பேரழகி கிளியோபாட்ரா – பகுதி -4

18 வயதிலேயே நாட்டின் பேரரசியாக பதவியேற்றாலும் திறம்பட செயல்பட்டாள் கிளியோபாட்ரா. அவளுக்கு ஆலோசனை சொல்ல திறமை வாய்ந்த அமைச்சர்கள் பலரும் இருந்தனர். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அவர்களை கலந்து ஆலோசித்த பின்னரே எடுத்தாள். இதனால், கிளியோபாட்ராவின் எகிப்திய பேரரசில் இந்த அமைச்சர்களும் தனி செல்வாக்குடன் திகழ்ந்தனர்.

நாட்டின் அரசனும், கிளியோபாட்ராவின் கணவனும் உடன் பிறந்த தம்பியுமான 13-ம் டாலமிக்கு 12 வயதே ஆகியிருந்ததால் அவனது நடவடிக்கைகளில் சிறுபிள்ளைத்தனங்களே தொடர்ந்தன.

திறம்பட ஆட்சிபுரிந்த கிளியோபாட்ரா எதிரிகளை அடக்குவதிலும் கைதேர்ந்தவளாக இருந்தாள். கி.மு.க்களில் எகிப்து பேரரசானது மேலை எகிப்து, கீழை எகிப்து என்று இரு பகுதிகளாக இருந்தது. மேலை எகிப்தில் வாழ்ந்த பூர்வீக குடிகள் அவ்வபோது ஆட்சியாளர்களை எதிர்த்து கிளிர்ச்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களது போராட்டத்தை அடக்குவது சிரமத்திற்குரிய வேலையாக இருந்தது.

பேரரசியாக பதவியேற்ற கிளியோபாட்ரா, அந்தப் பிரச்சினைக்கு முழு தீர்வு காண வேண்டும் என்று எண்ணினாள். தனது அமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்தாள். பூர்வீகக் குடிகளை வலுக்கட்டாயமாக அடக்குவதுதான் நல்லது என்று ஆலோசனை சொன்னார்கள் அமைச்சர்கள். ஆனால், கிளியோபாட்ராவுக்கு அதில் உடன்பாடு இல்லை.

சொந்த மண்ணில் பிறந்தவர்கள் கிளர்ச்சி செய்கிறார்கள் என்றால், அதில் நியாயமான காரணம் இருக்க வேண்டும் என்று கருதினாள் கிளியோபாட்ரா. அதுபற்றி, தனது அமைச்சர்களிடம் பேசுவதைவிட, நேரடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவதே சிறந்தது என்பது அவளது முடிவாக இருந்தது.

அடுத்த சில நாட்களிலேயே மேலை எகிப்துக்கு பயணமானாள் கிளியோபாட்ரா. பல மொழி திறன் பெற்றிருந்த அவளுக்கு மேலை எகிப்திய பூர்வீகக் குடிகள் பேசும் மொழியும் தெரிந்திருந்தது. அவர்களிடம் சில மணி நேரம் பேசினாள்.
இந்தப் பேச்சில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. கிளர்ச்சி செய்வதைக் கைவிடுவதாகக் கூறிய பூர்வீகக் குடிகள், சில கோரிக்கைகளை கிளியோபாட்ரா முன் வைத்தனர். அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாள் கிளியோபாட்ரா. இதன் மூலம் மேலை எகிப்திய பூர்வீகக் குடிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே இருந்து வந்த நீண்ட நாளைய பிரச்சினை முடிவுக்கு வந்தது. பூர்வீகக் குடிகள் கிளியோபாட்ராவை தங்களது பேரரசியாக ஏற்றுக்கொண்டனர்.

எகிப்தின் புராதன நகரங்களான தீப்ஸ், ஹெர்மன்திஸ் ஆகிய நகரங்களில் வசித்து வந்த புரோகிதர்களும் சில நேரங்களில் எகிப்து பேரரசுக்குத் தலைவலியாக இருந்து வந்தனர். காரணம், அவர்கள் அந்த பகுதியில் அதிகார பலம் பெற்றுத் திகழ்ந்ததுதான். இவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை ஏற்படுத்தினாள் கிளியோபாட்ரா.

இப்படி, தனது பேரரசுக்குள் எதிரிகள் யாரும் இல்லாத நிலையைக் கொண்டு வந்தாள் அவள். முன்பு, மாவீரன் அலெக்ஸாண்டர் எகிப்தைக் கைப்பற்றியபோது தன்னை, மாசிடோனிய ஆதி தெய்வமான அம்மோனின் மகன் என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். அவரது தாக்கம் கிளியோபாட்ராவிடமும் எதிரொலித்தது. இவள் தன்னை, எகிப்தின் ஆதி தெய்வமான ரேயின் மகள் என்று அறிவித்துக் கொண்டாள்.

அந்தக் காலத்தில் ஆட்சியாளர்கள் தெய்வங்களின் அம்சமாகவும், அவர்களின் பிரதிநிதிகளாகவும் பார்க்கப்பட்டதால், கிளியோபாட்ராவின் அறிவிப்பு ஏகபோகமாக ஏற்கப்பட்டது. ஹெர்மன்திஸ் நகரில் உள்ள டென்டிரா என்ற இடத்தில் ஒரு கோவிலையும் ஏற்படுத்தினாள் கிளியோபாட்ரா. அந்த கோவிலில் ஹதர் என்ற தெய்வத்தின் தோற்றத்தில் தனது உருவச் சிலையையும் வைக்க உத்தரவிட்டாள். கூடிய விரைவில், அவளது உருவச் சிலையும் அங்கு வைக்கப்பட்டு, அவள் ஒரு தெய்வாகவே மக்களால் வழிபடப்பட்டாள்.

ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவளுக்கு பிரச்சினையே ஆரம்பித்தது. கணவனும், அரசனுமான டாலமியிடம் இருந்தே பிரச்சினை வந்தது.

அப்போது 13-ம் டாலமிக்கு 15 வயதே ஆகியிருந்ததால், அதிகாரம் படைத்த சில அமைச்சர்கள் அவனை தங்கள் கைப்பாவை ஆக்கிக்கொண்டனர். கிளியோபாட்ராவை விரட்டியடித்தால், நாடு முழுவதும் உனக்கே உனக்காகிவிடும் என்று ஆசை வார்த்தை காட்டி தூண்டில் போட்டனர் அவர்கள். சிறுவன் டாலமியும் அதை நம்பி, கிளியோபாட்ராவை துரத்தியடிக்க சம்மதித்தான்.

அந்தச் சமயத்தில், ரோமானிய கவர்னரின் தூதுவர்கள் பார்த்தியர்களுக்கு எதிராக உதவி கேட்டு கிளியோபாட்ராவைத் தேடி வந்தனர். அவர்களை கிளியோபாட்ராவின் ஆதரவாளர்கள் கொன்றுவிட்டனர். இந்த சமயத்தில் டாலமியைத் திசை திருப்பிய தியோடோடஸ், பொதினஸ் (இவன் ஓர் அலி), அச்சிலெஸ் என்ற படைத்தலைவன் ஆகியோரின் சதித் திட்டத்தால் திடீர் கிளர்ச்சி ஏற்பட்டது.

அடுத்த நிமிடமே நாட்டு மக்கள் எதிர்பார்க்காத ஓர் உத்தரவை வெளியிட்டான் அரசன் 13-ம் டாலமி. கிளியோபாட்ராவின் பதவி பறிக்கப்பட்டது என்பதுதான் அந்த உத்தரவு. கூடவே, கிளர்ச்சியும் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் அட்டகாசத்தில் இறங்கினார்கள். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

தனக்கு எதிராக ஏவிவிடப்பட்ட இந்த அடக்குமுறையால், அதுவரை பயத்தை அறியாத கிளியோபாட்ரா முதன் முதலாக பயந்தாள். இந்த நேரத்தில் அரண்மனைக்குச் சென்றால் தன்னை யார் வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்று அஞ்சிய அவள், அடைக்கலம் தேடி பயணித்தாள். அவளது தங்கை நான்காம் அர்சினியும், அவளுக்கு நெருக்கமான சிலருமே அப்போது அவளுடன் இருந்தனர்.

எகிப்தின் புராதன தலைநகராகத் திகழ்ந்த தீப்ஸ் சென்ற கிளியோபாட்ரா, அங்கு அடைக்கலம் புகுந்தாள். அடுத்த நடவடிக்கைக்கு அவரச அவசரமாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்தாள். எலூசியம் என்ற இடத்திற்கு கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்த அரேபிய பூர்வீகக் குடிகள் அவளுக்கு உதவ முன்வந்தனர். அவர்களைக் கொண்டு ஒரு படையைத் திரட்டினாள் கிளியோபாட்ரா. ஆனால், அந்த படை அவளுக்கு போதுமானதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், கிளியோபாட்ரா தீப்ஸில் இருப்பதாகக் கேள்விப்பட்ட டாலமி, அவளைக் கொலை செய்ய ஒரு படையை அங்கு அனுப்பினான். பயந்துபோன கிளியோபாட்ரா தனது தங்கையுடன் சிரியா நாட்டிற்குத் தப்பிச் சென்றாள்.

(இன்னும் வருவாள்…)

About The Author

1 Comment

  1. Hanan

    அழகிய பயணுள்ள கருத்துக்களை வெளியிடுவமைக்கு நன்றி………………

Comments are closed.