வயதென்ன (1)

கொட்டிய வெயிலில்
கும்மாளமாய்க்
குளித்துவிட்டு வந்து
கவர்ச்சி காட்டி அசையும்
பூமி மங்கைக்கு….

பொன்மஞ்சள் தாவணியை
விரல்
பட்டும் படாமலும்
மெல்ல உடுத்திவிட்டு…

தன்
கொல்லை வாசல் வழியே
செங்கை
அசைத்த வண்ணம்
வெளியேறிக்கொண்டிருந்தான்….

ஙஞணநமனமாய்த் தணிந்த
கசடதபறச் சூரியன்

அம் மதுர மாலையில்….
ஓர் ஓடைக்கரையில்
ஓடும் மீன்களை
ஒவ்வொன்றாய்க்
குசலம் விசாரித்த வண்ணம்
குந்தியிருந்தான் கவியொருவன்

அவன்
தலை முகட்டில்
வெண்மையின் ஆட்சி

முகத் திரையில்
சுருக்கத்தின் காட்சி

இதழ்களிலோ நல்ல
கொஞ்சுதமிழால் குழைத்தெடுத்த
ஓர் இளமைப் பாட்டு

ஆவலின் உந்துதலில்
எழுந்த ஓர் கேள்வி
தொண்டைக்குழிதாண்டி
என் மொத்தக் கழுத்தையும்
கெளுத்தி முள்ளாய்க் குத்த
அருகே சென்றேன்…
அவனிடம் கேட்டேன்

"கவிஞனே… கவிஞனே…
உன் வயதென்ன?"

நிமிடம் ஒன்று
நடந்து நடந்து
என்னை மட்டுமே
கடந்து போனது

அந்தக் கவிஞனோ
தன் இதழ்களின் குறுக்கே
கெட்டியாய் ஒரு
மௌனப் படுதாவையே
கட்டி வைத்திருந்தான்

காதில் விழவில்லையோ
என்ற கவலையில் கேட்டேன்
மீண்டும்…
என் குரல் மலரில்
சிறு முட்களையும் சேர்த்துக் கட்டி

"ஓ…..
கவிஞனே… கவிஞனே….
உன் வயதென்ன….?"

‘பச்சை மிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author