களை நல்ல செயல்களை செய்ய வைத்து அவர்களுடைய கர்மாவை சுலபமாகக் கழிக்க வைத்து விடுகிறேன். அவர்களுக்கு கர்மாவை அனுபவிக்கும் தெம்பைக் கொடுத்து மனதைத் திடப்படுத்துகிறேன். சித்தர்களின் சக்தியினால் இந்த வினை எப்படி வந்தது என்று தெரிந்து கொண்டு அதிலிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்று என்னிடம் வருபவர்களுக்கு வழி சொல்லிக் கொடுத்து விடுகிறேன். நூல் உருண்டையில் சிக்கல் விழுந்து விட்டது. அதை எடுக்கவேண்டும் என்றால் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கையில் சுற்றிக் கொண்டே வந்து பேப்பரில் சுற்றிக் கொண்டால் பின்னர் ஊசியில் கோர்த்துத் தைக்கவும் உபயோகிக்கலாம்.

அதேபோல் சித்த புருஷன் உங்களைத் தன்னோடு வைத்துக் கொண்டு, தீயசெயல்களைச் செய்து மாட்டிக் கொண்டுவிடாமல் நல்ல செயல்களைச் செய்ய வைத்து, சிந்திக்கச் செய்து தன்னிடம் வருபவர்களை சிக்கலில் இருந்து விடுவிக்கிறான். சித்தர்கள் இந்த உலகத்தில் தங்களுக்காக வாழ்வதில்லை. சித்தர்கள் நவக்ரஹங்களைக் கட்டி ஆளுகிற வல்லமை உடையவர்கள். தான் பெற்ற இன்பம் இந்த வையகம் அடைய வேண்டும் என்பதற்காகத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.

ஒருவர் செய்திருக்கக் கூடிய நல்ல செயல்களை வைத்து அவருடைய விதி நிர்ணயிக்கப் படுகிறது. நான் கடவுளுக்கு உண்மையாக உழைப்பதனால் என்னுடைய plus point-ஐ வைத்து உன்னுடைய petition sanction ஆகும்.

சித்தர்களால் விதியை மாற்றி அமைக்க முடியும்.

About The Author