பேரழகி கிளியோபாட்ரா – பகுதி-8

அந்தி சாயும் நேரம். அந்த பாலைவன பிரதேசத்து சூரியன் மஞ்சள் தேய்த்துக் குளித்த ஜொலிப்பில், ஒருவித மயக்கத்தில் இருந்தான்

அலெக்சாண்டிரியாவில் உள்ள தனது அரண்மனைக்குள் கிளியோபாட்ராவும் ஏறக்குறைய அதே நிலையில்தான் இருந்தாள். ஆம்… அவளும் வாசனைத் திரவியங்கள் கலந்த மிகவும் சுத்தமான தண்ணீர் நிறைந்த தொட்டியில் நீராடத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

அரண்மனை சேவைப் பெண்கள் சிலர் அவளை அழைத்து வந்தனர். குளியல் அறை இருந்த பகுதிக்குள் வந்ததும், சேவைப் பெண்களை, தான் கூப்பிடும்போது மட்டும் வந்தால்போதும் என்று கூறி அனுப்பி வைத்தாள் கிளியோபாட்ரா. அவர்கள் கதவை வெளிப்புறமாகத் தாழ்ப்பாள் இட்டனர்.

குளியல் தொட்டி அருகில் வந்து நின்றவள், தனது ஆடையை ஒவ்வொன்றாக விலக்கத் தொடங்கினாள். அதற்கு முன்னதாக, சற்றே திரும்பினாள். அங்கே, குளியல் தொட்டியை ஒட்டி ஒரு பாத்திரத்தில், கழுதைப் பால் வைக்கப்பட்டு இருந்தது

பேரரசியாக இருந்தபோது முழுக்க முழுக்க கழுதைப் பாலிலேயே குளித்துப் பழக்கப்பட்டவளுக்கு, இப்போது ஒரு பாத்திரத்தில் மட்டும் இப்படி பாலை வைத்திருந்தனர். இருந்தாலும், சமாளித்துக்கொண்டாள்.

குளியல் தொட்டிக்குள் அமர்ந்து கொண்டவள் நிதானமாகக் குளிக்க ஆரம்பித்தாள். சுமார் 10 நிமிடங்கள் மெதுவாக நகர்ந்து முடிந்தன.
நீராடி முடித்தவள், அந்த பெரிய தொட்டியில் இருந்து சற்றே மேலே எழுந்து அமர்ந்தாள். தொடர்ந்து பாத்திரத்தில் இருந்த பாலை ஒரு கோப்பையில் எடுத்துத் தன் மீது ஊற்றிக் குளித்தாள்.

குளித்தது போதும் என்று நினைத்தவள, தனது இரு கைகளையும் தட்டினாள். அவளது சேவைப் பெண்கள் இருவர், குளியல் அறையின் முகப்பு வாசல் முன்பு வந்து நின்றனர்.

"உள்ளே வரலாமா மகாராணி?" – அவர்களது குரல் வந்த திசையை நோக்கித் திரும்பியவள், "ஆம்… வாருங்கள்" என்றாள்.

அவர்களில் ஒருத்தியின் கையில் இரவு நேரத்தில் மகாராணிகள் அணியக் கூடிய மிகவும் விலை உயர்ந்த ஆடை இருந்தது. இன்னொருத்தி, ஒரு தட்டில் வாசனைத் திரவியங்களைக் கொண்டு வந்தாள்.

இருவரும் கிளியோபாட்ரா அருகில் வந்தது, அவற்றை ஓரிடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் அவளை நோக்கினர்.

"மகாராணி! நாங்கள் திரும்பிச் செல்ல உத்தரவு தர வேண்டும்!"

"தாராளமாகச் செல்லுங்கள்!"

அடுத்த ஓரிரு நிமிடங்களில் அந்த இடத்தைவிட்டு அகன்று இருந்தனர் சேவைப் பெண்கள் இருவரும். குளியல் அறையின் முன்புறக் கதவும் மூடப்பட்டு இருந்தது.

உடலை ஒட்டி இழையோடும் மெல்லிய விலை உயர்ந்த ஒற்றை இரவு ஆடை அவளது அழகைப் பாதுகாக்கும் பொருட்டு மூடியிருந்தது. வாசனைத் திரவியங்களும் அவளது மேனியில் மணக்க ஆரம்பிக்க இருந்தன.

குளியல் அறையில் இருந்து வெளிப்பட்டாள் கிளியோபாட்ரா.
அவளது பொன்னான பாதங்கள் வெளிப்பட்டதும் பணிப்பெண்கள் அவளை நோக்கி மலர்களைத் தூவ ஆரம்பித்தனர். படுக்கையறையை நோக்கி அவள் செல்ல அவளுக்கு முன்பாக மலர்களை அவளது பாதங்களுக்கு காணிக்கை ஆக்கியபடியே சென்றனர் அந்த பெண்கள்.

படுக்கையறையை அடைந்ததும் அந்த சேவைப் பெண்கள் நின்று கொண்டனர். 21 வயதே ஆன கிளியோபாட்ரா மட்டும் அறைக்குள் நுழைந்தாள்.

(இன்னும் வருவாள்…)

About The Author

3 Comments

  1. maleek

    மெகா சீரியல் மாதிரி, அறைக்குள் நுழையும்போது நிறுத்திட்டிங்களே சார்!

  2. நெல்லை விவேகநந்தா

    கிளியோபாட்ரா குளிப்பதை இன்னும் கொஞ்சம் அழகாகவே வர்ணித்து இருந்தேன். நம் ரிஷி அதில் கொஞ்சம் கை வைத்தாலும் அழகாவே செதுக்கி இருக்கிறார். அறைக்குள் நடந்த விஷயம் கொஞ்சம் கிளுகிளுப்பானது என்பதால் கொஞ்சம் காத்திருங்களேன்….
    – நெல்லை விவேகநந்தா

  3. உமா ஆனந்தி

    கிளியோபாட்ரா கழுதைப் பாலில் குளித்தாள் என்று படித்து இருக்கிறேன். இன்றைய தொடரை வாசித்தபோது அவள் குளித்த சம்பவம் கண் முன் வந்து சென்றது.

Comments are closed.