மூல நட்சத்திரத்தின் கோயில்

மிருகண்டு முனிவர் – மருத்வதி தம்பதியினர் மழலைச்செல்வம் இல்லாமல் மிகவும் வருந்தினர். சிவபெருமானின் பக்தராதலால் ஈசனை நோக்கிக் கடும் தவம் செய்தார் மிருகண்டு மஹரிஷி. ஈசனும் அவர் தவத்தில் மனமகிழ்ந்து அவர் முன் தோன்றி "பதினாறு வயது வரையே வாழக்கூடிய நல்ல மகன் வேண்டுமா? ஆயுள் நூறு கொண்ட கெட்ட பிள்ளை வேண்டுமா?" என்று வினவ, சிறிது காலமே வாழ்வதாக இருந்தாலும் நல்ல பிள்ளையாக வாழ்ந்தால் போதும் என்றார் மகரிஷி. அதற்கிணங்க அவர் வீட்டில் ஒரு சத்புத்திரன் பிறந்தான்! அவர்தான் ஸ்ரீமார்க்கண்டேயன்!

குழந்தைப் பருவத்திலேயே வேதங்களைத் தாமாய் அறிந்த மார்க்கண்டேயன், பிஞ்சுப் பருவத்திலேயே சிவபூஜையில் இறங்கினான். ஒவ்வொரு வருடம் ஆகும்போதும் அவனது பெற்றோர்கள் முகம் கலங்க, அதைப் பற்றிக் கேட்டுத் தன் ஆயுள் பதினாறு வயது வரையே என்று தெரிந்து கொண்டான். என்ன இருந்தாலும், அந்தப் பரமேசன் தன்னைக் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையுடன் எல்லா சிவஸ்தலங்களுக்கும் போய் சிவனைப் பூஜிக்க ஆரம்பித்தான். அப்படி, அந்த சிவப்பிஞ்சு கால் பதித்த ஸ்தலங்களில் ஒன்றுதான் மாந்துறை!

திருச்சி லால்குடி செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ தூரத்தில் இந்தக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அருள்பாலிக்கும் ஈசன் ஸ்ரீஆம்ரவனேஸ்வரர். சம்ஸ்கிருதத்தில், ‘ஆம்ரம்’ என்றால் ‘மாமரம்’ என்று பொருள். மாமரங்கள் சூழ்ந்த பகுதியானதால் இங்கு ‘ஆம்ரவனேஸ்வரர்’ என்ற பெயரில் ஈசன் இருக்கிறார்.

மார்க்கண்டேயன், மரண பயம் நீங்கப் பூஜித்த தலமாகையால், இங்கு வந்து ஈசனை வணங்க நமக்கும் மரணபயம் நீங்கும். இதேபோல்தான் திருக்கடையூர் அபிராமி ஸ்தலமும். இந்திரன் தன் சாபத்திற்குப் பரிகாரம் தேடி இங்கு வந்து தவம் இருக்க, அவன் சாபம் நீங்கியது. சூரிய பகவானும் இந்த ஆம்ரவனேஸ்வரரைப் பூஜித்திருக்கிறார். இங்கு அருள்புரியும் அம்பாளின் பெயர் ஸ்ரீபாலாம்பிகை. ஸ்ரீஆம்ரவனேஸ்வரரையும் ஸ்ரீபாலாம்பிகையையும் நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கும் எனும் நம்பிக்கையும் பக்தர்களிடம் நிலவி வருகிறது. இங்கு அன்னைக்குப் பால் அபிஷேகம் மிகவும் விசேஷம்! இந்த அம்பாளுக்குப் பாலபிஷேகம் செய்ய மழலைச்செல்வம் உண்டாகும்.

கோயிலினுள் நுழைகிறோம்! அழகிய கோபுரம்! ஆலயம் கிழக்கைப் பார்த்து இருக்கிறது. உள்ளே நுழைந்தவுடனேயே நந்திபகவான் அமர்ந்திருக்கிறார். ஒரு நந்தியில்லை, இரண்டு நந்திகள்! இப்படி இரண்டு நந்திகள் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. வேறு எந்தக் கோயிலிலும் சிவன் முன் இரண்டு நந்திகள் இல்லை. கிழக்கு நோக்கியபடி ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் அருள்புரிய, அம்பாள் ஸ்ரீ பாலாம்பிகை தெற்கு பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள்.

புராணத்தில், ஸ்ரீபிரும்மா சிவபெருமானின் முடியைக் கண்டதாகப் பொய் கூறியதற்கு சிவன் பிரும்மாவை சபித்தார். பின், அவரே இந்தச் சாபம் நீங்கப் பரிகாரமும் சொன்னார். அதன்படி, மாமரங்கள் சூழ்ந்த இந்தப் பகுதியில் வந்து தவமிருந்தார் பிரும்மா. இங்கு இருக்கும் லிங்கத்தை அபிஷேகம் செய்ய அருகில் நீர்நிலை இல்லை. அதனால் பிரும்மா சரஸ்வதி தேவியை நினைக்க, அவள் இங்கே நீர் பெருகச் செய்தாள். அதில் அவர் நீராடி, லிங்கத்துக்கும் அபிஷேகமும் பூஜைகளும் செய்தார். இதில் மகிழ்ந்த சிவன், பார்வதியுடன் காட்சி தந்து சாபவிமோசனம் அருளினார்.

அப்படி சரஸ்வதி தேவியின் அருளால் உருவான இந்தத் தீர்த்தத்தில் இறங்கித் தலையில் தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டு, சிவனுக்கு வில்வ இலைகளினால் அர்ச்சனை செய்ய, சகல தோஷங்களும் விலகிவிடும். மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திருமண பாக்கியம் மிகவும் தாமதமாக வரும். இவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து உள்ளமுருகப் பிரார்த்தித்தால் திருமண பாக்கியம் கிட்டும்.

கோயிலின் வெளியே வருகிறோம்! இங்கே மதுரைவீரன் அமர்ந்து பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றுகிறார். இவரை நினைத்து, அருகில் இருக்கும் ஆலமரத்தில் தொட்டில் கட்டி “அப்பா மதுரை வீரா! என் வீட்டில் தவழ ஒரு குழந்தையைக் கொடு” என்று வேண்ட, குழந்தை பாக்கியம் கிட்டும். சில சமயம், சில குழந்தைகள் காத்து, கருப்பு, திருஷ்டி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, நிலைகொள்ளாமல் அழும். இந்த மதுரை வீரனை வழிபட்டுச் சென்றால் அப்படிப்பட்ட பாதிப்புகள் குழந்தைகளை அண்டாது என்ற நம்பிக்கை இங்கிருக்கும் மக்களிடம் அதிகமாக நிலவுகிறது. இங்கு அளிக்கப்படும் பிரசாதமும் விநோதமாக இருக்கிறது! வைத்தீச்வரன் கோயிலில், உடல் நலத்திற்கு மண் உருண்டைகள் கொடுப்பது போல் இங்கும் ஆலமரத்தடி மண் பிரசாதம் கிடைக்கிறது. இதுவும் நோய்களைத் தீர்க்குமாம்.

அருணகிரிநாதர் வந்து திருப்புகழ் பாடிய ஆலயம் இந்த ஆம்ரவனேஸ்வரர் திருத்தலம்! திருஞான சம்பந்தரும் இந்த ஆலயத்தில் வந்து பாடியிருக்கிறார். திருச்சி செல்லும் பக்தர்கள், இங்கும் சென்று ஸ்ரீஆம்ரவனேஸ்வரைத் தரிசித்து வரவேண்டும்!

About The Author