மனசாட்சி

அவனைக் கெடுத்தது நான்தான்… !

அந்த அறுவரில் யார் என்று அடையாளம் காண்பிக்கச் சொல்லி போலீஸ் என்னைக் கேட்டபோது எனக்குள் இப்படித்தான் தோன்றியது.

அந்த ‘அவனை ‘ அவன் மனதைக் களங்கப்படுத்திக் கெடுத்தவன் நான்தான்.

ஆம்! அவன் அதில் நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ஆனால் எனக்கு அவனை நன்றாய்த் தெரிந்தது.

அன்று நடந்த திருட்டில் அந்த முட்டுச் சந்தில், இருட்டில் அவன் முகம் இல்லையே. கேள்வி பிறந்தது என்னுள்!

சாணைக் கத்தியிலிருந்து பறந்து தெறிக்கும் தீப்பொறிகளைப் போல என் நினைவுப்பொறி பற்றிக் கொண்டது.

உண்மைதான்! அதில் அவன் இல்லை! நிச்சயமாக இல்லை!! பின் இங்கே எப்படி வந்தான்?

மனசு நடுங்கியது எனக்கு… !

"இந்த ஏரியாவுல பிக்பாக்கெட், வழிப்பறி, சங்கிலி அறுப்பு, சில்லரைத் திருட்டு, எல்லாம் இவங்கதான் சார்".

அன்னைக்கு உங்களக் கத்தியைக்காட்டி, வழிப்பறி பண்ணுனவங்ஞ யாருன்னு அடையாளம் காண்பீச்சீங்கன்னா போதும்… "மாத்துக்" குடுத்துறலாம். அப்பத்தான் ஒத்துக்குவாங்க..

அந்த ‘ஞ’ பாஷையைக் கேட்டவாறே அமைதியாய் நின்றேன் நான். அடையாளம் செல்லி என்ன ஆகப்போகிறது? கண் முன்னால் ஒருவன் உதைபடுவதைப் பார்க்க வேண்டுமா? மனிதனை மனிதன் அடித்துக் கொடுமைப்படுத்தும் காட்சியை என்னால் காண முடியாது.

அடி வாங்குபவனின் வதையைக் காணச் சகியாது மனம்

பின் எதற்காகப் புகார் கொடுக்க வேண்டும்?

போனால் போகட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதானே?

"ஏண்டா… ஒரு பவுன் சங்கிலி, ஐநூறு ரூபா பணம்னா அது சும்மாவா இருக்கு உனக்கு? கம்ப்ளெய்ண்ட் கொடுத்து வைப்போம்… கிடைச்சா வேண்டாம்னா இருக்கு.

நண்பனின் வற்புறுத்தலில் வாயடைத்துப்போனது.

இன்று எனது இந்த வருகை அவனுக்குத் தெரியாது. எதற்காக அவனை வேறு தொடர்ந்து கஷ்டப்படுத்த வேண்டும்?

"மிஸ்டர் கணேசன் இருக்காரா? அவரை நாளைக்கு காலைல அரசமரம் ஸ்டேஷனுக்கு வந்துட்டுப் போகச் சொல்லுங்க…"

என் மனையாள் கேட்டு வைத்த தொலைபேசி அழைப்புக்கு இணங்கி இதோ வந்திருக்கிறேன் நான்.

பாதி இருட்டும், மிக மங்கிய வெளிச்சமுமாய் இருந்த அந்த மூத்திரச் சந்தில் கையில் கத்தியைக் காட்டி அழுத்திய வேகத்தில் அந்தப் படபடப்பில் அந்த நடுக்கத்தில் எந்த முகத்தை மனதில் நிறுத்த முடியும்?

வரிசையாக ஒவ்வொருவராய் பார்த்தேன் நான்.

‘என்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறாயா? தயவு செய்து அப்படிச் செய்துவிடாதே.’

"உன்னைப் போல் என்னையும் அக்கறையாய் என் பெற்றோர் படிக்க வைத்திருந்தால், நான் இப்படி வந்திருப்பேனா?"

‘எனக்கும் உன்னைப் போல் காலத்தில் ஒரு வேலை கிடைத்திருந்தால் என் கதி இப்படியாகியிருக்குமா? ‘

‘நான் இப்படி ஆகிப்போனது என் தவறா? என் தாய் தந்தையாரின் தவறா? அல்லது இந்தச் சமுதாயத்தின் தவறா? ‘

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய்க் கேட்பது போன்ற உணர்வு எனக்குள்.

எல்லோர் முகத்திலும் இறுக்கம், பயம், விரக்தி, சோகம், சோர்வு… இன்னும் என்னென்னவோ

யாருமில்லை… ! அன்று என்னிடம் திருடியவர்கள் எவருமில்லை இங்கே… !! எந்த முகமாவது, எந்தப் பார்வையாவது மனதில் நின்றிருந்தால்தானே? மறுதலித்து விட்டு வெளியே வந்தவனின் சிந்தனை தடைபட்டது. அது யார்? தெரிந்த முகம் போல்?

அந்த ‘இவன்’ அச்சிறுவன் எப்படி வந்தான் இங்கே? என்ன தவறு செய்தான்? ஏனிப்பாடி ஆனான்?

கொஞ்ச நாளாய் ‘அங்கே’ காணவில்லையே? அதற்கு இதுதான் காரணமோ?

"சார்… டோக்கன் வாங்குங்க… ஐம்பது பைசா சில்லரையாகக் கொடுங்க சார்… டோக் கன்… டோக்கன்… வாங்கிட்டு உள்ளே போங்க சார்.."

பறந்து, பறந்து, சுறுசுறுப்பாய் சீட்டைக் கிழித்துக்கொண்டிருந்தான் அவன்.

அது உழவர் சந்தை வாசல்.

ஒரு ஆள் அவனிடமிருந்து தப்பமுடியாது. "அட திரும்பி வந்துதர்றேன் தம்பி… ஓடியா போறேன்… போகைல தர்றேன்… சில்லரை இல்லை…"

"எவ்வளவுக்கு சார் வேணும்? கொடுங்க… நான் பாக்கி தர்றேன்… நீங்க போகுறத ஞாபகம் வச்சிக்கிட்டு நான் காத்துக்கிட்டிருக்க முடியாது… நான் வர்றவங்களைப் பாப்பனா? இல்லை உங்களைக் கவனிப்பனா?"

பத்து ரூபாயோ, இருபது ரூபாயோ ஐம்பது பைசாவை அவனிடம் கழிக்காமல் உள்ளே நுழைய முடியாது எவரும்!

சரட், சரட் என்று காகித டோக்கன்கள் கிழிபடும் அங்கே… கையில் திணித்து அனுப்பிவிடுவான் உள்ளே.

அப்பப்பா… ! எவ்வளவு சுறுசுறுப்பு! எத்தனை சின்சியாரிட்டி…!

மலைத்திருக்கிறேன் நான். நானே மாட்டிக்கொண்டேன், ஒருநாள்.”

"எப்படி சார்… டோக்கன் வாங்காம உள்ளே போனீங்க? நான்தான் இருக்கேன்ல… கூப்பிட வேண்டியதுதானே?"

"சரிடா தம்பி… உன்னைக் கவனிக்கல"

"தினமும் வர்றீங்க… இங்கதான் இருக்கேன்… இந்த மூலை, இல்லாட்டி அந்த மூலை… யாருக்காவது டோக்கன் கொடுத்திட்டிருந்திருப்பேன்… கத்தினா ஓடியாரேன்?"

"சரிதாண்டா பெரிய மனுஷா இந்தா பிடி ஒரு ரூபா… ஆளை விடு…"

காசைத் திணித்துவிட்டு, காய்கறிப் பையை மாட்டி வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

"இந்தாங்க சார்… பாக்கி ஐம்பது காசு"

"வேணாம்டா… நீயே வச்சிக்க…"

"ஊஹூம்… அதெல்லாம் கூடாது சார்…." கூறியவாறே பாக்கி ஐம்பது காசைக் காய்கறிப் பைக்குள் சடக்கென்று போட்டான். அதே வேகத்தில் சரக்கென்று கிழித்தான் ஒரு டோக்கனை.

"பிடிங்க சார்…" கையில் திணிக்க வந்தான்.

"எதுக்கு? அத வேறே யாருக்காவது கொடேன்… ஐம்பது பைசா உனக்கு மிச்சம்!"

தலையை மறுதலித்து ஆட்டி, அவன் என்னையே கூர்மையாய்ப் பார்த்தான்.

எனக்கே சற்று சங்கடமாய்த்தான் இருந்தது.

"என்ன சார் இது? படிச்சவங்க நீங்க. நீங்கெல்லாம் இப்படிச் சொல்லலாமா? நல்லதைச் சொல்லிக் கொடுக்காட்டாலும் கெட்டதைச் சொல்லிக் கொடுக்காம இருங்க சார்…" கூறியவாறே அந்தக் காகித டோக்கனைப் பரட் பரட்டென்று சுக்குச் சுக்காய்க் கிழித்து கீழே வீசினான்.

நான் அவனையே விழி நீக்காமல் பார்த்தேன்

அவன் கையிலிருந்த சீட்டு கிழிபட்டபோது, என் தவறான, அலட்சியமான, விட்டேற்றியான அந்தக் கெட்ட எண்ணம் நார் நாராய்க் கிழிபட்டது அங்கே.

அன்று அவனின் களங்கமற்ற நேர்மையான மனதில் வினையை விதைத்தவன் நான்தான். காசை வாங்கிக்கொண்டு டோக்கன் கிழிக்காமல், காசை நீயே மூட்டை அடிக்கலாம் என்ற தவறை, தப்பில்லை என்பதுபோல் அவனுக்குச் சுட்டிகாட்டியது நான்தான்?

நல்ல மனதில் கள்ளம் புகுத்தியவன் நான்! விதைக்கு பதிலாக வினையை விதைத்தவன் சிறு தவறுதான் என்றாலும் அதுதானே பெரிய தவறுக்கு வழிவகுக்கும்?

இதோ – இன்று  ‘உள்ளே’ அவன்! இது எப்படி, ஏன் நடந்தது? நடந்திருக்கிறதே!

அவனைக் கெடுத்தது நான்தான்! ஆம்! அவன் அங்கே நிற்கக் காரணமான வழிகளுக்குள், விபரீத நிகழ்வுகளுக்குள் எனது முதல் வழிகாட்டுதலும் ஒன்று! அதை மறுப்பதற்கில்லை.

அந்த மனதைக் களங்கப்படுத்தியவர்களுள் நானும் ஒருவன்… அது சத்தியம்.. என்னால் இப்படித்தான் யோசிக்க முடிகிறது. அதுதானே நிஜம்!

மனசாட்சி குத்திக்கிழிக்க வேதனையோடு வெளியேறுகிறேன் நான்!

(நினைவுத் தடங்கள் – மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author