வாரணம் ஆயிரம் – இசை விமர்சனம்

மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் வரிசையில், ஹாரிஸ் ஜெயராஜ் கௌதம் மேனனுடன் கூட்டணி சேரும் திரைப்படம் ‘வாரணம் ஆயிரம்’. சூர்யா இரண்டு வேடங்களில் தோன்றுகிறார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பாடல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் சினிமா இசை வரலாற்றில் ஒரு புதுமையாக, பாடல் வெளியீட்டு விழாவிற்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே படத்தின் நான்கு பாடல்களை எஃப்.எம் வானொலி நிலையங்களுக்கு விற்றுவிட்டார்கள் சோனி பி.எம்.ஜி உரிமையாளர்கள். தீபாவளிக்கு திரைப்படம் வெளியாகிறது. சிம்ரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். தமிழ் சினிமாவிற்கு மீண்டும் வருக.

சரி.. திரைப்படத்தின் பாடல்களுக்கு வரலாம். இசைத்தட்டில் ஏழு பாடல்கள். ஒவ்வொன்றையும் வரிசையாய் கேட்போம்.

அடியே கொல்லுதே

‘உயிரின் உயிரே..’ பாடலை நினைவூட்டும் எலெக்ட்ரிக் கிடாரிங்குடன் பாடல் துவங்குகிறது. நல்லவேளையாக பாடல் முழுவதும் அதே வாசம் வீசவில்லை. பென்னி தயால் மற்றும் க்ருஷ் ஆண் குரல்கள். அமெரிக்காவில் இசை பயின்றிருக்கும்். க ஸ்ருதி ஹாஸனுக்கு மீண்டும் பாட வாய்ப்பு. இதற்கு முன் தமிழில் பாடியுள்ளாரா? ஆமாம், தேவர் மகன் மற்றும் ஹே ராம். ஏ.ஆர். ரகுமான் ஆரம்பித்து வைத்த பாடலின் முடிவில் சுருதி மாற்றும் கலையை இங்குஇசையமைப்பாளர் கையாண்டுள்ளார். எடுபடவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. பாடலை எங்கேயோ கேட்டது போன்ற ஓர் உணர்வுதான் முடிவில் ஏற்படுகிறது.

நெஞ்சுக்குள் பெய்திடும்

மெட்டை மட்டும் நம்பி, பின்னணி இசையை நம்பாது இசையமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். இவருடைய எத்தனை பாடல்கள் இவ்வகையைச் சேரும் என்று விரல் விட்டு எண்ணி விடலாம். மெட்டிற்கு ஜீவனூட்டுகிறது ஹரிஹரன் குரல். தேவனும் பிரசன்னாவும் அங்கங்கே கோரஸ் தருகிறார்கள். காதல் வயப்பட்ட சுகத்தில் பாடும் பாடல். பரவாயில்லை, மனதில் நிற்கிறது!

ஏத்தி ஏத்தி

பென்னி தயால், நரேஷ் ஐயர் மற்றும் ஸோலார் சாய் கூட்டாகப் பாடும் பாடல். இளைஞர்களின் சேட்டைகளைச் சொல்லும் பாடல். ராப் இல்லாது எப்படி?! வேகமான மெட்டும், பின்னே வரும் பீட்ஸும் இளசுகளை சுலபமாகக் கவர்ந்துவிடும். மற்றபடி வேறொன்றும் சிறப்பம்சம் இல்லை.

முந்தினம் பார்த்தேனே

(இரண்டில் ஒரு) சூர்யாவின் பெயர் கிருஷ்ணன் என்று சொல்லிக்கொண்டு சூர்யாவின் பேச்சில் ஆரம்பிக்கிறது பாடல். மீண்டும் கிடார்.. மென்மையாகக் கையாண்டிருக்கிறார். காதல் டூயட். நரேஷ் ஐயரின் குரல் தேனாக இனிக்கிறது. சீக்கிரம் ஸேக்ஸும் சேர்ந்து கொள்ளஸ அருமையோ அருமை. ப்ரஷாந்தினியின் (12பி-ல் வரும் ’ஒரு புன்னகைப் பூவே’ – நினைவிருக்கிறதா?) குரலை மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர். பாடலின் முடிவில் மௌத் ஆர்கனின் அற்புத உபயோகிப்பு செவிக்கு ஆனந்தம். இசைத்தட்டின் சிறந்த பாடல்.

ஓ! ஷாந்தி! ஷாந்தி

மென்மையாக “நீயின்றி நானும் இல்லை” என்று ஆரம்பித்து, ஆரவாரத்துடன் “ஓ! ஷாந்தி” என்று க்ளிண்டன் குரலில் ஒலிக்கிறது இந்தப் பாடல். இடையில் எஸ்.பி.பி.சரணின் இனிய குரல் இன்பம். ஆறு நிமிடங்களுக்கு அர்த்தமில்லா நீண்ட பாடல்கள் இருக்கும் காலத்தில், மூன்றே நிமிடம் வரும் அழகான பாடல்.

அவ என்ன

தாரை தப்பட்டையுடன் கார்த்திக் குரலில் நம்மைத் தேடி வருகிறது “அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல” பாடல். காதல் விரகத்தில் காதலியைத் தேடும் பாடல். கிராமிய மணத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்து ஆரம்பித்து, எங்கேயோ குழம்பிவிட்டார்கள் போல. முன்னமே கேட்டது போலவே இருந்தும் பாடல் தேறிவிடுகிறது! பெர்குஷனை மிக நேர்த்தியாக உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு இடத்திலும் காதுகளை அடைக்கவில்லை. கார்த்திக் தன் குரலிலேயே ஏக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார். சபாஷ்! நடுவில் வரும் ஒபெரா கோரஸ் குரலும் கைகொடுக்கிறது.

அணல் மேலே

இம்முறை காதலி காதலனை நினைத்து ஏங்கிப் பாடும் பாடல். வெகு நாட்களுக்குப் பிறகு சுதா ரகுநாதன் மீண்டும் சினிமாவில் பாடியிருக்கிறார், இம்முறை ஹாரிஸ் ஜெயராஜ் இசையில். மெலடி ஒன்றை அமைப்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். என்னை என்ன செய்தாய் (இவன்) பாடலில் இருந்த கர்னாடக சங்கீத சாயல்கள் எதுவும் இல்லை. வயலினையும் மேற்கத்திய பாணியிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஏழு பாடல்களில், ஆறு பாடல்களில் காதல். கணக்குப் போட்டுப் பார்த்தால் மூன்று அல்லது நான்கு பாடல்கள் மனதில் நிற்கின்றன. படத்தில் வரும் காட்சிகள் பாடல்களின் மதிப்பைக் கூட்டுகின்றனவா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

About The Author

1 Comment

Comments are closed.