முதுமை (1)

விடுபட்ட நரம்புகளில்
விட்டுவிட்டும்
பொடிபட்ட எலும்புகளில்
புதைபட்டும்

இடிபட்ட மத்தளத்தின்
துடியதிர்வில்
விடைகேட்டு நடுக்கத்தில்
எனது உயிர்

கிழிபட்ட நெஞ்சத்தின்
சந்துகளில்
கீறலிட்ட இசைத்தட்டின்
பாட்டாக

இளமொட்டுக் காலத்து
நினைவலைகள்
இடைவிடாத லயத்தோடு
பொழுதெங்கும்

காற்றடித்தச் சுடுமணலின்
வரிக்கவியாய்
கணக்கற்று மேனியெங்கும்
சுருக்கங்கள்

சுருக்கத்தின் இடுக்குகளில்
சரிந்துவிழும்
சுவையான அனுபவத்தின்
பழங்கதைகள்

நான்கூட மழலைதான்
அண்டத்தில்
சூரியனின் வயதென்ன
கொஞ்சமோ

ஏனெனக்கு பூமித்தாய்
இளையவளோ
என்சிரிப்பு குழந்தைக்கு
ஒவ்வாதோ

ஊன்றுகின்ற கம்பெனக்கு
இன்னொருகை
மூன்றாவது காலென்பது
அறியாப்பொய்

கையைத்தான் நானூன்றி
நடக்கின்றேன்
கைக்கிடையே கம்பொன்றை
வைக்கின்றேன்

முதுமைநிலை என்பதுவும்
சிலந்திவலை
வலையோடு சிலந்திகூட
நானேதான்

சாவென்னும் காற்றுவந்து
வீசும்வரை
தினமோடித் திரிகின்றேன்
எனக்குள்ளே

விழிப்புக்கும் நித்திரைக்கும்
இடையிலொரு
மங்கலான மோனநிலை
எனக்குள்ளே

(தொடரும்)

‘பச்சை மிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here 

About The Author