மன்னரின் யானைக்கு வந்த ஆசை

துருக்கி நாட்டு மன்னரின் அரசவையின் முக்கிய பிரதானிகளுள் ஒருவராக முல்லா வீற்றிருந்த சமயம் அது.

அப்பொழுது, மன்னரின் யானையொன்று அரண்மனையை விட்டு வெளியேறிப் பக்கத்து நகரங்களுக்குச் சென்று பொருட்களை நாசம் செய்தும், பயிர்களை அழித்தும், மக்களைத் தூக்கிப் போட்டுப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது.

மக்கள் அரண்மனைக்கு சென்று இது பற்றி மன்னரிடம் முறையிட்டபோது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை. தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாக அவர்களைக் கடிந்துக் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை.

அவர்கள் ஒருநாள் முல்லாவைச் சந்தித்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி மன்னரிடம் எடுத்துக் கூறி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

முல்லா சிறிது நேரம் யோசித்தார். பிறகு தம்மிடம் வந்தவர்களை நோக்கி, "அடுத்த முறை யானை உங்கள் ஊருக்கு வந்து அட்டூழியம் செய்யும்பொழுது நீங்கள் எல்லாரும் சேர்ந்து அதைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்" என்றார்.
ஊர் மக்கள், "ஐயய்யோ! மன்னரின் யானையைக் கட்டிப் போடுவதா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பாரே!" என்று அச்சத்துடன் கூறினர்.

அதற்கு முல்லா, "பயப்படாதீர்கள். நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது வந்து கேட்டால், நான்தான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள். பிறகு, நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

ஒருவாறு தைரியமடைந்த மக்கள், அடுத்த தடவை யானை வந்தபோது, ஒன்று சேர்ந்து மிகவும் சிரமப்பட்டு அதைப் பிடித்து, ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர். விசாரித்த மன்னர், முல்லாதான் இதற்குக் காரணம் என்று அறிந்ததும், முல்லாவுக்கு ஆள் அனுப்பித் தம்மை வந்து சந்திக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். முல்லாவும் அரண்மனைக்குச் சென்று மன்னரை வணங்கினார்.

முல்லாவைப் பார்த்ததும் மன்னருக்குக் கோபத்தால் மீசை துடித்தது. "என்ன முல்லா! என்னுடைய யானையைக் கட்டிப் போடச் சொன்னீர்களாமே? உமக்கு அவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?" என்று கோபத்துடன் கேட்டார்.

மன்னரை நோக்கி முல்லா பணிவுடன், "மன்னர் பெருமானே! தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. மன்னருடைய யானையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது குடிமக்களாகிய எங்கள் கடமையல்லவா? அதனால் தங்கள் யானைக்காக ஒரு பெண் யானையைத் தேடிக் கொண்டிருக்கிறாம். பெண் யானை கிடைப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு ஏதாவது தாறுமாறான நடவடிக்கையில் ஈடுபட்டு விடக்கூடாதே என்பதற்காகத்தான் அதைக் கட்டி வைத்திருக்கிறாம்" என்றார்.

மன்னர், "என்ன? யானையாவது தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது, யாரிடம் விளையாடுகிறீர்கள்!" என்று கோபத்துடன் கேட்டார்.

"மன்னர் பெருமானே! தாங்களே வேண்டுமானால் சிரமம் கருதாது ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்து விசாரித்துப் பாருங்கள். நான் ஏதாவது பொய் சொல்லியிருந்தால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார் முல்லா பணிவுடன்.

மன்னர் தம்முடைய பரிவாரங்களுடன் முல்லாவையும் அழைத்துக் கொண்டு அவர் சொன்ன பகுதிக்குச் சென்றார். வழியெங்கும் விளைநிலங்களுக்கும் பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தையும் அழிவையும் கண்டு அதிர்ச்சியுற்றார். அதற்குத் தனது யானைதான் காரணம் என்பதையும் உணர்ந்தார். தன்னை அந்தப் பகுதிகளுக்கு வரச் செய்வதற்காக முல்லா கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்டார்.

முல்லாவுக்குத் தன்னுடைய நன்றியை தெரிவித்தார். உடனே தனது அதிகாரிகளை அழைத்து, யானையினால் சேதத்துக்கு உள்ளானவர்களுக்குத் தாராளமான இழப்பீடு வழங்குமாறும் யானைக்குத் தகுந்த சிகிச்சை அளித்து அரண்மனையில் கட்டிப் போடுமாறும் கட்டளையிட்டார்.

ஊர் மக்கள் முல்லாவுக்கு நன்றி சொல்லி அவரை வாழ்த்தினார்கள்.

நன்றி: துருக்கி நாடோடிக் கதைகள்.

About The Author