புதிய எழுத்தாளர்களுக்கு சுஜாதாவின் 11 யோசனைகள்

(சுஜாதா நினைவுநாள் சிறப்புக் கட்டுரை)

தமிழ் எழுத்துலகின் அரியாசனத்தில் என்றும் வீற்றிருந்த சுஜாதா அவர்களின் ‘தோரணத்து மாவிலைகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து நெகிழ்வுடனும் நன்றியுடனும்.

1.தப்பான பத்திரிகைக்கு எழுதாதீர்கள். ‘துருவனும் குகனும்’ என்று ஞானபூமிக்கு அனுப்ப வேண்டியதை "போலீஸ் செய்திக்கு’ அனுப்பாதீர்கள்.

2.தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். ‘பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி. இருள்’ என்றால் பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.

3.அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருத்தட்டான் குடியிலோ மதராஸ் 78இலோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும்; ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி.

4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு பேர், மூன்று பேர் சொன்ன கதைகளையும், சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.

5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். "உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து, நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான" என்பதை விடத் "துப்பினான்" என்பதே மேல்.

6. ஒரு வார்த்தையை, ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர. உதாரணமாக, பரிணாமம். "அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று, அந்தப் பரிணப்பில்"… இத்தியாதிக்குப் பதிலாக "அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணப்பில்" பெட்டர். அதை விட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.

7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதை மாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர். கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிகை மேல் கேஸ் போட்டுவிட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.

8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராஃப்டைப் பாதியாகக் குறைத்து அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். "அவன் அங்கே போனான்" என்பதை விடப் "போனான்" என்பதில் அவனும் அங்கேயும் இருக்கிறது. அதற்காக "னான்" என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.

9. இரண்டு பக்கமும் நெருக்கமாக எழுதாதீர்கள். நிறைய இடம் விட்டு,பளிச்சென்று நல்ல பேப்பரில் எழுதுங்கள். முதல் பக்கத்தை மட்டும் மூன்று நான்கு பிரதிகள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வந்தால் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்பச் சவுகரியம்.

10. பத்திரிக்கை ஆபீசுக்கு நேராகப் போய்க் கதை கொடுக்காதீர்கள். அங்கே கிடக்கும் கதைக் குப்பைகளைப் பார்த்தால் ரொம்பச் சோர்வாக இருக்கும்.

11. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது எல்லாரிடமும் – ஆம், ஒரு கதை – நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்!

(தமிழுக்கு இணையப் பரிச்சயம் இருந்திராத காலத்தில் அமரர் சுஜாதா அவர்களால் வார்க்கப்பட்ட கட்டுரை. இன்று எழுத்துக்கு எவ்வளவோ களங்கள் வந்துவிட்ட போதிலும், எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வகையில் உள்ளடக்கம் உள்ளதால் வெளியிடப்பட்டுள்ளது)

About The Author